அத்தியாயம் 36
1 பின்னும் எலிகூ:   
2 “நான் பேசிமுடியும்வரை சற்றேபொறும்;  
இன்னும் தேவனின் சார்பாக நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக் காண்பிப்பேன்.   
3 நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து,  
என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கச்செய்வேன்.   
4 மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யில்லாமல் இருக்கும்;  
உம்முடன் பேசுகிறவன் அறிவில் தேறினவன்.   
5 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்;  
மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர்.   
6 அவர் துன்மார்க்கரைப் பிழைக்க விடாதிருக்கிறார்;  
சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார்.   
7 அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல்,  
அவர்களை ராஜாக்களுடன் சிங்காசனத்தில் ஏறவும்,  
உயர்ந்த இடத்தில் என்றைக்கும் அமர்ந்திருக்கவும் செய்கிறார்.   
8 அவர்கள் விலங்குகள் போடப்பட்டு,  
உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும்,   
9 அவர், அவர்களுடைய செயல்களையும்,  
அதிகமான அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி,   
10 அக்கிரமத்தைவிட்டுத் திரும்பும்படி அவர்கள் காது கேட்க கடிந்துகொள்ளுகிறார்.   
11 அவர்கள் அடங்கி அவரை ஆராதித்தால்,  
தங்கள் நாட்களை நன்மையாகவும்,  
தங்கள் வருடங்களைச் செழிப்பான வாழ்வாகவும் போக்குவார்கள்.   
12 அடங்கவில்லை என்றால் பட்டயத்திற்கு இரையாகி,  
ஞானம் அடையாமல் இறந்துபோவார்கள்.   
13 மாயமுள்ள இருதயத்தார் கோபத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்;  
அவர்களை அவர் கட்டிவைக்கும்போதும் தேவனைக் கெஞ்சிக் கூப்பிடுவதில்லை.   
14 அவர்கள் இளவயதிலே இறந்துபோவார்கள்;  
இழிவானவர்களுக்குள்ளே அவர்கள் இறப்பார்கள்.   
15 சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு விலக்கி,  
அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கும்போது அவர்கள் செவியைத் திறக்கிறார்.   
16 அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்திலிருந்து விலக்கி,  
இடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்;  
உம்முடைய உணவுப்பந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும்.   
17 ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப் பார்ப்பீர்;  
நியாயமும் நீதியும் உம்மை ஆதரிக்கும்.   
18 கடுங்கோபம் உண்டாயிருக்கிறதினால்  
அவர் உம்மை ஒரு அடியினால் அழித்துவிடாமலிருக்க எச்சரிக்கையாயிரும்;  
அப்பொழுது மீட்கும் பொருளை அதிகமாகக் கொடுத்தாலும் அதற்கு நீர் தப்பமாட்டீர்.   
19 உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ?  
உம்முடைய பொன்னையும், பூரண பராக்கிரமத்தையும் அவர் மதிக்கமாட்டாரே.   
20 மக்கள் தங்கள் இடத்தைவிட்டு அழிந்துபோகச்செய்கிற இரவை விரும்பாதிரும்.   
21 பாவத்தைத் திரும்பவும் செய்யாமல் எச்சரிக்கையாயிரும்;  
உபத்திரவத்தைவிட அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டீரே.   
22 இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்;  
அவரைப் போல் போதிக்கிறவர் யார்?   
23 அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தகுந்தவன் யார்?  
நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்?   
24 மனிதர் நோக்கிப்பார்க்கிற அவருடைய செயல்களை நீர் மகிமைப்படுத்த நினையும்.   
25 எல்லா மனிதரும் அதைக் காண்கிறார்களே;  
தூரத்திலிருந்து அது மனிதருக்கு வெளிப்படுகிறது.   
26 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்;  
நாம் அவரை அறிய முடியாது;  
அவருடைய வருடங்களின் தொகை எண்ணமுடியாதது.   
27 அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார்;  
அவைகள் மேகத்திலிருந்து மழையாக பொழிகிறது.   
28 அதை மேகங்கள் பெய்து, மனிதர்கள் மேல் அதிகமாகப் பொழிகிறது.   
29 மேகங்கள் பரவுகிறதையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ?   
30 இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை பரப்புகிறார்;  
சமுத்திரத்தை இருளால் மூடுகிறார்.   
31 அவைகளால் மக்களை தண்டிக்கிறவரும்,  
ஆகாரம்கொடுத்து காப்பாற்றுகிறவருமாயிருக்கிறார்.   
32 அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி,  
அது எவைகளையெல்லாம் அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார்.   
33 அதினால், அவர் செய்ய நினைக்கிறதையும்,  
புயல் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் தெரியப்படுத்தும்.