இறைவாக்கினன் எசேக்கியேலின் புத்தகம்
1
தொடக்க உயிரினங்கள்
எனது முப்பதாம் வருடம் நான்காம் மாதத்தின் ஐந்தாம் நாளில் நான் கேபார் நதியருகே நாடுகடத்தப்பட்டோர் மத்தியில் இருந்தேன். அப்பொழுது வானம் திறக்கப்பட்டு இறைவனின் தரிசனங்களை அங்கு கண்டேன்.
அது யோயாக்கீன் அரசன் நாடுகடத்தப்பட்ட ஐந்தாம் வருடம் ஐந்தாம் மாதம். அப்பொழுது பாபிலோன் நாட்டிலுள்ள கேபார் நதியருகே இருந்த பூசியின் மகனும், ஆசாரியனுமான எசேக்கியேலாகிய எனக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. அங்கே அவருடைய கரம் என்னுடன் இருந்தது.
நான் பார்த்தபோது, வடக்கேயிருந்து ஒரு புயல்காற்று வருவதைக் கண்டேன். அது மின்னலடிக்கும் பெருமேகமாக பளிச்சிடும் ஒளியினால் சூழப்பட்டிருந்தது. அந்த மேகத்தின் உள்ளிருந்த நெருப்பின் நடுப்பகுதி கதகதக்கும் உலோகம் போன்று காணப்பட்டது. அந்த நெருப்பில் உயிரினங்கள் போன்ற நான்கு உருவங்கள் இருந்தன. தோற்றத்தில் அவை மனித உருவத்தைக் கொண்டிருந்தன. ஆனாலும் அவை ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும், நான்கு சிறகுகளும் இருந்தன. அவைகளின் கால்கள் நேராகவும், பாதங்கள் கன்றுக்குட்டிகளின் உள்ளங்கால்களைப் போலவும் இருந்தன. அவை மினுக்கப்பட்ட வெண்கலம்போல் மின்னிக்கொண்டிருந்தன. அவைகளின் சிறகுகளின்கீழ் நான்கு புறங்களிலும் மனிதக் கைகள் இருந்தன. அவை நான்குமே முகங்களையும் இறகுகளையும் கொண்டிருந்தன. அவைகளின் செட்டைகள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருந்தன. அவை போகும்போது ஒவ்வொன்றும் திரும்பாமல் நேர்முகமாகவே சென்றன.
10 அவைகளின் முகங்கள் அமைந்திருந்த விதமாவது: அவை நான்கில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மனித முகமும், வலதுபுறத்தில் சிங்கமுகமும், இடது புறத்தில் எருது முகமும், அதோடு ஒவ்வொன்றுக்கும் கழுகு முகமும் இருந்தன. 11 இவ்வாறாக அவைகளின் முகங்கள் இருந்தன. அவைகளின் சிறகுகள் மேல்நோக்கி விரிந்திருந்தன. ஒவ்வொன்றிற்கும் இரண்டு ஜோடி சிறகுகள் இருந்தன. இச்சிறகுகள் இரு பக்கங்களிலுமிருந்த உயிரினங்களின் இறகுகளைத் தொட்டுக்கொண்டிருந்தன. மற்ற இரு சிறகுகள் அவைகளின் உடல்களை மூடிக்கொண்டிருந்தன. 12 அவை ஒவ்வொன்றும் நேர்முகமாகவே சென்றன. ஆவி எங்கெல்லாம் செல்லுமோ, அங்கெல்லாம் அவை திரும்பிப்பாராமலே சென்றன. 13 அவ்வுயிரினங்களின் தோற்றம் எரிகிற நெருப்புத்தழலைப்போல் அல்லது தீப்பந்தம்போல் இருந்தன. உயிரினங்களுக்குள்ளே முன்னும் பின்னுமாக நெருப்பு அசைவாடிக் கொண்டிருந்தது. அந்த நெருப்பு பிரகாசமாயிருந்தது. அந்த நெருப்பிலிருந்து மின்னல் புறப்பட்டது. 14 அந்த உயிரினங்கள் முன்னும் பின்னுமாக மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன.
15 நான்கு முகங்களையுடைய அவ்வுயிரினங்களை நான் பார்த்தபோது, அவை ஒவ்வொன்றுக்கும் அருகே தரையில் ஒவ்வொரு சக்கரங்களைக் கண்டேன். 16 அச்சக்கரங்களின் தோற்றமும், அமைப்பும் எப்படியிருந்ததென்றால், மரகதக் கற்களைப்போல் மினுங்கிக் கொண்டிருந்தன. அவை நான்கும் ஒரேவிதமாகக் காணப்பட்டன. அச்சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்குள் ஒன்று பிணைக்கப்பட்டிருப்பதுபோல் தோற்றமளித்தன. 17 சக்கரங்கள் நகர்ந்தபோது, அவ்வுயிரினங்கள் நோக்கும் நான்கு திசைகளில் ஏதாவது ஒரு திசையில் போயின. அவ்வுயிரினங்கள் ஓடும்போது சக்கரங்கள் திரும்புவதேயில்லை. 18 அவைகளின் வளையங்கள் உயரமாயும், பிரமிக்கத்தக்கதாயும் இருந்தன. அந்த நான்கு வளையங்களும் சுற்றிலும் கண்கள் நிறைந்தனவாய் இருந்தன.
19 உயிரினங்கள் புறப்படும்போது, அவைகளின் அருகே இருந்த சக்கரங்களும் புறப்பட்டன. உயிரினங்கள் தரையைவிட்டு மேலெழும்பும்போது, சக்கரங்களும் மேலெழும்பின. 20 உயிரினங்களின் ஆவி எங்கெல்லாம் செல்லுமோ, அங்கெல்லாம் அவ்வுயிரினங்களும் செல்லும். சக்கரங்களும் அவைகளோடு எழும்பிச் செல்லும். ஏனெனில், உயிரினங்களின் ஆவி அச்சக்கரங்களிலேயே இருந்தது. 21 உயிரினங்கள் நகர்ந்தபோது, சக்கரங்களும் நகர்ந்தன. உயிரினங்கள் அசைவற்று நின்றபோது, அவைகளும் அசைவற்று நின்றன. உயிரினங்கள் தரையிலிருந்து எழும்பியபோது, அந்த சக்கரங்களும் அவைகளுடன் சேர்ந்து மேலெழுந்தன. ஏனெனில் உயிரினங்களின் ஆவி அந்த சக்கரங்களிலே தான் இருந்தது.
22 அவ்வுயிரினங்களின் தலைகளுக்கு மேலாக ஆகாயவிரிவு போன்ற அமைப்பு பரந்திருக்கக் காணப்பட்டது. அது பனிக்கட்டிபோல் பளபளப்பாகவும், பிரமிக்கத்தக்கதாகவும் இருந்தது. 23 அந்த ஆகாயவிரிவின்கீழ் உயிரினங்களின் சிறகுகள் ஒன்றையொன்று நோக்கியபடி விரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு உயிரினத்திற்கும் தங்கள் தங்கள் உடலை மூடிக்கொள்ள சிறகுகள் இருந்தன. 24 அந்த உயிரினங்கள் நகர்ந்தபோது, அவைகளுடைய செட்டைகளின் சத்தத்தைக் கேட்டேன். அது பாய்ந்தோடும் வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், எல்லாம் வல்ல இறைவனுடைய குரலைப் போலவும், இராணுவத்தின் இரைச்சலைப்போலவும் இருந்தது. அவை நின்றபோது தங்கள் இறகுகளைக் கீழே இறக்கிவிட்டன.
25 அவை இறகுகளைத் இறக்கிவிட்டு நின்றபோது, அவைகளின் தலைகளுக்கு மேலாய் காணப்பட்ட ஆகாயவிரிவின் மேலிருந்து ஒரு குரல் ஒலித்தது. 26 அவைகளின் தலைகளுக்கு மேலிருந்த ஆகாயவிரிவின் மேலே காணப்பட்ட, இரத்தினக்கற்களினாலான அரியணைபோன்ற ஒன்று காணப்பட்டது. மேலே, மிக உயரத்தில் அரியணையில் ஒரு மனிதனைப் போன்ற உருவம் இருந்தது. 27 அந்த உருவத்தின் இடுப்பைப்போல் தோன்றிய மேல்பாகத்தில், அவர் நெருப்புக்கனல் ஒளிவீசும் உலோகத்தைப்போல் காணப்பட்டார். கீழேயுள்ள பாகமோ நெருப்பைப்போல் காணப்பட்டது. பிரகாசமான வெளிச்சம் அவரைச் சுற்றி இருந்தது. 28 மழைபெய்யும் நாளில் மேகங்களில் உள்ள வானவில்லின் தோற்றத்தைப்போல, அவரைச் சுற்றியுள்ள பிரகாசமும் இருந்தது.
இது யெகோவாவின் மகிமையின் சாயலின் தோற்றம், நான் அதைக் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; பேசுகிற ஒருவரின் குரலையும் கேட்டேன்.