சங்கீதம் 19
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். 
 
1 வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன,  
ஆகாய விரிவு அவருடைய கைகளின் செயல்களை அறிவிக்கிறது.   
2 பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது,  
இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.   
3 அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை,  
அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.   
4 ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும்,  
அவைகளின் வசனங்கள் உலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன;  
அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை உண்டாக்கினார்.   
5 அது தன்னுடைய மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது,  
பெலசாலியைப்போல் தன்னுடைய பாதையில் ஓட மகிழ்ச்சியாக இருக்கிறது.   
6 அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு,  
அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது;  
அதின் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை.   
7 யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும்,  
ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது;  
யெகோவாவுடைய சாட்சி முழுமையானதும்,  
பேதையை ஞானியாக்குகிறதுமாக இருக்கிறது.   
8 யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும்,  
இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறவைகளுமாக இருக்கிறது;  
யெகோவாவுடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாக இருக்கிறது.   
9 யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும்,  
என்றைக்கும் நிலைக்கிறதுமாக இருக்கிறது;  
யெகோவாவுடைய நியாயங்கள் உண்மையும்,  
அவைகள் அனைத்தும் நீதியுமாக இருக்கின்றன.   
10 அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும்,  
தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தூய்மையான தேனிலும் மதுரமுள்ளவையுமாக இருக்கின்றன.   
11 அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்;  
அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.   
12 தன்னுடைய பிழைகளை உணருகிறவன் யார்?  
மறைந்து கிடக்கும் பிழைகளிலிருந்து என்னைச் சுத்திகரியும்.   
13 துணிகரமான பாவங்களுக்கும் உமது அடியேனை விலக்கிக் காத்துகொள்ளும்;  
அவைகள் என்னை ஆண்டுகொள்ள விடாமலிரும்;  
அப்பொழுது நான் உத்தமனாகி,  
பெரும்பாவத்திற்கு நீங்கலாக இருப்பேன்.   
14 என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே,  
என் வாயின் வார்த்தைகளும்,  
என் இருதயத்தின் தியானமும்,  
உமது சமுகத்திற்குப் பிரியமாக இருப்பதாக.