சங்கீதம் 85
கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். 
 
1 யெகோவாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து,  
யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.   
2 உமது மக்களின் அக்கிரமத்தை மன்னித்து,  
அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா)   
3 உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு,  
உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.   
4 எங்கள் இரட்சிப்பின் தேவனே,  
நீர் எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும்,  
எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறச்செய்யும்.   
5 என்றைக்கும் எங்கள்மேல் கோபமாக இருப்பீரோ?  
தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கச்செய்வீரோ?   
6 உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி  
நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?   
7 யெகோவாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து,  
உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.   
8 கர்த்தராகிய தேவன் சொல்வதைக் கேட்பேன்;  
அவர் தம்முடைய மக்களுக்கும்  
தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்;  
அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாமலிருப்பார்களாக.   
9 நம்முடைய தேசத்தில் மகிமை தங்கியிருக்கும்படி,  
அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.   
10 கிருபையும், சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும்,  
நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.   
11 சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும்,  
நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கும்.   
12 யெகோவா நன்மையானதைத் தருவார்;  
நம்முடைய தேசமும் தன்னுடைய பலனைக் கொடுக்கும்.   
13 நீதி அவருக்கு முன்னாகச் சென்று,  
அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.