சங்கீதம் 10
1 யெகோவாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்?  
துன்பம் நேரிடுகிற நேரங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?   
2 துன்மார்க்கன் தன்னுடைய பெருமையினால்  
ஏழ்மையானவனை கொடூரமாகத் துன்பப்படுத்துகிறான்;  
அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.   
3 துன்மார்க்கன் தன்னுடைய உள்ளத்தின் ஆசையில் பெருமை பாராட்டுகிறான்,  
பொருளை அபகரிக்கிறவன் யெகோவாவைச் சபித்து அசட்டைசெய்கிறான்.   
4 துன்மார்க்கன் தன்னுடைய கர்வத்தினால் தேவனைத் தேடமாட்டான்;  
அவனுடைய நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே.   
5 அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்;  
உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாக இருக்கின்றன;  
தன்னுடைய எதிராளிகள் எல்லோர்மேலும் சீறுகிறான்.   
6 நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லை  
என்று தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.   
7 அவன் வாய் சபிப்பினாலும், கபடத்தினாலும்,  
கொடுமையினாலும், நிறைந்திருக்கிறது;  
அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.   
8 கிராமங்களின் மறைவான இடங்களிலே மறைந்திருந்து,  
மறைவான இடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்;  
திக்கற்றவர்களைப் பிடிக்க அவனுடைய கண்கள் நோக்கிக்கொண்டிருக்கின்றன.   
9 தன்னுடைய கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் மறைந்திருக்கிறான்;  
ஏழையைப் பிடிக்கப் மறைந்திருந்து, அவனைத் தன்னுடைய வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.   
10 திக்கற்றவர்கள் தன்னுடைய பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான்.   
11 தேவன் அதை மறந்தார் என்று அவர் தம்முடைய முகத்தை மறைத்து,  
எப்போதும் அதைக் காணமாட்டார் என்றும்;  
தன்னுடைய இருதயத்திலே சொல்லிகொள்ளுகிறான்.   
12 யெகோவாவே, எழுந்தருளும்;  
தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்;  
ஏழைகளை மறக்காமலிரும்.   
13 துன்மார்க்கன் தேவனை அசட்டைசெய்து,  
நீர் கேட்டு விசாரிப்பதில்லை;  
என்று தன்னுடைய இருதயத்தில் ஏன் சொல்லிக்கொள்ளவேண்டும்?   
14 அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும்,  
துக்கத்தையும் கவனித்திருக்கிறீரே;  
நீர் பதிலளிப்பீர்;  
ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்;  
திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.   
15 துன்மார்க்கனும் பொல்லாதவனுமாக இருக்கிறவனுடைய கையை முறித்துவிடும்;  
அவனுடைய துன்மார்க்கம் காணாமற்போகும்வரை அதைத் தேடி விசாரியும்.   
16 யெகோவா எல்லாக் காலங்களுக்கும் இராஜாவாக இருக்கிறார்;  
அந்நியமக்கள் அவருடைய தேசத்திலிருந்து அழிந்து போவார்கள்.   
17 யெகோவாவே, ஏழைகளுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்;  
அவர்கள் இருதயத்தை உறுதிப்படுத்துவீர்.   
18 மண்ணான மனிதன் இனிப் பலவந்தம்செய்யத் தொடராமல்,  
தேவனே நீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும்  
ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய  
உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளுவீர்.