அத்தியாயம் 8
1 ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போல் இருந்தீரானால்,  
நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்;  
என்னை நிந்திக்கவுமாட்டார்கள்.   
2 நான் உம்மைக் கூட்டிக்கொண்டு,  
என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவேன்;  
நீர் எனக்குப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சைரசத்தையும்,  
என் மாதுளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன்.   
3 அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கும்,  
அவருடைய வலதுகை என்னை அணைக்கும்.   
4 எருசலேமின் இளம்பெண்களே!  
எனக்குப் பிரியமானவளுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை  
நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும் எழுப்பாமலும் இருக்க  
உங்களுக்கு ஆணையிடுகிறேன்.  
அன்பு புதுப்பிக்கப்படுதல் 
 
மணவாளியின் தோழிகள்   
5 தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு  
வனாந்திரத்திலிருந்து வருகிற இவள் யார்?  
மணவாளி  
கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்;  
அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்;  
அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள்.   
6 நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும்,  
உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்;  
நேசம் மரணத்தைப்போல் வலிமையானது;  
நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது;  
அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது.   
7 திரளான தண்ணீர்கள் நேசத்தை அணைத்துவிட முடியாது,  
வெள்ளங்களும் அதைத் தணிக்கமுடியாது;  
ஒருவன் தன் வீட்டிலுள்ள சொத்துக்களையெல்லாம் நேசத்திற்காகக் கொடுத்தாலும்,  
அது முற்றிலும் அசட்டைசெய்யப்படும்.  
மணவாளியின் சகோதரன்    
8 நமக்கு ஒரு சிறிய சகோதரி உண்டு,  
அவளுக்கு மார்பகங்கள் இல்லை;  
நம்முடைய சகோதரியைக் கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?   
9 அவள் ஒரு மதிலானால்,  
அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்;  
அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.  
மணவாளி   
10 நான் மதில்தான்,  
என் மார்பகங்கள் கோபுரங்கள்;  
அவருடைய கண்களில் இரக்கம் பெறலானேன்.  
மணவாளன்   
11 பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சைத்தோட்டம் உண்டாயிருந்தது,  
அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக,  
ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசுகளைக் கொண்டுவரும்படி விட்டார்.   
12 என் திராட்சைத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது;  
சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும்,  
அதின் பழத்தைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும்.   
13 தோட்டங்களில் குடியிருக்கிறவளே!  
தோழர்கள் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்;  
நானும் அதைக் கேட்கட்டும்.  
மணவாளி   
14 என் நேசரே! விரைவாக வாரும்,  
கந்தவர்க்கங்களின் மலைகள்மேல் உள்ள  
வெளிமானுக்கும் மான் குட்டிக்கும் சமானமாக இரும்.