அத்தியாயம் 5
1 “இப்போது கூப்பிடும், உமக்கு பதில் கொடுப்பவர் உண்டோ என்று பார்ப்போம்?  
பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்?   
2 கோபம் மூடனைக் கொல்லும்;  
பொறாமை புத்தியில்லாதவனை அழிக்கும்.   
3 மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு  
உடனே அவனுடைய குடியிருக்கும் இடத்தைச் சபித்தேன்.   
4 அவனுடைய பிள்ளைகள் காப்பாற்றுவதற்குத் தூரமாகி,  
காப்பாற்றுவாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்.   
5 பசித்தவன் அவனுடைய விளைச்சலை முட்செடிகளுக்குள் இருந்து பறித்துச் சாப்பிட்டான்;  
பேராசைக்காரன் அவனுடைய செல்வத்தை விழுங்கினான்.   
6 தீமை புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை;  
வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை.   
7 தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல,  
மனிதன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான்.   
8 ஆனாலும் நான் தேவனை நாடி,  
என் நியாயத்தை தேவனிடத்தில் ஒப்படைப்பேன்.   
9 ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத  
அதிசயங்களையும் அவர் செய்கிறார்.   
10 தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து,  
துக்கிக்கிறவர்களை காப்பாற்றி உயர்த்துகிறார்.   
11 அவர் பூமியின்மேல் மழையை பெய்யவைத்து,  
வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார்.   
12 தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முழுவதும் செய்துமுடிக்காமல் இருக்க,  
அவர்களுடைய திட்டங்களை அவர் பொய்யாக்குகிறார்.   
13 அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்;  
தந்திரக்காரரின் ஆலோசனை கட்டப்படும்.   
14 அவர்கள் பகற்காலத்திலே இருளுக்குள்ளாகி,  
மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோல தடவி அலைகிறார்கள்.   
15 ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்திற்கும்,  
பெலவானின் கைக்கும் தடுத்து காப்பாற்றுகிறார்.   
16 அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு;  
தீமையானது தன் வாயை மூடும்.   
17 இதோ, தேவன் தண்டிக்கிற மனிதன் பாக்கியவான்;  
ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.   
18 அவர் காயப்படுத்திக் காயம் கட்டுகிறார்;  
அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.   
19 ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை விலக்கிக்காப்பார்;  
ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.   
20 பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்திற்கும்,  
போரிலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கிக்காப்பார்.   
21 நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்;  
அழிவு வரும்போதும் பயப்படாமலிருப்பீர்.   
22 அழிவையும் பஞ்சத்தையும் பார்த்து சிரிப்பீர்கள்;  
காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்கள்.   
23 வெளியின் கற்களுடனும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்;  
வெளியின் மிருகங்களும் உம்முடன் சமாதானமாயிருக்கும்.   
24 உம்முடைய குடியிருப்பு சமாதானத்துடன் இருக்கக் காண்பீர்;  
உம்முடைய குடியிருக்கும் இடத்தை விசாரிக்கும்போது  
குறைவைக் காணமாட்டீர்.   
25 உம்முடைய சந்ததி பெருகி,  
உம்முடைய சந்ததியார் பூமியின் தாவரங்களைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்.   
26 தானியம் ஏற்றகாலத்திலே களஞ்சியத்தில் சேருகிறதுபோல,  
முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.   
27 இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்;  
காரியம் இப்படியிருக்கிறது;  
இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும்” என்றான்.