சங்கீதம் 55
தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. 
 
1 தேவனே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டருளும்;  
என்னுடைய விண்ணப்பத்திற்கு மறைந்துகொள்ளாதிரும்.   
2 எனக்குச் செவிகொடுத்து, பதில் அருளிச்செய்யும்;  
எதிரியினுடைய கூக்குரலினிமித்தமும்,  
துன்மார்க்கர்கள் செய்யும் பிரச்சனைகளினிமித்தமும் என்னுடைய தியானத்தில் முறையிடுகிறேன்.   
3 அவர்கள் என்மேல் பழிசுமத்தி, கோபங்கொண்டு,  
என்னைப் பகைக்கிறார்கள்.   
4 என்னுடைய இருதயம் எனக்குள் வேதனைப்படுகிறது;  
மரணபயம் என்மேல் விழுந்தது.   
5 பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; திகில் என்னை மூடியது.   
6 அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் இறக்கைகள் இருந்தால்,  
நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்.   
7 நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்திரத்தில் தங்கியிருப்பேன். (சேலா)   
8 பெருங்காற்றுக்கும் புயலுக்கும் தப்ப விரைந்து செல்வேன் என்றேன்.   
9 ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் மொழியை பிரிந்துபோகச்செய்யும்;  
கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்;   
10 அவைகள் இரவும்பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது;  
அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது;   
11 கேடுபாடுகள் அதின் நடுவில் இருக்கிறது;  
கொடுமையும் கபடும் அதின் வீதியைவிட்டு விலகிப்போகிறதில்லை.   
12 என்னைக் கடிந்துகொண்டவன் எதிரி அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்;  
எனக்கு விரோதமாகப் பெருமை பாராட்டினவன் என்னுடைய பகைஞன் அல்ல,  
அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.   
13 எனக்குச் சமமான மனிதனும், என்னுடைய வழிகாட்டியும், என்னுடைய தோழனுமாகிய நீயே அவன்.   
14 நாம் ஒன்றாக, இன்பமான ஆலோசனைசெய்து,  
கூட்டத்தோடு தேவாலயத்திற்குப் போனோம்.   
15 மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக;  
அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்குவார்களாக;  
அவர்கள் தங்குமிடங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் தீங்கு இருக்கிறது.   
16 நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்;  
யெகோவா என்னை காப்பாற்றுவார்.   
17 காலை மாலை மத்தியான வேளைகளிலும் நான் தியானம்செய்து முறையிடுவேன்;  
அவர் என்னுடைய சத்தத்தைக் கேட்பார்.   
18 திரள் கூட்டமாகக் கூடி என்னோடு எதிர்த்தார்கள்;  
அவரோ எனக்கு ஏற்பட்ட போரை நீக்கி,  
என்னுடைய ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார்.   
19 ஆரம்பம்முதலாக இருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்;  
அவர்களுக்கு மாறுதல்கள் ஏற்படாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். (சேலா)   
20 அவன் தன்னோடு சமாதானமாக இருந்தவர்களுக்கு விரோதமாகத்  
தன்னுடைய கையை நீட்டி  
தன்னுடைய உடன்படிக்கையை மீறி நடந்தான்.   
21 அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள்,  
அவனுடைய இருதயமோ யுத்தம்;  
அவனுடைய வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள்.  
ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.   
22 யெகோவாமேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்;  
நீதிமானை ஒருபோதும் தள்ளாடவிடமாட்டார்.   
23 தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கச்செய்வீர்;  
இரத்தப்பிரியர்களும் சூதுள்ள மனிதர்களும் தங்களுடைய ஆயுளின் நாட்களில் பாதிவரைகூட பிழைத்திருக்கமாட்டார்கள்;  
நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.