சங்கீதம் 77
எதுதூன் என்னும் இராகத்தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஆசாபின் பாடல். 
 
1 நான் தேவனை நோக்கி என்னுடைய சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன்,  
என்னுடைய சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன்,  
அவர் எனக்குச் செவிகொடுத்தார்.   
2 என்னுடைய ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்;  
இரவிலும் என்னுடைய கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது;  
என்னுடைய ஆத்துமா ஆறுதலடையாமல்போனது.   
3 நான் தேவனை நினைத்தபோது அலறினேன்;  
நான் தியானிக்கும்போது என்னுடைய ஆவி சோர்ந்துபோனது. (சேலா)   
4 நான் தூங்காதபடி என்னுடைய கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்;  
நான் பேசமுடியாதபடி கலக்கமடைகிறேன்.   
5 ஆரம்பநாட்களையும், ஆரம்பகாலத்து வருடங்களையும் சிந்திக்கிறேன்.   
6 இரவுநேரத்தில் என்னுடைய பாடலை நான் நினைத்து,  
என்னுடைய இருதயத்தோடு பேசிக்கொள்ளுகிறேன்;  
என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.   
7 ஆண்டவர் நித்தியகாலமாகத் தள்ளிவிடுவாரோ?  
இனி ஒருபோதும் தயை செய்யாமலிருப்பாரோ?   
8 அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போனதோ?  
வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோனதோ?   
9 தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ?  
கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா)   
10 அப்பொழுது நான்: இது என்னுடைய பலவீனம்;  
ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருடங்களை நினைவுகூருவேன்.   
11 யெகோவாவுடைய செயல்களை நினைவுகூருவேன்,  
உம்முடைய ஆரம்பகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்;   
12 உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து,  
உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.   
13 தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது;  
நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்?   
14 அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே;  
மக்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கச்செய்தீர்.   
15 யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் சந்ததியாகிய உம்முடைய மக்களை,  
உமது வல்லமையினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா)   
16 தண்ணீர்கள் உம்மைக் கண்டது; தேவனே,  
தண்ணீர்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது;  
ஆழங்களும் கலங்கினது.   
17 மேகங்கள் தண்ணீர்களைப் பொழிந்தது;  
ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது;  
உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது.   
18 உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது;  
மின்னல்கள் உலகை பிரகாசிக்கச் செய்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது.   
19 உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது;  
உமது காலடிகள் தெரியப்படாமல்போனது.   
20 மோசே ஆரோன் என்பவர்களின் கையால்,  
உமது மக்களை ஒரு ஆட்டு மந்தையைப்போல வழிநடத்தினீர்.