அத்தியாயம் 25
மேலும் சாலொமோனின் நீதிமொழிகள் 
 
1 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனிதர்கள்  
பெயர்த்து எழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்:   
2 காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை;  
காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.   
3 வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும்,  
ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது.   
4 வெள்ளியிலிருந்து கழிவை நீக்கிவிடு,  
அப்பொழுது கொல்லனால் நல்ல பாத்திரம் வெளிப்படும்.   
5 ராஜாவின் முன்னின்று துன்மார்க்கர்களை நீக்கிவிடு,  
அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும்.   
6 ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே;  
பெரியோர்களுடைய இடத்தில் நிற்காதே.   
7 உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல;  
அவன் உன்னைப் பார்த்து:  
மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை.   
8 வழக்காடப் வேகமாகமாகப் போகாதே;  
முடிவிலே உன்னுடைய அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது,  
நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.   
9 நீ உன்னுடைய அயலானுடனேமட்டும் உன்னுடைய வழக்கைக்குறித்து வழக்காடு,  
மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.   
10 மற்றப்படி அதைக் கேட்கிறவன்  
உன்னை நிந்திப்பான்;  
உன்னுடைய அவமானம் உன்னைவிட்டு நீங்காது.   
11 ஏற்ற நேரத்தில் சொன்ன வார்த்தை  
வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமம்.   
12 கேட்கிற காதுக்கு, ஞானமாகக் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன்,  
பொற்கடுக்கனுக்கும் தங்க மோதிரத்திற்கும் சமம்.   
13 அறுவடைக்காலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ,  
அப்படியே உண்மையான தூதுவனும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்;  
அவன் தன்னுடைய எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரச்செய்வான்.   
14 கொடுப்பேன் என்று சொல்லியும் கொடுக்காமல் இருக்கிற வஞ்சகன்  
மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சமம்.   
15 நீண்ட பொறுமையினால்  
பிரபுவையும் சம்மதிக்கச்செய்யலாம்;  
இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.   
16 தேனைக் கண்டுபிடித்தால் அளவாகச் சாப்பிடு;  
அதிகமாக சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய்.   
17 உன்னுடைய அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடி,  
அடிக்கடி அவனுடைய வீட்டில் கால்வைக்காதே.   
18 பிறனுக்கு விரோதமாகப் பொய்சாட்சி சொல்லுகிற மனிதன்  
தண்டாயுதத்திற்கும் வாளிற்கும் கூர்மையான அம்பிற்கும் ஒப்பானவன்.   
19 ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது  
உடைந்த பல்லுக்கும் மூட்டு விலகிய காலுக்கும் சமம்.   
20 மனதுக்கமுள்ளவனுக்குப் பாடல்களைப் பாடுகிறவன்,  
குளிர்காலத்தில் ஆடையை களைகிறவனைப்போலவும்,  
வெடியுப்பின்மேல் ஊற்றிய காடியைப்போலவும் இருப்பான்.   
21 உன்னுடைய எதிரிகள் பசியாக இருந்தால்,  
அவனுக்கு சாப்பிட உணவு கொடு;  
அவன் தாகமாக இருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு.   
22 அதினால் அவனை வெட்கப்படுத்துவாய்;  
யெகோவா உனக்குப் பலனளிப்பார்.   
23 வடகாற்று மழையையும்,  
புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.   
24 சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட,  
வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.   
25 தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி  
தாகம் மிகுந்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமம்.   
26 துன்மார்க்கர்களுக்கு முன்பாக  
நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன நீரூற்றுக்கும் ஒப்பாகும்.   
27 தேனை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல,  
தற்புகழை நாடுவதும் புகழல்ல.   
28 தன்னுடைய ஆவியை அடக்காத மனிதன்  
மதில் இடிந்த பாழான பட்டணம்போல இருக்கிறான்.