சங்கீதம் 130
ஆரோகண பாடல். 
 
1 யெகோவாவே, உபத்திரவத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.   
2 ஆண்டவரே, என்னுடைய சத்தத்தைக் கேளும்;  
என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்கு  
உமது செவிகள் கவனித்திருக்கட்டும்.   
3 யெகோவாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால்,  
யார் நிலைநிற்பான், ஆண்டவரே.   
4 உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.   
5 யெகோவாவுக்குக் காத்திருக்கிறேன்; என்னுடைய ஆத்துமா காத்திருக்கிறது;  
அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.   
6 எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்திற்குக் காத்திருக்கிற காவலர்களைவிட  
அதிகமாக என்னுடைய ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.   
7 இஸ்ரவேல் யெகோவாவை நம்பியிருப்பதாக;  
கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.   
8 அவர் இஸ்ரவேலை அதின் எல்லா அக்கிரமங்களிலிருந்தும் மீட்டுக்கொள்வார்.