அத்தியாயம் 31
லேமுவேலிற்கு சொல்லப்பட்ட வசனங்கள் 
 
1 ராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்;  
அவனுடைய தாய் அவனுக்குப் போதித்த உபதேசம்:   
2 என் மகனே, என்னுடைய கர்ப்பத்தின் மகனே,  
என்னுடைய பொருத்தனைகளின் மகனே,   
3 பெண்களுக்கு உன்னுடைய பெலனையும்  
ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன்னுடைய வழிகளையும் கொடுக்காதே.   
4 திராட்சைரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல;  
லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல;  
மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.   
5 மதுபானம் குடித்தால் அவர்களுடைய நியாயப்பிரமாணத்தை மறந்து,  
சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.   
6 மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சைரசத்தையும் கொடுங்கள்;   
7 அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து,  
தன்னுடைய வருத்தத்தை அப்புறம் நினைக்காமல் இருக்கட்டும்.   
8 ஊமையனுக்காகவும் திக்கற்றவர்கள் எல்லோருடைய நியாயத்திற்காகவும்  
உன்னுடைய வாயைத் திற.   
9 உன்னுடைய வாயைத் திறந்து, நீதியாக நியாயம் தீர்த்து,  
சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயம் செய்.   
10 குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்?  
அவளுடைய விலை முத்துக்களைவிட உயர்ந்தது.   
11 அவளுடைய கணவனுடைய இருதயம் அவளை நம்பும்;  
அவனுடைய செல்வம் குறையாது.   
12 அவள் உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல,  
நன்மையையே செய்கிறாள்.   
13 ஆட்டு ரோமத்தையும் சணலையும் தேடி,  
தன்னுடைய கைகளினால் உற்சாகத்தோடு வேலைசெய்கிறாள்.   
14 அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்;  
தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள்.   
15 இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து,  
தன்னுடைய வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.   
16 ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்;  
தன்னுடைய கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சைத்தோட்டத்தை நாட்டுகிறாள்.   
17 தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு,  
தன்னுடைய கைகளைப் பலப்படுத்துகிறாள்.   
18 தன்னுடைய வியாபாரம் பயனுள்ளதென்று அறிந்திருக்கிறாள்;  
இரவிலே அவளுடைய விளக்கு அணையாமல் இருக்கும்.   
19 தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்;  
அவளுடைய விரல்கள் கதிரைப் பிடிக்கும்.   
20 சிறுமையானவர்களுக்குத் தன்னுடைய கையைத் திறந்து,  
ஏழைகளுக்குத் தன்னுடைய கரங்களை நீட்டுகிறாள்.   
21 தன்னுடைய வீட்டார் அனைவருக்கும் கம்பளி ஆடை இருக்கிறபடியால்,  
தன்னுடைய வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படமாட்டாள்.   
22 இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டாக்குகிறாள்;  
மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவளுடைய ஆடை.   
23 அவளுடைய கணவன் தேசத்தின் மூப்பர்களோடு நீதிமன்றங்களில் உட்கார்ந்திருக்கும்போது  
பெயர் பெற்றவனாக இருக்கிறான்.   
24 மெல்லிய புடவைகளை உண்டாக்கி விற்கிறாள்;  
கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.   
25 அவளுடைய உடை பலமும் அலங்காரமுமாக இருக்கிறது;  
வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள்.   
26 தன்னுடைய வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்;  
தயையுள்ள போதகம் அவளுடைய நாவின்மேல் இருக்கிறது.   
27 அவள் சோம்பலின் அப்பத்தை சாப்பிடாமல்,  
தன்னுடைய வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாக இருக்கிறாள்.   
28 அவளுடைய பிள்ளைகள் எழும்பி,  
அவளை பாக்கியவதி என்கிறார்கள்;  
அவளுடைய கணவன் அவளைப்பார்த்து:   
29 அநேகம் பெண்கள் குணசாலிகளாக இருந்தது உண்டு;  
நீயோ அவர்கள் எல்லோரையும்விட மேலானவள் என்று அவளைப் புகழுகிறான்.   
30 செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்,  
யெகோவாவுக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள்.   
31 அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்;  
அவளுடைய செயல்கள் வாசல்களில் அவளைப் புகழ்வதாக.