சங்கீதம் 67
இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஒரு துதிப் பாடல். 
 
1 தேவனே, பூமியில் உம்முடைய வழியும்,  
எல்லா தேசங்களுக்குள்ளும் உம்முடைய இரட்சிப்பும் விளங்கும்படியாக,   
2 தேவனே நீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து,  
உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும். (சேலா)   
3 தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக;  
எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.   
4 தேவனே நீர் மக்களை நிதானமாக நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள மக்களை நடத்துவீர்;  
ஆதலால் தேசங்கள் சந்தோஷித்து,  
கெம்பீரத்தோடு மகிழக்கடவர்கள். (சேலா)   
5 தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக;  
எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.   
6 பூமி தன்னுடைய பலனைத் தரும், தேவனாகிய எங்களுடைய தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.   
7 தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்;  
பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.