அத்தியாயம் 5
விபசாரத்திற்கு எதிரான எச்சரிக்கை 
 
1 என் மகனே, என்னுடைய ஞானத்தைக் கவனித்து,  
என்னுடைய புத்திக்கு உன்னுடைய செவியைச் சாய்;   
2 அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய்,  
உன்னுடைய உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.   
3 ஒழுங்கீனமானவளின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்;  
அவளுடைய வாய் எண்ணெயைவிட மிருதுவாக இருக்கும்.   
4 அவளுடைய செயல்களின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும்,  
இருபுறமும் கூர்மையுள்ள பட்டயம்போல் கூர்மையுமாக இருக்கும்.   
5 அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்;  
அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.   
6 நீ வாழ்வின் வழியைச் சிந்தித்துக்கொள்ளாதபடி,  
அவளுடைய நடைகள் மாறிமாறி அலையும்; அவைகளை அறியமுடியாது.   
7 ஆதலால் பிள்ளைகளே; இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்;  
என்னுடைய வாயின் வசனங்களைவிட்டு நீங்காமல் இருங்கள்.   
8 உன்னுடைய வழியை அவளுக்குத் தூரப்படுத்து;  
அவளுடைய வீட்டின் வாசலுக்கு அருகில் சேராதே.   
9 சேர்ந்தால் உன்னுடைய மேன்மையை அந்நியர்களுக்கும்,  
உன்னுடைய ஆயுளின் காலத்தைக் கொடூரமானவர்களுக்கும் கொடுத்துவிடுவாய்.   
10 அந்நியர்கள் உன்னுடைய செல்வத்தினால் திருப்தியடைவார்கள்;  
உன்னுடைய உழைப்பின் பலன் மற்றவர்களுடைய வீட்டில் சேரும்.   
11 முடிவிலே உன்னுடைய மாம்சமும் உன்னுடைய சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து:   
12 ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே,  
கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம் செய்ததே!   
13 என்னுடைய போதகரின் சொல்லை நான் கேட்காலும்,  
எனக்கு உபதேசம்செய்தவர்களுக்கு செவிகொடுக்காமலும் போனேனே!   
14 சபைக்குள்ளும் சங்கத்திற்குள்ளும் கொஞ்சம்குறைய  
எல்லாத் தீமைக்கும் உள்ளானேனே! என்று முறையிடுவாய்.   
15 உன்னுடைய கிணற்றிலுள்ள தண்ணீரையும்,  
உன்னுடைய ஊற்றில் ஊறுகிற நீரையும் குடி.   
16 உன்னுடைய ஊற்றுகள் வெளியிலும்  
உன்னுடைய வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.   
17 அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாக இல்லாமல்,  
உனக்கே உரியவைகளாக இருப்பதாக.   
18 உன்னுடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக;  
உன்னுடைய இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு.   
19 அவளே நேசிக்கப்படக்கூடிய பெண்மானும்,  
அழகான வரையாடும்போல இருப்பாளாக;  
அவளுடைய மார்புகளே எப்பொழுதும் உன்னைத் திருப்தியாக்கும்;  
அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிரு.   
20 என் மகனே, நீ ஒழுங்கீனமானவளின்மேல் மயங்கித் திரிந்து,  
அந்நிய பெண்ணின் மார்பைத் தழுவவேண்டியது என்ன?   
21 மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது;  
அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.   
22 துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்;  
தன்னுடைய பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.   
23 அவனுடைய புத்தியைக் கேட்காததினால் இறந்து,  
தன்னுடைய மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.