அத்தியாயம் 23
யோபுவின் வார்த்தைகள் 
 
1 யோபு மறுமொழியாக:   
2 “இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரட்டுத்தனமாக எண்ணப்படுகிறது;  
என் தவிப்பைவிட என் வாதை கடினமானது.   
3 நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்;  
அப்பொழுது நான் அவர் இருக்கைக்கு முன்பாக வந்து சேர்ந்து,   
4 என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாக வைத்து,  
காரியத்தை நிரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்.   
5 அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து,  
அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன்.   
6 அவர் தம்முடைய மகா வல்லமையினால் என்னுடன் வழக்காடுவாரோ?  
அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார்.   
7 அங்கே சன்மார்க்கன் அவருடன் வழக்காடலாம்;  
அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் விலக்கிக் காப்பாற்றிக்கொள்வேன்.   
8 இதோ, நான் முன்னேபோனாலும் அவர் இல்லை;  
பின்னேபோனாலும் அவரைக் காணவில்லை.   
9 இடதுபுறத்தில் அவர் செயல்பட்டும் அவரைப் பார்க்கவில்லை;  
வலது புறத்திலும் நான் அவரைக் பார்க்காமலிருக்க மறைந்திருக்கிறார்.   
10 ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்;  
அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.   
11 என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது;  
அவருடைய கட்டளையை விட்டு நான் விலகாமல் அதைக் கைக்கொண்டேன்.   
12 அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை;  
அவருடைய வாயின் வார்த்தைகளை  
எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாகக் காத்துக்கொண்டேன்.   
13 அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்;  
அவரைத் திருப்பத்தக்கவர் யார்?  
அவருடைய விருப்பத்தின்படியெல்லாம் செய்வார்.   
14 எனக்கு திட்டமிட்டிருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்;  
இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.   
15 ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்;  
நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன்.   
16 தேவன் என் இருதயத்தை சோர்வடையச் செய்தார்;  
சர்வவல்லமையுள்ள தேவன் என்னைக் கலங்கச் செய்தார்.   
17 இருள் வராததற்கு முன்னே நான் அழிக்கப்படாமலும்,  
இருளை அவர் எனக்கு மறைக்காமலும் போனதினால் இப்படியிருக்கிறேன்.