33
மோசே கோத்திரங்களை ஆசீர்வதித்தல்
இறைவனின் மனிதனாகிய மோசே தான் இறப்பதற்குமுன் இஸ்ரயேல் மக்கள்மேல் கூறிய ஆசீர்வாதம் இதுவே. அவன் சொல்லியதாவது:
“யெகோவா சீனாயிலிருந்து வந்து,
சேயீரிலிருந்து அவர்கள்மேல் உதித்தார்.
பாரான் மலையிலிருந்து அவர் பிரகாசித்தார்.
ஆயிரக்கணக்கான பரிசுத்தவான்களுடன் தெற்கிலிருந்தும்,
மலைச்சரிவுகளிலிருந்தும் வந்தார்.
நிச்சயமாக நீரே மக்களில் அன்பு செலுத்துகிறீர்.
எல்லா பரிசுத்தவான்களும் உமது கரத்திலே இருக்கிறார்கள்.
அவர்கள் உம்முடைய பாதங்களில் விழுந்து வணங்குகிறார்கள்.
உம்மிடமிருந்து அறிவுறுத்தலை பெற்றுக்கொள்கிறார்கள்.
மோசே எங்களுக்குக் கொடுத்த சட்டமே அந்த அறிவுறுத்தல்.
அது யாக்கோபின் சபையாருக்கு உடைமையாய் இருக்கிறது.
இஸ்ரயேலின் கோத்திரங்களுடன்.
மக்களின் தலைவர்கள் ஒன்றாய் கூடியபோது,
யெஷூரன்மேல் யெகோவாவே அரசனாய் இருந்தார்.
 
“ரூபன் வாழட்டும்; அவன் சாகக்கூடாது,
அவனுடைய மனிதர் குறையாமல் இருக்கட்டும்.”
அவன் யூதாவைப்பற்றிச் சொன்னதாவது:
“யெகோவாவே, யூதாவின் கதறுதலைக் கேளும்;
அவனை அவனுடைய மக்களிடம் கொண்டுவாரும்.
அவன் தன் சொந்தக் கரங்களால் அவனுடைய உரிமைகளுக்காகப் போராடுகிறான்.
அவனுடைய பகைவருக்கு எதிராக அவனுக்குத் துணையாய் இரும்.”
லேவியைப்பற்றி அவன் சொன்னதாவது:
“நீர் தயவுகாட்டிய மனிதனுக்கே
உமது தும்மீம், ஊரீம் உரியவை.
நீர் மாசாவில் அவனைத் சோதித்தீர்.
மேரிபாவின் தண்ணீர் அருகே அவனுடன் வாக்குவாதம் பண்ணினீர்.
அவன் தன் தகப்பனையும், தாயையும்பற்றி,
‘நான் அவர்களைக் கவனத்தில் கொள்ளமாட்டேன்’ என்றான்.
அவன் தன் சகோதரர்களை அங்கீகரிக்கவில்லை.
தன் பிள்ளைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் அவன் உம்முடைய வார்த்தையைக் கண்காணித்து,
உம்முடைய உடன்படிக்கையைக் காவல்செய்தான்.
10 அவன் உமது ஒழுங்குவிதிகளை யாக்கோபுக்கும்,
உமது சட்டத்தை இஸ்ரயேலுக்கும் போதிக்கிறான்.
உமது முன்னிலையில் தூபங்காட்டுகிறான்.
உமது பலிபீடத்தில் முழுமையான தகன காணிக்கையைச் செலுத்துகிறான்.
11 யெகோவாவே, அவனுடைய திறமைகளை ஆசீர்வதியும்.
அவனுடைய கைகளின் வேலையில் பிரியமாயிரும்.
அவனுக்கு எதிரே எழும்புவோரின் இடுப்புகளை அடித்து நொறுக்கும்.
அவனுடைய பகைவர்கள் இனி ஒருபோதும் எழும்பாதபடி அவர்களை அடியும்.”
12 பென்யமீனைப்பற்றி அவன் சொன்னது:
“யெகோவாவினால் அன்புகூரப்பட்டவன் அவரில் பாதுகாப்பாய் இளைப்பாறட்டும்.
ஏனெனில் அவர் அவனை நாள்முழுவதும் பாதுகாக்கிறார்.
யெகோவா அன்புகூரும் அவன் அவருடைய தோள்களுக்கிடையில் இளைப்பாறுகிறான்.”
13 யோசேப்பைப்பற்றி அவன் சொன்னது:
“யெகோவா அவனுடைய நாட்டை,
மேலே வானத்திலிருந்து வரும் பனியினாலும்,
கீழே பூமியின் ஆழத்திலிருந்துவரும் தண்ணீர்களாலும் ஆசீர்வதிப்பாராக.
14 சூரியன் விளைவிக்கும் சிறந்த விளைச்சலினாலும்,
சந்திரன் விளைவிக்கும் அருமையான பொருட்களாலும் ஆசீர்வதிப்பாராக.
15 பூர்வகால மலைகளின் மிகச்சிறந்த கொடைகளாலும்,
அழியாத குன்றுகளின் செழிப்பினாலும் ஆசீர்வதிப்பாராக.
16 பூமியின் மிகச்சிறந்த கொடைகளினாலும், நிறைவினாலும் ஆசீர்வதிப்பாராக.
எரிகின்ற புதரில் வாழ்ந்தவரின் தயவினாலும் ஆசீர்வதிப்பாராக.
இவை எல்லாம் யோசேப்பின் தலையின்மேல் தங்கட்டும்.
தனது சகோதரருள் இளவரசனாயிருந்தவனின் உச்சந்தலையிலும் தங்குவதாக.
17 மாட்சிமையில் அவன் தலையீற்று காளைபோல் இருக்கிறான்.
அவன் கொம்புகளோ காட்டு எருதின் கொம்புகள்போல் இருக்கின்றன.
அவற்றால் நாடுகளைக் குத்திக் கிழிப்பான்.
பூமியின் கடையாந்தரங்களில் இருப்பவர்களைக்கூட குத்திக் கிழிப்பான்.
எப்பிராயீமின் பத்தாயிரம்பேரும் இப்படிப்பட்டவர்களே.
மனாசேயின் ஆயிரம்பேரும் இப்படிப்பட்டவர்களே.”
18 செபுலோனைப்பற்றி அவன் சொன்னதாவது:
“செபுலோனே நீ வெளியே போகையில் களிகூரு.
இசக்காரே நீ கூடாரங்களிலிருந்து களிகூரு.
19 அவர்கள் மக்களை மலைக்கு அழைப்பிப்பார்கள்.
அங்கே நீதியின் பலிகளைச் செலுத்துவார்கள்.
அவர்கள் கடல்களின் நிறை வளங்களிலும்,
மண்ணுள் மறைந்திருக்கும் செல்வங்களிலும் விருந்து உண்பார்கள்.”
20 காத்தியரைப்பற்றி அவன் சொன்னதாவது:
“காத்தியரின் ஆளுகைகளை விரிவுபடுத்துபவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
காத் சிங்கத்தைப்போல் படுத்திருப்பான்.
அவன், புயத்தையும் தலையையும் கிழிக்கும் சிங்கத்தைப்போல் படுத்திருப்பான்.
21 அவன் சிறந்த நிலத்தை தனக்கென்று தெரிந்துகொண்டான்.
தலைவருக்கான பங்கு அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
மக்களின் தலைவர்கள் ஒன்றுகூடியபோது,
அவன் யெகோவாவின் நீதியையும்,
இஸ்ரயேலருக்கான யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளையும் நிறைவேற்றினான்.”
22 தாணைப்பற்றி அவன் சொன்னதாவது:
“தாண் பாசானிலிருந்து,
பாய்கிற சிங்கக்குட்டி.”
23 நப்தலியைப்பற்றி அவன் சொன்னதாவது:
“நப்தலி யெகோவாவின் தயவில் பெருகி
அவரின் ஆசீர்வாதத்தால் நிறைந்திருக்கிறான்.
அவன் கலிலேயா கடலின் தெற்குப் பக்கமாக உள்ள பகுதியை உரிமையாக்கிக்கொள்வான்.”
24 ஆசேரைப்பற்றி அவன் சொன்னதாவது:
“ஆசேர் மகன்களுக்குள் அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
சகோதரரிடமிருந்து அவனுக்கு ஆதரவு கிடைக்கும்.
அவன் தன் பாதங்களை எண்ணெயில் குளிப்பாட்டட்டும்.
25 உன் வாயிற்கதவுகளின் தாழ்ப்பாள்கள் இரும்பும் வெண்கலமுமாய் இருக்கும்.
நீ வாழும் காலமெல்லாம் உன் பெலனும் நீடித்திருக்கும்.
 
26 “யெஷூரனின் இறைவனைப்போல் வேறொருவரும் இல்லை.
அவர் உனக்கு உதவிசெய்ய வானங்களிலும்,
அவருடைய மகத்துவத்துடன் மேகங்களிலும் ஏறிவருவார்.
27 என்றும் வாழ்கிற இறைவன் உன் அடைக்கலம்.
அவரின் நித்திய புயங்கள் உன்னைத் தாங்கும்.
அவர், ‘பகைவனை அழித்துவிடு!’ என்று சொல்லி,
உன் பகைவனை உனக்கு முன்பாகத் துரத்திவிடுவார்.
28 இஸ்ரயேல் தனிமையாய் பாதுகாப்புடன் வாழும்.
தானியமும், புது திராட்சை இரசமும் உள்ள நாட்டில்,
யாக்கோபின் நீரூற்று* பாதுகாப்பாய் இருக்கிறது.
அங்கே வானம் பனியைப் பெய்கின்றது.
29 இஸ்ரயேலேரே, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
யெகோவாவினால் மீட்கப்பட்ட மக்களான உங்களைப்போல் வேறு யார் இருக்கிறார்கள்?
அவரே உங்கள் கேடயமும்,
உங்களுக்கு உதவி செய்பவருமாயிருக்கிறார்.
அவரே உங்களது மகிமையான வாளுமாயிருக்கிறார்.
உங்களது பகைவர் உங்களுக்கு முன்பாக அஞ்சி ஒதுங்குவார்கள்.
நீங்கள் அவர்களின் தொழுகைமேடுகளை மிதிப்பீர்கள்.”
* 33:28 33:28 எபிரெய கிரேக்க கையெழுத்துப் பிரதியில் நீரூற்று என்றுள்ளது. 33:29 33:29 அல்லது அவர்களின் பின்புறத்தை.