16
மன்னாவும் காடையும்
அதன் பின்னர் முழு இஸ்ரயேல் சமுதாயமும் ஏலிமிலிருந்து புறப்பட்டு, அவர்கள் எகிப்திலிருந்து வெளியேறிய இரண்டாம் மாதம் பதினைந்தாம்நாள் ஏலிமுக்கும் சீனாய்க்கும் இடையேயுள்ள சீன் பாலைவனத்தை வந்தடைந்தார்கள். அப்பாலைவனத்திலே இஸ்ரயேல் சமுதாயம் முழுவதும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். இஸ்ரயேலர் அவர்களிடம், “நாங்கள் யெகோவாவின் கையால் எகிப்திலே இறந்திருக்கலாமே! நாங்களோ அங்கே இறைச்சிப் பானைகளைச் சுற்றி உட்கார்ந்து, விரும்பிய உணவையெல்லாம் சாப்பிட்டோம்; ஆனால் நீங்கள், இந்த முழு மக்கள் கூட்டமும் பட்டினியாய்ச் சாகும்படி இந்தப் பாலைவனத்திற்குள் எங்களைக் கொண்டுவந்திருக்கிறீர்கள்” என்றார்கள்.
அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நான் வானத்திலிருந்து உங்களுக்கு அப்பத்தைப் பொழிவேன். இந்த மக்கள் ஒவ்வொரு நாளும் வெளியே போய் அந்நாளுக்குப் போதுமானதைச் சேர்க்கவேண்டும். அதன்மூலம் அவர்கள் என் அறிவுறுத்தலின்படி நடப்பார்களோ இல்லையோ என்று அவர்களைப் சோதித்துப் பார்ப்பேன். ஆறாம்நாளிலோ*, மற்றநாட்களில் சேர்ப்பதுபோல் இருமடங்கு சேர்க்கவேண்டும். அந்த நாளிலே அவர்கள் எடுத்துவந்ததைத் தயாரித்து வைக்கவேண்டும்” என்றார்.
ஆகவே, மோசேயும் ஆரோனும் இஸ்ரயேலரிடம், “யெகோவாவே உங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தார் என்பதை இன்று மாலையில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள், காலையிலோ யெகோவாவின் மகிமையைக் காண்பீர்கள்; ஏனெனில் அவருக்கு விரோதமான உங்கள் முறுமுறுப்பை அவர் கேட்டார். நீங்கள் எங்களுக்கு விரோதமாய் முறுமுறுப்பதற்கு நாங்கள் யார்?” என்றார்கள். மேலும் மோசே அவர்களிடம், “மாலையில் நீங்கள் சாப்பிடுவதற்கு இறைச்சியையும், காலையில் வேண்டிய அளவு அப்பத்தையும் தருவார்; ஏனெனில் அவருக்கு எதிரான உங்கள் முறுமுறுப்பை யெகோவா கேட்டிருக்கிறார். அப்பொழுது நீங்கள் யெகோவாவே இதைத் தருகிறார் என்பதை அறிந்துகொள்வீர்கள். நீங்கள் எங்களுக்கு எதிராக அல்ல, யெகோவாவுக்கு எதிராகவே முறுமுறுக்கிறீர்கள். எங்களுக்கு எதிராய் முறுமுறுக்க நாங்கள் யார்?” என்றார்கள்.
அதன்பின் மோசே ஆரோனிடம் சொன்னதாவது: “நீ முழு இஸ்ரயேல் சமுதாயத்தினரிடமும், ‘எல்லோரும் யெகோவாவுக்கு முன்பாக வாருங்கள். ஏனெனில் அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறார்’ என்று சொல்” என்றான்.
10 ஆரோன் முழு இஸ்ரயேல் சமுதாயத்தோடும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், அவர்கள் பாலைவனத்தை நோக்கிப் பார்த்தபோது, யெகோவாவின் மகிமை மேகத்திலே தோன்றியது.
11 அப்பொழுது யெகோவா மோசேயிடம், 12 “நான் இஸ்ரயேலருடைய முறுமுறுப்புகளைக் கேட்டேன். நீ அவர்களிடம், ‘நீங்கள் மாலையில் இறைச்சியைச் சாப்பிட்டு, காலையில் அப்பத்தினால் திருப்தியாவீர்கள். அப்பொழுது நானே உங்கள் இறைவனாகிய யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்’ என்று சொல்” என்றார்.
13 அந்த மாலை வேளையிலேயே காடைகள் வந்து அவர்கள் முகாமை மூடிக்கொண்டன. காலையில் முகாமைச் சுற்றி ஒரு பனிப்படலம் படிந்தது. 14 பனி விலகிய பின்பு, தரையின்மீது உறைபனி போன்ற மெல்லிய துகள்கள் பாலைவனத்தில் காணப்பட்டன. 15 அதை இஸ்ரயேலர் கண்டபோது, ஒருவரையொருவர் பார்த்து, “இது என்ன?” என்றார்கள். ஏனெனில், அது என்ன என்பது அவர்களுக்குத் தெரியாதிருந்தது.
அப்பொழுது மோசே அவர்களிடம், “இதுதான் நீங்கள் உண்பதற்காக யெகோவா கொடுத்திருக்கும் அப்பம். 16 யெகோவா கட்டளையிட்டிருப்பது இதுவே: ‘ஒவ்வொருவரும் தான் சாப்பிடக்கூடியதைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். உங்கள் கூடாரத்தில் உள்ளவர்களில் ஒருவருக்கு ஒரு ஓமர் அளவுப்படி, ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளுங்கள்’ ” என்றான்.
17 இஸ்ரயேலர் தங்களுக்குச் சொல்லப்பட்டபடியே செய்தார்கள். சிலர் அதிகமாகவும், சிலர் குறைவாகவும் சேர்த்தார்கள். 18 அவர்கள் சேர்த்தவற்றை ஓமரால் அளந்த போது அதிகமாகச் சேர்த்தவனிடம் தேவைக்கதிகமாக இருந்ததில்லை, குறைவாகச் சேர்த்தவனிடம் போதாமல் இருக்கவுமில்லை. ஒவ்வொருவரும் தனக்குவேண்டிய அளவையே சேர்த்தார்கள்.
19 அப்பொழுது மோசே அவர்களிடம், “ஒருவரும் மறுநாள் காலைவரை அதில் எதையும் வைத்திருக்கக்கூடாது” என்று சொன்னான்.
20 ஆனாலும் சிலர் மோசே சொன்னதைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் காலைவரை அதிலொரு பகுதியை வைத்திருந்தார்கள். அது புழுப்பிடித்து நாற்றமெடுத்தது. மோசே அவர்கள்மீது கோபங்கொண்டான்.
21 காலைதோறும் ஒவ்வொருவனும் தனக்குத் தேவையான அளவைச் சேர்த்தான். வெயில் ஏறினபோது அது உருகிப்போனது. 22 ஆறாம்நாளில் ஒவ்வொருவரும் ஒருவனுக்கு இரண்டு ஓமர் வீதம் இருமடங்கு உணவைச் சேர்த்தார்கள். சமுதாயத்தின் தலைவர்கள் இதை மோசேக்கு அறிவித்தார்கள். 23 அப்பொழுது மோசே அவர்களிடம், “யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்டது இதுவே: நாளைய தினம் ஓய்ந்திருக்கும் ஒரு நாளாக யெகோவாவுக்குப் பரிசுத்த ஓய்வுநாளாய் இருக்கவேண்டும். எனவே, இன்றே சுடவேண்டியதை சுட்டு, அவிக்கவேண்டியதை அவித்துக்கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிட்டபின் மீதியானதை காலைவரை வையுங்கள்” என்றான்.
24 மோசே கட்டளையிட்டபடியே காலைவரை அதைச் சேமித்து வைத்தார்கள். அது நாற்றமெடுக்கவோ, புழுப்பிடிக்கவோ இல்லை. 25 அப்பொழுது மோசே இஸ்ரயேலரிடம், “இன்றைக்கே அதைச் சாப்பிடுங்கள். ஏனெனில் இன்றைய நாள் யெகோவாவுக்குரிய ஓய்வுநாளாய் இருக்கிறது. இன்று நீங்கள் எதையும் நிலத்திலே காணமாட்டீர்கள். 26 நீங்கள் ஆறு நாட்களும் அதைச் சேர்க்கவேண்டும். ஓய்வுநாளாகிய ஏழாம் நாளிலே அது கிடைக்காது” என்றான்.
27 ஆனாலும் மக்களில் சிலர் ஏழாம்நாள் அவற்றைச் சேர்ப்பதற்குப் போனபோது, அவர்கள் ஒன்றையும் காணவில்லை. 28 அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீங்கள் எவ்வளவு காலத்திற்கு என் கட்டளைகளையும், அறிவுறுத்தல்களையும் கைக்கொள்ள மறுப்பீர்கள்? 29 யெகோவா உங்களுக்கு ஓய்வுநாளைக் கொடுத்திருப்பதை மனதில் வைத்திருங்கள். அதனால்தான் ஆறாம்நாளில் இரண்டு நாட்களுக்குரிய அப்பத்தை அவர் உங்களுக்குக் கொடுக்கிறார். ஆகையால் ஏழாம்நாளில் நீங்கள் ஒவ்வொருவரும் இருக்கும் இடத்திலேயே இருக்கவேண்டும், ஒருவரும் வெளியே போகக்கூடாது” என்றார். 30 எனவே மக்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.
31 இஸ்ரயேல் மக்கள் அந்த அப்பத்தை மன்னா என்று அழைத்தார்கள். அது கொத்தமல்லி விதையைப்போல வெள்ளையாகவும், தேனில் தயாரித்த பணியாரத்தின் சுவையுள்ளதாகவும் இருந்தது. 32 அப்பொழுது மோசே இஸ்ரயேல் மக்களிடம், “யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்டிருப்பது இதுவே: நான் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தபோது, நான் உங்களுக்குப் பாலைவனத்தில் சாப்பிடக்கொடுத்த அப்பத்தை, வரப்போகும் உங்கள் தலைமுறையினருக்குக் காட்டுவதற்காக, அந்த மன்னாவில் ஒரு ஓமர் அளவு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார்” என்றான்.
33 மேலும் மோசே ஆரோனிடம், “நீ ஒரு ஜாடியை எடுத்து, ஒரு ஓமர் அளவு மன்னாவை அதற்குள் போடு. பின், வரப்போகும் தலைமுறையினருக்காக யெகோவாவுக்கு முன்பாக அதை வை” என்றான்.
34 யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் வரப்போகும் காலங்களுக்காக மன்னாவை எடுத்து சாட்சிப்பெட்டியின்§ முன் வைத்தான். 35 இஸ்ரயேலர் தாங்கள் குடியேறவேண்டிய நாட்டிற்கு வரும்வரைக்கும் நாற்பது வருடமாக மன்னாவையே சாப்பிட்டார்கள். கானானின் எல்லைக்கு வரும்வரை மன்னாவையே சாப்பிட்டார்கள்.
36 ஒரு ஓமர் என்பது எப்பா அளவின் பத்தில் ஒரு பங்கு ஆகும்.
* 16:5 16:5 ஆறாம்நாளிலோ ஒவ்வொரு வாரத்தின் ஆறாவது நாள். 16:16 16:16 அதாவது, சுமார் 1.4 கிலோகிராம் 16:31 16:31 மன்னா என்பது எபிரெயத்தில் இது என்ன? என்று அர்த்தம். வச 15 பார்க்கவும். § 16:34 16:34 சாட்சிப்பெட்டியின் என்பது உடன்படிக்கைப்பெட்டி என்பதாகும். இது 25:10-12 இல் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.