16
பவுல் சீலாவுடன் தீமோத்தேயு சேர்தல்
பவுல் தெர்பைக்கு வந்து, பின்பு லீஸ்திராவுக்குப் போனான். அங்கே தீமோத்தேயு என்னும் பெயருடைய ஒரு சீடன் இருந்தான். அவனுடைய தாய் விசுவாசியான ஒரு யூதப் பெண், ஆனால் அவனுடைய தகப்பனோ ஒரு கிரேக்கன். தீமோத்தேயு லீஸ்திராவிலும் இக்கோனியாவிலும் இருந்த விசுவாசிகளாலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான். பவுல் அந்தப் பயணத்திலே தீமோத்தேயுவையும் தன்னுடன் கூட்டிக்கொண்டுபோக விரும்பினான். ஆனால் அந்தப் பகுதியில் வாழ்ந்த யூதர்களின் நிமித்தம், அவனுக்கு விருத்தசேதனம் செய்வித்தான். ஏனெனில் அவர்கள் அனைவரும் அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்பதை அறிந்திருந்தார்கள். அவர்கள் பட்டணங்கள்தோறும் பிரயாணம் செய்து, எருசலேமிலிருந்த அப்போஸ்தலரும் சபைத்தலைவர்களும் எடுத்த தீர்மானங்களை, அங்குள்ளவர்கள் கைக்கொள்ளுவதற்காக அவர்களிடம் ஒப்படைத்தார்கள். இதனால் திருச்சபைகள் விசுவாசத்தில் பெலமடைந்து, நாள்தோறும் எண்ணிக்கையில் பெருகின.
மக்கெதோனியா மனிதனைக்குறித்த பவுலின் தரிசனம்
பவுலும் அவனுடைய கூட்டாளிகளும் பிரிகியா, கலாத்தியா நாடுகள் கடந்து பயணம் செய்தார்கள்; ஏனெனில் ஆசியா பகுதியிலே வார்த்தையை அறிவிக்காதவாறு பரிசுத்த ஆவியானவர் அவர்களைத் தடை பண்ணியிருந்தார். அவர்கள் மீசியாவின் எல்லைப் புறமாய் வந்தபோது, அவர்கள் பித்தினியாவுக்குப் போக முயற்சிசெய்தார்கள். ஆனால் இயேசுவின் ஆவியானவரோ அவர்களை அங்கேயும் செல்ல அனுமதிக்கவில்லை. எனவே அவர்கள் மீசியாவைக் கடந்து, துரோவா பட்டணத்திற்குச் சென்றார்கள். அந்த இரவிலே, பவுல் ஒரு தரிசனம் கண்டான். அதிலே மக்கெதோனியாவைச் சேர்ந்த ஒரு மனிதன் அவனைப் பார்த்து, “மக்கெதோனியாவுக்கு வந்து, எங்களுக்கு உதவிசெய்யும்” என்று கெஞ்சிக்கேட்டான். 10 பவுல் இந்த தரிசனத்தைக் கண்டபின்பு, நாங்கள் உடனே மக்கெதோனியாவுக்குப் போக ஆயத்தமானோம். ஏனெனில், இறைவன் அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க, எங்களை அழைத்தார் என்று நாங்கள் தீர்மானித்தோம்.
லீதியாள் மனந்திரும்புதல்
11 துரோவாவிலிருந்து நாங்கள் கப்பலில் புறப்பட்டு, நேரே சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாள் நெயாப்போலிக்குப் போனோம். 12 அங்கிருந்து ரோமருடைய குடியேற்ற இடமான பிலிப்பி பட்டணத்திற்குப் பயணமானோம். அது மக்கெதோனியா பகுதியின் தலைமைப் பட்டணமாக இருந்தது. நாங்கள் அங்கே பல நாட்கள் தங்கியிருந்தோம்.
13 ஓய்வுநாளிலே, நாங்கள் பட்டணத்துக்கு வெளியே ஆற்றங்கரைக்குப் போனோம். அங்கே மன்றாடுவதற்கான ஒரு இடம் இருக்குமென்று எதிர்ப்பார்த்து நாங்கள் உட்கார்ந்து, அங்கே கூடியிருந்த பெண்களுடன் பேசத் தொடங்கினோம். 14 நாங்கள் சொன்னதை லீதியாள் என்னும் பெயருடைய ஒரு பெண் கேட்டுக்கொண்டிருந்தாள். தியத்தீரா ஊரைச்சேர்ந்த அவள், செம்பட்டுத் துணி விற்கிறவள். அவள் இறைவனை வழிபட்டு வந்தாள். பவுலின் செய்தியை ஏற்றுக்கொள்வதற்கு கர்த்தர் அவளின் இருதயத்தைத் திறந்தார். 15 லிதியாளும் அவளுடைய குடும்பத்தார் அனைவரும் திருமுழுக்கு பெற்றபின், அவள் எங்களைத் தனது வீட்டுக்கு அழைத்தாள். “நான் கர்த்தரின் விசுவாசி என்று நீங்கள் எண்ணினால், நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து தங்குங்கள்” என்று சொல்லி, எங்களை வற்புறுத்தினாள்.
சிறையில் பவுலும் சீலாவும்
16 ஒருமுறை, நாங்கள் மன்றாடும் இடத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது, நாங்கள் ஒரு அடிமைப் பெண்ணைச் சந்தித்தோம். அவளிலே ஒரு தீய ஆவி இருந்தது. அவள் அந்த ஆவியைக் கொண்டு, எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னறிவித்தாள். அவள் இவ்வாறு குறிசொல்வதன் மூலம் தனது எஜமானர்களுக்குப் பெருந்தொகைப் பணத்தைச் சம்பாதித்துக் கொடுத்துக்கொண்டிருந்தாள். 17 இந்தப் பெண் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து, “இந்த மனிதர் மகா உன்னதமான இறைவனின் ஊழியர்கள்; இவர்கள் உங்களுக்கு இரட்சிக்கப்படுவதற்கான வழியை அறிவிக்கிறார்கள்” என்று சத்தமிடுவாள். 18 அவள் இப்படி பல நாட்களாய்ச் செய்துகொண்டிருந்தாள். கடைசியாக பவுல் மிகவும் சலிப்படைந்து, அந்த தீய ஆவியிடம், “இயேசுகிறிஸ்துவின் பெயரிலே நான் உனக்குக் கட்டளையிடுகிறேன், நீ இவளை விட்டு வெளியே வா!” என்றான். அந்த வினாடியே அந்தத் தீய ஆவி அவளைவிட்டு வெளியே வந்தது.
19 அந்த அடிமைப் பெண்ணுடைய எஜமானர், பணம் சம்பாதிக்கும் தங்கள் எதிர்பார்ப்பு போய்விட்டது என்று அறிந்தபோது, அவர்கள் பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைகூடும் இடத்தில் அதிகாரிகளிடம் இழுத்துக்கொண்டு வந்தார்கள். 20 அவர்கள் இவர்களை தலைமை நீதிபதிகளுக்கு முன்பாகக் கொண்டுவந்து, “இவர்கள் யூதர்கள், இந்த மனிதர் நமது பட்டணத்தில் குழப்பம் உண்டாக்குகிறார்கள், 21 ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவோ, நடைமுறைப்படுத்தவோ முடியாத, சட்டத்திற்கு முரணான முறைமைகளை இவர்கள் போதிக்கிறார்கள்” என்றார்கள்.
22 அப்பொழுது கூடியிருந்தவர்கள், பவுலையும் சீலாவையும் தாக்கத் தொடங்கினார்கள். தலைமை நீதிபதிகள் இவர்களுடைய உடைகளைக் கழற்றி, இவர்களை அடிக்கும்படி உத்தரவிட்டார்கள். 23 அவர்கள் சவுக்கினால் கடுமையாக அடித்தபின், சிறையில் போட்டார்கள். சிறைக்காவலனிடம், இவர்களைக் கவனமாய் காவல் செய்யும்படியும் உத்தரவிட்டார்கள். 24 இக்கட்டளைகளைப் பெற்றபோது, அந்தச் சிறைக்காவலன் இவர்களை உட்சிறையில் போட்டு, இவர்களுடைய கால்களை மர சங்கிலியினால் மாட்டிவைத்தான்.
25 கிட்டத்தட்ட நடு இரவில் பவுலும் சீலாவும் மன்றாடிக்கொண்டும், இறைவனுக்குப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருந்தார்கள். மற்ற சிறைக் கைதிகள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 26 திடீரென ஒரு பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. அதனால் அந்தச் சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசைந்தன. அப்பொழுது சிறைச்சாலைக் கதவுகள் எல்லாம் திறவுண்டன. சிறையிலிருந்த ஒவ்வொருவரையும் கட்டியிருந்த சங்கிலிகள் கழன்று விழுந்தன. 27 சிறைக்காவலன் எழுந்திருந்து, சிறைச்சாலைக் கதவுகள் திறந்து கிடந்ததைக் கண்டபோது, அவன் தன் வாளை உருவித், தற்கொலைசெய்ய முயன்றான். ஏனெனில், சிறைக் கைதிகள் தப்பியோடிவிட்டார்கள் என்று அவன் நினைத்தான். 28 ஆனால் பவுல் சத்தமிட்டு அவனிடம், “நீ உனக்குத் தீங்கு செய்யாதே! நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்” என்றான்.
29 அந்தச் சிறைக்காவலன் விளக்கைக் கொண்டுவரச்செய்து, உள்ளே விரைந்து ஓடினான். அவன் நடுங்கிக்கொண்டு பவுலுக்கும், சீலாவுக்கும் முன்பாக விழுந்தான். 30 அவன் அவர்களை வெளியே கொண்டுவந்து, “ஐயாமாரே, நான் இரட்சிக்கப்பட என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
31 அதற்கு அவர்கள், “கர்த்தராகிய இயேசுவை விசுவாசி, நீ இரட்சிக்கப்படுவாய். நீயும், உனது குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்றார்கள். 32 பின்பு அவர்கள் அவனுக்கும், அவனுடைய வீட்டிலிருந்த எல்லோருக்கும் கர்த்தருடைய வார்த்தையைச் சொன்னார்கள். 33 அந்த இரவு வேளையிலேயே அந்தச் சிறைக்காவலன் அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான்; பின்பு உடனே, அவனும் அவனுடைய குடும்பத்தார் யாவரும் திருமுழுக்குப் பெற்றார்கள். 34 அந்தச் சிறைக்காவலன் அவர்களைத் தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று, அவர்களுக்கு உணவு கொடுத்தான்; அவன் தானும், தன்னுடைய குடும்பத்தார் அனைவரும், இறைவனில் விசுவாசம் வைத்ததைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.
35 பொழுது விடிந்ததும், தலைமை நீதிபதிகள், “அவர்களை விட்டுவிடுங்கள்” என்ற உத்தரவுடன், அதிகாரிகளைச் சிறைக்காவலனிடம் அனுப்பினார்கள். 36 சிறைக்காவலன் பவுலிடம், “தலைமை நீதிபதிகள் உங்களை விடுதலையாக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார்கள். நீயும் சீலாவும் வெளியே சமாதானத்துடன் போங்கள்” என்றான்.
37 ஆனால் பவுல் அந்த அதிகாரிகளிடம்: “நாங்கள் ரோம குடிமக்களாய் இருந்தபோதும், எவ்விதக் குற்ற விசாரணையும் இல்லாமல், எங்களை பொதுமக்கள் முன்பாக அடித்துச் சிறையில் போட்டார்கள். இப்பொழுது இரகசியமாய் அவர்கள் எங்களை விடுதலையாக்கப் போகிறார்களோ? இல்லை! அவர்களே வந்து எங்களை வெளியே கூட்டிக்கொண்டுபோய் விடட்டும்” என்றான்.
38 அந்த அதிகாரிகள், இதைத் தலைமை நீதிபதிகளுக்கு அறிவித்தார்கள். பவுலும் சீலாவும் ரோம குடிமக்கள் எனக் கேள்விப்பட்டபோது, அவர்கள் மிகவும் பயந்தார்கள். 39 எனவே தலைமை நீதிபதிகள் இவர்களை சமாளிப்பதற்காக வந்து, இவர்களைச் சிறையிலிருந்து வெளியே கூட்டிக்கொண்டுபோய், பட்டணத்தைவிட்டுப் போகும்படி கேட்டுக்கொண்டார்கள். 40 எனவே பவுலும் சீலாவும் சிறையைவிட்டு வெளியே வந்து, லீதியாளின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் சகோதரர்களைச் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். பின்பு அவ்விடத்தைவிட்டுச் சென்றார்கள்.