சங்கீதம் 12
செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். 
 
1 காப்பாற்றும் யெகோவாவே, பக்தியுள்ளவன் அழிந்துபோகிறான்;  
உண்மையுள்ளவர்கள் மனிதர்களில் இல்லை.   
2 அவரவர் தங்களுடைய நண்பர்களோடு பொய் பேசுகிறார்கள்;  
கவர்ச்சியான உதடுகளால் இருமனதாகப் பேசுகிறார்கள்.   
3 வஞ்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும்,  
பெருமைகளைப் பேசுகிற நாவையும் யெகோவா அறுத்துப்போடுவாராக.   
4 அவர்கள், எங்களுடைய நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை;  
யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.   
5 ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து,  
அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.   
6 யெகோவாவுடைய சொற்கள் மண் உலையிலே ஏழுதரம் உருக்கி,  
புடமிடப்பட்ட வெள்ளிக்கு இணையான  
சுத்தசொற்களாக இருக்கின்றன.   
7 யெகோவாவே, நீர் எங்களைக் காப்பாற்றி,  
எங்களை என்றைக்கும் இந்த தலைமுறையாரிடமிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவீர்.   
8 மனிதர்களில் தீயவர்கள் உயர்ந்திருக்கும்போது,  
துன்மார்க்கர்கள் எங்கும் சுற்றித்திரிவார்கள்.