சங்கீதம் 108
தாவீது பாடிய பாடல். 
 
1 தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது;  
நான் இன்னிசையால் புகழ்ந்து பாடுவேன்;  
என்னுடைய மகிமையும் பாடும்.   
2 வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்,  
நான் அதிகாலையில் விழிப்பேன்.   
3 யெகோவாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்;  
தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.   
4 உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும்,  
உமது சத்தியம் மேகமண்டலங்கள் வரையிலும் எட்டுகிறது.   
5 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்;  
உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.   
6 உமது பிரியர்கள் விடுவிக்கப்படுவதற்காக,  
உமது வலதுகரத்தினால் இரட்சித்து,  
எங்களுடைய ஜெபத்தைக் கேட்டருளும்.   
7 தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு சொன்னார்,  
ஆகையால் சந்தோஷப்படுவேன்;  
சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.   
8 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது;  
எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன்,  
யூதா என்னுடைய செங்கோல்.   
9 மோவாப் என்னுடைய பாதம் கழுவும் பாத்திரம்;  
ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிவேன்;  
பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன்.   
10 வலுவான நகரத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்?  
ஏதோம்வரை எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?   
11 எங்களுடைய சேனைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீரல்லவோ?  
எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீரல்லவோ?   
12 இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்;  
மனிதனுடைய உதவி வீண்.   
13 தேவனாலே வெற்றி பெறுவோம்;  
அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார்.