அத்தியாயம் 16
தேவ ஞானமும் நீதியும் 
 
1 மனதின் யோசனைகள் மனிதனுடையது;  
நாவின் பதில் யெகோவாவால் வரும்.   
2 மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுடைய பார்வைக்குச் சுத்தமானவைகள்;  
யெகோவாவோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.   
3 உன்னுடைய செயல்களைக் யெகோவாவுக்கு ஒப்புவி;  
அப்பொழுது உன்னுடைய யோசனைகள் உறுதிப்படும்.   
4 யெகோவா எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்;  
தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.   
5 மனமேட்டிமையுள்ளவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்;  
கையோடு கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.   
6 கிருபையினாலும், சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்;  
யெகோவாவுக்குப் பயப்படுகிறதினால் மனிதர்கள் தீமையைவிட்டு விலகுவார்கள்.   
7 ஒருவனுடைய வழிகள் யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால்,  
அவனுடைய எதிரிகளும் சமாதானமாகும்படிச் செய்வார்.   
8 அநியாயமாக வந்த அதிக வருமானத்தைவிட,  
நியாயமாக வந்த கொஞ்ச வருமானமே நல்லது.   
9 மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்;  
அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ யெகோவா.   
10 ராஜாவின் உதடுகளில் இனிய வார்த்தை பிறக்கும்;  
நியாயத்தில் அவனுடைய வாய் தவறாது.   
11 நியாயமான நிறைகோலும் தராசும் யெகோவாவுடையது;  
பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.   
12 அநியாயம்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு;  
நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.   
13 நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்;  
நிதானமாகப் பேசுகிறவன்மேல் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.   
14 ராஜாவின் கோபம் மரணதூதர்களுக்குச் சமம்;  
ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.   
15 ராஜாவின் முகக்களையில் வாழ்வு உண்டு;  
அவனுடைய தயவு பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.   
16 பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது!  
வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை   
17 தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை;  
தன்னுடைய நடையைக் கவனித்திருக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்.   
18 அழிவுக்கு முன்னானது அகந்தை;  
விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.   
19 அகங்காரிகளோடு கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைவிட,  
சிறுமையானவர்களோடு மனத்தாழ்மையாக இருப்பது நலம்.   
20 விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்;  
யெகோவாவை நம்புகிறவன் பாக்கியவான்.   
21 இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி எனப்படுவான்;  
உதடுகளின் இனிமை கல்வியைப் பெருகச்செய்யும்.   
22 புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனர்களின் போதனை மதியீனமே.   
23 ஞானியின் இருதயம் அவனுடைய வாய்க்கு அறிவை ஊட்டும்;  
அவனுடைய உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.   
24 இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும்,  
எலும்புகளுக்கு மருந்தாகும்.   
25 மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு;  
அதின் முடிவோ மரண வழிகள்.   
26 உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான்;  
அவனுடைய வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.   
27 வீணான மகன் கிண்டிவிடுகிறான்;  
அவனுடைய உதடுகளில் இருப்பது எரிகிற அக்கினிபோன்றது.   
28 மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்;  
கோள் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான்.   
29 கொடுமையானவன் தன்னுடைய அயலானுக்கு நயங்காட்டி,  
அவனை நலமல்லாத வழியிலே நடக்கச்செய்கிறான்.   
30 அவனுடைய மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன்னுடைய கண்களை மூடி,  
தீமையைச் செய்யும்படி தன்னுடைய உதடுகளைக் கடிக்கிறான்.   
31 நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது  
மகிமையான கிரீடம்.   
32 பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்;  
பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன்.   
33 சீட்டு மடியிலே போடப்படும்;  
காரியத்தின் முடிவோ யெகோவாவால் வரும்.