48
நாட்டின் பிரிவுகள்
“பெயர் வரிசைப்படியுள்ள கோத்திரங்கள் இவையே:
 
“நாட்டின் வட எல்லையில், தாண் ஒரு பங்கைப் பெறுவான்; அது எத்லோன் வீதியிலிருந்து, ஆமாத்தின் நுழைவு வாசல் வரைக்கும் தொடரும். ஆமாத்திற்கு அடுத்ததாக ஆசார் ஏனானும், தமஸ்குவின் வடக்கு எல்லையும், கிழக்கிலிருந்து மேற்கு வரையிலுமுள்ள அதன் எல்லையின் ஒரு பகுதியாயிருக்கும்.
ஆசேர் ஒரு பங்கைப் பெறுவான்; அது கிழக்கிலிருந்து மேற்குவரையுள்ள தாணின் எல்லையோடு அமையும்.
நப்தலி ஒரு பங்கைப் பெறுவான். அது கிழக்கிலிருந்து மேற்குவரையுள்ள ஆசேரின் எல்லையோடு அமையும்.
மனாசே ஒரு பங்கைப் பெறுவான்; அது கிழக்கிலிருந்து மேற்குவரையுள்ள நப்தலியின் எல்லையோடு அமையும்.
எப்பிராயீம் ஒரு பங்கைப் பெறுவான்; அது கிழக்கிலிருந்து மேற்கு வரையிலுள்ள மனாசேயின் எல்லையோடு அமையும்.
ரூபன் ஒரு பங்கைப் பெறுவான்; அது கிழக்கிலிருந்து மேற்குவரையுள்ள எப்பிராயீமின் எல்லையோடு அமையும்.
யூதா ஒரு பங்கைப் பெறுவான்; அது கிழக்கிலிருந்து மேற்குவரையுள்ள ரூபனின் எல்லையோடு அமையும்.
 
“கிழக்கிலிருந்து மேற்குவரையுள்ள யூதாவின் எல்லையைக்கொண்ட பகுதியை, நீ விசேஷ கொடையாகக் கொடுக்கவேண்டும். அது 25,000 முழ அகலமும், கிழக்கிலிருந்து மேற்குவரையுள்ள கோத்திரப் பங்குக்குச் சமானமான நீளமுமாய் இருக்கவேண்டும். பரிசுத்த ஆலயம் அதன் நடுவில் அமைந்திருக்கும்.
“யெகோவாவுக்கு நீ செலுத்தவேண்டிய விசேஷ பகுதி 25,000 முழ நீளமும் 10,000 முழ அகலமுமாக இயிருக்கவேண்டும். 10 இது ஆசாரியருக்கான பரிசுத்த பகுதியாயிருக்கும். அது வடக்குப்புறம் 25,000 முழ நீளமாயும், மேற்குப்புறம் 10,000 முழ அகலமாயும், கிழக்குப்புறம் 10,000 முழ அகலமாயும், தெற்குப்புறம் 25,000 முழ நீளமாயும் இருக்கும். அதன் நடுவில் யெகோவாவின் பரிசுத்த ஆலயம் இருக்கும். 11 எனக்குப் பணிசெய்வதில் உண்மையுள்ளவர்களாயிருந்த, சாதோக்கியரான அர்ப்பணிக்கப்பட்ட ஆசாரியருக்கே இது உடையதாகும். இஸ்ரயேல் வழிவிலகினபோது லேவியரும் வழிவிலகினதுபோல, சாதோக்கியர் வழிவிலகிப்போகவில்லை. 12 நாட்டின் பரிசுத்த பங்கிலிருந்து இது ஒரு விசேஷ நன்கொடையாகும். இந்த மகா பரிசுத்த பங்கு லேவியரின் நிலப்பரப்பின் எல்லையோடு அமைந்திருக்கும்.
13 “ஆசாரியருக்கான பகுதியின் எல்லையோடு லேவியர்களுக்கு 25,000 முழ நீளமும் 10,000 முழ அகலமுமான ஒரு இடம் இருக்கும். அதன் முழு நீளம் 25,000 முழமும், அகலம் 10,000 முழமுமாயிருக்கும். 14 அவர்கள் அதில் எதையேனும் விற்கவோ அல்லது மாற்றீடு செய்யவோ கூடாது. அது நாட்டின் சிறப்புவாய்ந்த பகுதியாகும். அது யெகோவாவுக்குப் பரிசுத்தமாயிருப்பதால், அது வேறுயாருக்கும் உரிமையாகக்கூடாது.
15 “அகலம் 5,000 முழமும், நீளம் 25,000 முழமும் உடைய எஞ்சியபகுதி, வீடுகளுக்கும் மேய்ச்சல் நிலத்துக்குமாக நகரின் பொதுப் பாவனைக்காக விடப்படும். நகரம் அதின் நடுவில் இருக்கும். 16 நகரம் வடக்கே 4,500 முழங்களும், தெற்கே 4,500 முழங்களும், கிழக்கே 4,500 முழங்களும், மேற்கே 4,500 முழங்களும் அளவுடையதாயிருக்கும். 17 நகருக்கான மேய்ச்சல் நிலம் வடக்கே 250 முழங்களும் தெற்கே 250 முழங்களும் கிழக்கே 250 முழங்களும் மேற்கே 250 முழங்களுமாக இருக்கும். 18 பரிசுத்த இடத்தின் எல்லையோடு நீண்டுசெல்லும் எஞ்சியபகுதி கிழக்கே 10,000 முழங்களும் மேற்கே 10,000 முழங்களுமாயிருக்கும். அதன் உற்பத்திகள் நகரின் தொழிலாளர்களின் உணவுக்காகும். 19 நகரில் இருந்து அங்கு விவசாயம் செய்யவரும் தொழிலாளர், இஸ்ரயேலின் எல்லாக் கோத்திரங்களிலுமிருந்தும் வருவார்கள். 20 முழு பகுதியும் 25,000 முழச் சதுரமாக இருக்கும். நகரத்து உடைமைகளோடு ஒரு பரிசுத்த பகுதியையும் விசேஷ கொடையாக நீங்கள் ஒதுக்கிவைக்கவேண்டும்.
21 “பரிசுத்த இடமும், நகரத்தின் சொத்தும் அமைந்திருக்கும் இடத்தின் இரு பக்கங்களிலும் எஞ்சியிருக்கும் பகுதி இளவரசனுக்குரியதாகும். அது கிழக்குப் புறமாக பரிசுத்த இடத்தின் 25,000 முழ நீளமான பக்கத்திலிருந்து கிழக்கு எல்லைக்கும், மேற்குப் புறமாக 25,000 முழ நீளமான பக்கத்திலிருந்து மேற்கு எல்லைக்கும் பரந்திருக்கும். கோத்திரப் பங்குகளுக்கு அருகே அவற்றின் நீளத்துக்கு அமைவாக இவ்விருபகுதிகளும் இளவரசனுக்கு உரியதாகும். ஆலயத்தின் பரிசுத்த இடத்துடன் இருக்கும் பரிசுத்த பகுதி அவைகளுக்கு நடுவில் இருக்கும். 22 எனவே, லேவியரின் சொத்துக்களும் நகரத்தின் சொத்துக்களும் இளவரசனுக்குச் சொந்தமான பகுதியின் நடுவில் இருக்கும். இளவரசனுக்கு சொந்தமான பகுதியோ, யூதாவின் எல்லைகளுக்கும் பென்யமீன் எல்லைகளுக்கும் இடையில் அமைந்திருக்கும்.
 
23 “எஞ்சிய கோத்திரங்களுக்கான பகுதிகளாவன,
 
“பென்யமீன் ஒரு பகுதியைப் பெறுவான். அது கிழக்குப்புறத்திலிருந்து மேற்குப்புறம்வரை பரந்திருக்கும்.”
24 சிமியோன் ஒரு பகுதியைப் பெறுவான். அது கிழக்கிலிருந்து மேற்குவரை பென்யமீனின் பங்கின் எல்லையோடிருக்கும்.
25 இசக்கார் ஒரு பகுதியைப் பெறுவான். அது கிழக்கிலிருந்து மேற்குவரை சிமியோனின் பங்கின் எல்லையோடிருக்கும்.
26 செபுலோன் ஒரு பகுதியைப் பெறுவான். அது கிழக்கிலிருந்து மேற்குவரை இசக்காரின் பங்கின் எல்லையோடிருக்கும்.
27 காத் ஒரு பகுதியைப் பெறுவான். அது கிழக்கிலிருந்து மேற்குவரை செபுலோனின் பங்கின் எல்லையோடிருக்கும்.
28 காத்தின் தெற்கெல்லை தெற்கே தாமார் தொடங்கி, காதேசின் மேரிபாவின் தண்ணீர்கள்வரையும், சென்று பின் எகிப்திய ஓடை ஓரமாக மத்திய தரைக்கடலைச் சென்றடையும்.
 
29 “இஸ்ரயேலரின் கோத்திரங்களுக்குச் சொத்துரிமையாக நீ பிரித்துக் கொடுக்கவேண்டிய நாடு இதுவே. இவை அவர்களுக்குரிய பகுதியாக இருக்கும்” என்பதாக ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
நகர் வாசல்கள்
30 “நகரிலிருந்து வெளியேறும் வழிகள் இவையே:
 
“அவை 4,500 முழ நீளமான வடபகுதி தொடங்கி அமைந்திருக்கும். 31 நகர வாசல்கள் இஸ்ரயேலரின் கோத்திரங்களின்படியே பெயரிடப்படும். வடபுறத்திலுள்ள மூன்று வாசல்களும் ரூபன் வாசல், யூதா வாசல், லேவி வாசல் எனப் பெயரிடப்படும்.
32 நீளம் 4,500 முழமான கிழக்குப்புறத்திலுள்ள மூன்று வாசல்களும் யோசேப்பு வாசல், பென்யமீன் வாசல், தாண் வாசல் எனப் பெயரிடப்படும்.
33 நீளம் 4,500 முழமான தெற்குப் புறத்திலுள்ள மூன்று வாசல்களும் சிமியோன் வாசல், இசக்கார் வாசல், செபுலோன் வாசல் எனப் பெயரிடப்படும்.
34 நீளம் 4,500 முழமான மேற்குப் புறத்திலுள்ள மூன்று வாசல்களும் காத் வாசல், ஆசேர் வாசல், நப்தலி வாசல் எனப் பெயரிடப்படும்.
 
35 “சுற்றிலும் தூரம் 18,000 முழமாக இருக்கும்.
 
“அக்காலம் முதல் நகருக்கு வழங்கப்படும் பெயர், ‘யெகோவா அங்கே இருக்கிறார்’ ” என்பதே.