சங்கீதம் 138
தாவீதின் பாடல். 
 
1 உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்;  
தெய்வங்களுக்கு முன்பாக உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.   
2 உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து,  
உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது பெயரைத் துதிப்பேன்;  
உமது எல்லாப் புகழைவிட உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.   
3 நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்திரவு அருளினீர்;  
என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்;   
4 யெகோவாவே, பூமியின் ராஜாக்களெல்லோரும்  
உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.   
5 யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால்,  
அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள்.   
6 யெகோவா உயர்ந்தவராக இருந்தும்,  
தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்;  
மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.   
7 நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்;  
என்னுடைய எதிரிகளின் கோபத்திற்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்;  
உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்.   
8 யெகோவா எனக்காக யாவையும் செய்து முடிப்பார்;  
யெகோவாவே, உமது கிருபை என்றுமுள்ளது;  
உமது கரத்தின் செயல்களைத் தள்ளிவிடாமலிரும்.