அத்தியாயம் 10
சாலொமோனின் நீதிமொழிகள் 
 
1 சாலொமோனின் நீதிமொழிகள்:  
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்;  
மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான்.   
2 அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது;  
நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.   
3 யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்;  
துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.   
4 சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்;  
சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.   
5 கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்;  
அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன்.   
6 நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்;  
கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.   
7 நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்;  
துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும்.   
8 இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்;  
அலப்புகிற மூடனோ விழுவான்.   
9 உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்;  
கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.   
10 கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்;  
அலப்புகிற மூடன் விழுவான்.   
11 நீதிமானுடைய வாய் ஜீவஊற்று;  
கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.   
12 பகை விரோதங்களை எழுப்பும்;  
அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும்.   
13 புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்;  
மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.   
14 ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்;  
மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.   
15 செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்;  
ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும்.   
16 நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும்,  
துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.   
17 புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்;  
திருத்துதலை வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.   
18 பகையை மறைக்கிறவன் பொய் உதடன்;  
புறங்கூறுகிறவன் மதிகேடன்.   
19 சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது;  
தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.   
20 நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி;  
துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.   
21 நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்;  
மூடரோ மதியீனத்தினால் சாவார்கள்.   
22 யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்;  
அதனோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார்.   
23 தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு;  
புத்திமானுக்கோ ஞானம் உண்டு.   
24 துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்;  
நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.   
25 சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்;  
நீதிமானோ நிரந்தர அஸ்திபாரமுள்ளவன்;   
26 பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ,  
அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.   
27 யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்;  
துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும்.   
28 நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்;  
துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும்.   
29 யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு,  
அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம்.   
30 நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை;  
துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை.   
31 நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்;  
மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும்.   
32 நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்;  
துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது.