7
ஆமான் தூக்கிலிடப்படுதல்
அப்படியே அரசனும், ஆமானும் எஸ்தர் அரசியுடன் விருந்து உண்ணப் போனார்கள். அந்த இரண்டாம் நாளில் அவர்கள் திராட்சை இரசத்தைக் குடித்துக் கொண்டிருக்கையில், அரசன் திரும்பவும், “எஸ்தர் அரசியே, உனது விண்ணப்பம் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும். உனது வேண்டுகோள் என்ன? அது அரசில் பாதியாயிருந்தாலும் அது உனக்குக் கொடுக்கப்படும்” என்றான்.
அப்பொழுது எஸ்தர் அரசி விடையாக, “அரசே உம்மிடம் எனக்குத் தயவு கிடைத்திருந்தால், உமக்குப் பிரியமாயிருந்தால் என் உயிரை எனக்குத் தாரும், இதுவே எனது விண்ணப்பம். எனது மக்களைத் தப்புவியும், இதுவே எனது வேண்டுகோள். ஏனெனில் நானும் எனது மக்களும் அழிவுக்கும், கொலைக்கும், நாசத்திற்கும் விற்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் ஆணும் பெண்ணும் அடிமைகளாக விற்கப்பட்டிருந்தால்கூட நான் பேசாமல் இருந்திருப்பேன். ஏனெனில், அப்படியான ஒரு துன்பம் அரசரை கஷ்டப்படுத்துவதற்கு ஏற்ற காரணமாய் இருந்திருக்காது” என்றாள்.
அகாஸ்வேரு அரசன் எஸ்தர் அரசியிடம், “யார் அவன்? இப்படியான காரியத்தைச் செய்யத் துணிந்த அவன் எங்கே?” என்று கேட்டான்.
அதற்கு எஸ்தர், “அந்த விரோதியும், பகைவனும் இந்த கொடிய ஆமானே” என்றாள்.
அப்பொழுது ஆமான், அரசனுக்கும் அரசிக்கும் முன்பாகத் திகிலடைந்தான். அரசன் கடுங்கோபத்துடன் எழுந்து தனது திராட்சை இரசத்தை வைத்துவிட்டு, வெளியே அரண்மனைத் தோட்டத்துக்குப் போனான். ஆனால் ஆமான், தனது தலைவிதியை அரசன் ஏற்கெனவே தீர்மானித்துவிட்டான் என உணர்ந்து, தனது உயிருக்காக எஸ்தர் அரசியிடம் மன்றாடும்படி அங்கேயே நின்றான்.
அரண்மனைத் தோட்டத்திலிருந்து அரசன் விருந்து மண்டபத்துக்குத் திரும்பிவந்தபோது, எஸ்தர் சாய்ந்திருந்த இருக்கையின்மேல் ஆமான் விழுவதைக் கண்டான்.
அப்பொழுது அரசன், “அரசி என்னுடன் வீட்டில் இருக்கும்போதே இவன் அவளைப் பலாத்காரம் பண்ணப் பார்க்கிறானோ?” என்றான்.
இந்த வார்த்தை அரசனுடைய வாயிலிருந்து புறப்பட்ட உடனேயே ஆமானுடைய முகத்தை மூடினார்கள். அப்பொழுது அரசனுக்கு ஏவல் வேலைசெய்த அதிகாரிகளில் ஒருவனான அற்போனா என்பவன் அரசனிடம், “எழுபத்தைந்து அடி உயரமான ஒரு தூக்கு மரம் ஆமானின் வீட்டுக்குப் பக்கத்திலே இருக்கிறது. அவன் அதை அரசனுக்கு உதவிசெய்வதற்காகப் பேசிய மொர்தெகாய்க்கென செய்துவைத்திருந்தான்” என்றான்.
அப்பொழுது அரசன், “அவனை அதில் தூக்கிப் போடுங்கள்” என்றான். 10 அப்படியே அவர்கள், மொர்தெகாய்க்காக ஆமான் ஆயத்தம் பண்ணிய தூக்குமரத்திலே ஆமானைத் தூக்கிலிட்டார்கள். அப்பொழுது அரசனின் கோபம் தணிந்தது.