9
எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்கு செய்யப்படும் இந்தப் பணியைக் குறித்து நான் தொடர்ந்து உங்களுக்கு எழுதவேண்டிய அவசியமில்லை. நீங்கள் உதவிசெய்ய ஆவலாய் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால் மக்கெதோனியாவில் உள்ளவர்களிடம், உங்களைக்குறித்துப் பெருமையாகவும் பேசியிருக்கின்றேன். நான் அவர்களிடம், அகாயாவிலுள்ள நீங்கள் கடந்த வருடத்தில் இருந்தே உதவிசெய்ய ஆயத்தமாக இருக்கிறீர்கள் என்று சொல்லியிருக்கின்றேன். உங்களுடைய அந்த ஆர்வம் அவர்களில் அநேகரை செயலாற்றுவதற்கு உற்சாகப்படுத்தியது. இப்பொழுது இந்த விஷயத்தில், நாங்கள் உங்களைக்குறித்துப் பெருமையாய்ப் பேசியது, வெறும் வார்த்தைகளாய்ப் போகாதபடி, நான் இந்த சகோதரர்களை உங்களிடம் அனுப்புகிறேன். நீங்கள் ஆயத்தமாய் இருப்பீர்கள் என்று நான் அவர்களுக்குச் சொன்னதுபோலவே, நீங்களும் ஆயத்தமாயிருங்கள். மக்கெதோனியாவிலுள்ளவர்களில் யாராவது என்னுடன் வரும்போது, நீங்கள் ஆயத்தமாய் இல்லையெனக் கண்டால், நாங்கள் உங்களில் வைத்த மனவுறுதியின் நிமித்தம் வெட்கப்பட நேரிடும் எனச் சொல்லவேண்டியதில்லை. நீங்களும் வெட்கப்பட்டுப் போவீர்களே. எனவே இந்தச் சகோதரர்கள் எனக்கு முன்பாகவே உங்களிடம் வந்து, நீங்கள் கொடுப்பதாக வாக்குப்பண்ணிய நன்கொடைகளைச் சேர்த்து ஆயத்தப்படுத்தும்படி, இவர்களை முன்னதாக அனுப்புவது அவசியம் என்று நான் எண்ணினேன். நான் உங்களிடம் வரும்போது, நீங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதின் நிமித்தம் கொடுத்ததாக இருக்காமல், தாராள மனதுடன் கொடுக்கும் நன்கொடையாக அது இருக்கும்.
தாராளமாய் விதைத்தல்
கொஞ்சமாய் விதைக்கிறவன், கொஞ்சமாகவே அறுவடை செய்வான். தாராளமாய் விதைக்கிறவன், தாராளமாய் அறுவடை செய்வான். இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே ஒவ்வொருவனும், அவனவன் தன் இருதயத்தில் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். கட்டாயத்தின் பேரிலோ, மனவருத்தத்துடனோ ஒருவரும் கொடுக்கக்கூடாது. ஏனெனில் மகிழ்ச்சியோடு கொடுக்கிறவனிலே, இறைவன் அன்பாயிருக்கிறார். எல்லா கிருபையையும் உங்களுக்கு முழுநிறைவாய்க் கொடுக்க, இறைவன் ஆற்றலுடையவராய் இருக்கிறார். இதனால் நீங்கள் எல்லாவற்றிலும், எப்பொழுதும், தேவைகளையெல்லாம் பெற்றுக்கொண்டவர்களாய், எல்லா நல்ல செயல்களிலும் பெருகுவீர்கள். இதைப்பற்றி வேதவசனத்தில்,
“இறைபக்தியுள்ளவன் ஏழைகளுக்குத் தனது அன்பளிப்புகளைத் தாராளமாய்க் கொடுத்தான்;
அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்”*
என்று எழுதப்பட்டிருக்கிறதே.
10 இறைவனே விதைக்கிறவனுக்கு விதையையும், சாப்பிடுவதற்கு உணவையும் கொடுக்கிறார். அவரே உங்களுக்குத் தேவையான விதைகளையெல்லாம் கொடுத்து, அதைப் பெருகவும் செய்வார். உங்கள் நீதியின் அறுவடையையும், அவரே பெருகச்செய்வார். 11 நீங்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தாராள மனதுடையவர்களாய் இருக்கும்படி, நீங்கள் எல்லா வழியிலும் செல்வந்தர்களாவீர்கள். இதனால் எங்கள் உள்ளத்தின் வழியாக, உங்கள் தாராள தன்மையின் பிரதிபலன் இறைவனுக்குச் செலுத்தும் நன்றியின் நிறைவாக அமையும்.
12 எனவே நீங்கள் மேற்கொண்டிருக்கின்ற இந்தப் பணி, இறைவனுடைய மக்களின் தேவைகளைச் சந்திக்கிறது மட்டுமல்ல, அநேகர் இறைவனுக்கு நன்றி செலுத்துவதினாலே, அது மிகுந்த பலனுள்ளதாயிருக்கிறது. 13 உங்களுடைய இந்தப் பணியின் மூலமாக நீங்கள் உங்களை நிரூபித்திருக்கிறீர்கள். இதனால் அநேகர் கிறிஸ்து இயேசுவின் நற்செய்தியை நீங்கள் அறிக்கையிட்டதோடு, உங்கள் கீழ்ப்படிதலுக்காகவும், தங்களுடனும் மற்றெல்லாருக்கும் நீங்கள் தாராள மனதுடன் பகிர்ந்து கொண்டதற்காகவும், இறைவனுக்குத் துதி செலுத்துவார்கள். 14 அத்துடன் இறைவன் உங்களுக்குக் கொடுத்த அளவுகடந்த கிருபையின் நிமித்தம் உங்களுக்காக மன்றாடி, உங்கள் மேலுள்ள அன்பைக் காட்டுவார்கள். 15 விவரிக்க முடியாத இறைவனுடைய நன்கொடைக்காக, அவருக்கு நன்றி உரித்தாகட்டும்.
* 9:9 9:9 சங். 112:9