அத்தியாயம் 7
1 பூமியிலே பாடுபட மனிதனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ?  
அவனுடைய நாட்கள் ஒரு கூலிக்காரன் நாட்களைப்போல் இருக்கிறதல்லவோ?   
2 ஒரு வேலையாள் நிழலை விரும்பி,  
ஒரு கூலிக்காரன் தன் கூலியை வரப்பார்த்திருக்கிறதுபோல,   
3 மாயையான மாதங்கள் என்னுடைய சொந்தமாகி,  
பிரச்சனையான இரவுகள் எனக்குக் குறிக்கப்பட்டது.   
4 நான் படுத்துக்கொள்ளுகிறபோது, எப்பொழுது எழுந்திருப்பேன்?  
இரவு எப்பொழுது முடியும் என்று சொல்லி,  
விடியும்வரை உருண்டு புரளுகிறதினால் எனக்குப் போதுமென்றுபோகிறது.   
5 என் உடல் பூச்சிகளினாலும்,  
அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது;  
என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று.   
6 என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாக ஓடுகிறது;  
அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும்.   
7 என் உயிர் காற்றைப்போலிருக்கிறதென்றும்,  
என் கண்கள் இனி நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும்.   
8 இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை;  
உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன்.   
9 மேகம் பறந்துபோகிறதுபோல,  
பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரமாட்டான்.   
10 இனி தன் வீட்டிற்குத் திரும்பமாட்டான்,  
அவனுடைய இடம் இனி அவனை அறியாது.   
11 ஆகையால் நான் என் வாயை அடக்காமல்,  
என் ஆவியின் வேதனையினால் பேசி,  
என் ஆத்துமாவின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.   
12 தேவரீர் என்மேல் காவல் வைக்கிறதற்கு நான் சமுத்திரமோ?  
நான் ஒரு திமிங்கிலமோ?   
13 என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும்,  
என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேன் என்றால்,   
14 நீர் கனவுகளால் என்னைக் கலங்கவைத்து,  
தரிசனங்களால் எனக்கு பயமுண்டாக்குகிறீர்.   
15 அதினால் என் ஆத்துமா,  
நெருக்கப்பட்டு சாகிறதையும்,  
என் எலும்புகளுடன் உயிரோடிருக்கிறதைவிட,  
மரணத்தையும் விரும்புகிறது.   
16 இப்படியிருக்கிறதை வெறுக்கிறேன்;  
எந்நாளும் உயிரோடிருக்க விரும்பமாட்டேன், என்னை விட்டுவிடும்;  
என் நாட்கள் மாயைதானே.   
17 மனிதனை நீர் ஒரு பொருட்டாக நினைக்கிறதற்கும்,  
அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும்,   
18 காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும்,  
நிமிடந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும்,  
அவன் எம்மாத்திரம்?   
19 நான் என் உமிழ்நீரை விழுங்காமல் எத்தனைகாலம் என்னை நெகிழாமலும்,  
என்னை விடாமலும் இருப்பீர்.   
20 மனிதர்களைக் காப்பவரே,  
பாவம்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன?  
நான் எனக்குத்தானே பாரமாயில்லாமல்,  
நீர் என்னை உமக்குக் குறியாக வைத்தது என்ன?   
21 என் மீறுதலை நீர் மன்னிக்காமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன?  
இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்;  
விடியற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இருக்கமாட்டேன்” என்றான்.