3
விசுவாசமும் மோசேயின் சட்டமும்
மூடர்களான கலாத்தியரே, உங்களை வசியப்படுத்தியது யார்? இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையுண்டது உங்கள் கண்களுக்கு முன்பாகவேத் தெளிவாக உங்களுக்கு காண்பிக்கவில்லையா? நான் உங்களிடமிருந்து ஒரு காரியத்தை அறிய விரும்புகிறேன்: நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டது மோசேயின் சட்டத்தின் கிரியையினாலா அல்லது நற்செய்தியைக் கேட்டு விசுவாசித்ததினாலா? நீங்கள் இவ்வளவு மூடத்தனமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா? ஆவியானவர் மூலமாய் தொடங்கிய நீங்கள், இப்பொழுது மாம்சத்தினால் முடிவுபெறப் போகிறீர்களா? நீங்கள் அவ்வளவு பாடுகளை அனுபவித்தீர்கள், அத்தனையும் வீண்தானா? அவை வீணாய்ப் போகலாமா? இறைவன் பரிசுத்த ஆவியானவரை உங்களுக்குக் கொடுக்கிறதும், உங்கள் மத்தியில் அற்புதங்களைச் செய்கிறதும், மோசேயின் சட்டத்தின் கிரியையினாலா, அல்லது நற்செய்தியைக் கேட்டு விசுவாசிப்பதனாலா? ஆபிரகாமைக்குறித்து சற்று யோசித்துப் பாருங்கள்: அவன் இறைவனை விசுவாசித்தான், அந்த விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.*
இதிலிருந்து, விசுவாசிக்கிறவர்களே ஆபிரகாமுடைய பிள்ளைகளாய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ளுங்கள். இறைவன் விசுவாசத்தினாலே யூதரல்லாத மக்களை நீதிமான்களாக்குவார் என்று வேதவசனத்தில் முன்னமே எழுதப்பட்டிருந்தது. அதனாலேயே, “எல்லா நாடுகளும் உன் மூலமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள்” என்று ஏற்கெனவே ஆபிரகாமுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது. எனவே விசுவாசமுள்ளவர்கள் விசுவாசத்தின் மனிதனான ஆபிரகாமுடனேகூட ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
10 மோசேயின் சட்டத்தின் கிரியைகளை நம்பிக்கொண்டிருக்கும் எல்லாரும் சாபத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள். ஏனெனில், “மோசேயின் சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் கைக்கொள்ளாமல் இருக்கும், ஒவ்வொருவனும் சபிக்கப்பட்டவன்” என்று எழுதியிருக்கிறது. 11 எனவே மோசேயின் சட்டத்தால் இறைவனுக்குமுன் ஒருவனும் நீதிமானாக்கப்படுவதில்லை என்பது தெளிவாகிறது. எனவேதான், “நீதிமான்கள் விசுவாசத்தினாலே வாழ்வார்கள்”§ என்றும் எழுதியிருக்கிறது. 12 ஆகவே மோசேயின் சட்டமோ விசுவாசத்தைச் சார்ந்ததல்ல; வேதவசனம் சொல்கிறபடி, “மோசேயின் சட்டத்தில் சொல்லப்பட்டவைகளைச் செய்கிறவனே, அவற்றால் வாழ்வு பெறுவான்.* 13 மரத்திலே தொங்கவிடப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன்” என்று எழுதியிருக்கிறபடியே கிறிஸ்துவோ நமக்காக சாபமாகி, மோசேயின் சட்டத்தின் சாபத்திலிருந்து நம்மை மீட்டுக்கொண்டார். 14 ஆபிரகாமின் ஆசீர்வாதம், கிறிஸ்து இயேசுவின் மூலமாய் யூதரல்லாத மக்களுக்கும் கிடைக்கும்படியாக அவர் நம்மை மீட்டுக்கொண்டு, இறைவன் வாக்குப்பண்ணிய பரிசுத்த ஆவியானவரை நாமும் விசுவாசத்தின்மூலமாய் பெற்றுக்கொள்ளும்படிச் செய்தார்.
மோசேயின் சட்டமும் வாக்குத்தத்தமும்
15 பிரியமானவர்களே, அன்றாட வாழ்க்கையிலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். ஒரு உடன்படிக்கை உறுதிசெய்யப்பட்டபின்பு, ஒருவரும் அதிலிருந்து எதையும் நீக்கவும் முடியாது அதனுடன் எதையும் சேர்த்துக்கொள்ளவும் முடியாது. 16 அதுபோலத்தான், வாக்குத்தத்தங்கள் ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் கொடுக்கப்பட்டன. வேதவசனம் “சந்ததிகளுக்கு,” என்று பலரைக்குறித்துச் சொல்லாமல், “உன்னுடைய சந்ததிக்கு,” என்று ஒருவரைக் குறித்துச் சொல்கிறது. அந்தச் சந்ததி கிறிஸ்துவே. 17 நான் சொல்லுவது என்னவென்றால்: முன்னதாகவே இறைவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்து, வாக்குத்தத்தத்தையும் கொடுத்தார். இதற்கு நானூற்று முப்பது வருடங்களுக்குப்பின் வந்த மோசேயின் சட்டம், முன்பு கொடுக்கப்பட்ட அந்த உடன்படிக்கையைத் தள்ளிவைக்கவோ, அந்த வாக்குத்தத்தத்தைப் பயனற்றதாக்கிவிடவோ முடியாது. 18 இறைவனால் கொடுக்கப்பட்ட உரிமைச்சொத்து மோசேயின் சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டால், அது வாக்குத்தத்தத்தின் அடிப்படையில் கொடுக்கப்படவில்லை என்றே அர்த்தமாகிறது. ஆனால் இறைவனோ, தம்முடைய கிருபையினால் அந்த உரிமைச்சொத்தை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தின்படியே கொடுத்தார்.
19 அப்படியானால், மோசேயின் சட்டம் கொடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன? மீறுதல்களை எடுத்துக்காட்டவே வாக்குத்தத்தத்தால் குறிப்பிடப்பட்ட அந்த ஆபிரகாமின் சந்ததியானவர் வரும்வரைக்கும் மோசேயின் சட்டம் நீட்டிக்கப்பட்டது. இறைவன் மோசேயை நடுவராக வைத்து, இறைத்தூதர்கள் மூலமாய் மோசேயின் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். 20 எப்படியும் நடுவர் ஒரு குழுவுக்கு மட்டும் சார்பாக இருப்பதில்லை; ஆனால் இறைவன் ஒருவரே.
21 அப்படியானால் மோசேயின் சட்டம் இறைவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமானதா? ஒருபோதும் இல்லை. மோசேயின் சட்டம் வாழ்வை அளிக்கும்படி கொடுக்கப்பட்டிருந்தால், நிச்சயமாக மோசேயின் சட்டத்தின் மூலமாகவே நீதி வந்திருக்கும். 22 ஆனால் வேதவசனமோ, முழு உலகமும் பாவத்தின்கீழ் கைதியாய் இருப்பதாகவே அறிவிக்கிறது. அதனால், கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தமானது, இயேசுகிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின்மூலமாய் விசுவாசிக்கிறவர்களுக்கே கொடுக்கப்படுகிறது.
இறைவனின் பிள்ளைகள்
23 இந்த விசுவாசம் வருவதற்கு முன்னதாக, நாம் மோசேயின் சட்டத்தினால் காவலில் வைக்கப்பட்டிருந்தோம். நாம் விசுவாசம் வெளிப்படும் வரைக்குமே, இப்படி இருந்தோம். 24 அதனால் நாம் விசுவாசத்தினால் நீதிமான்கள் ஆக்கப்படும்படி, மோசேயின் சட்டம் நம்மைக் கிறிஸ்துவிடம் வழிநடத்தும் வழிகாட்டியாய் இருந்தது. 25 இப்பொழுது விசுவாசம் வந்துவிட்டதனால், இனிமேலும் நாம் வழிகாட்டியாகிய மோசேயின் சட்டத்தின்கீழ் இல்லை.
26 நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தின்மூலமாய், இறைவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறீர்கள். 27 ஏனெனில் கிறிஸ்துவுக்குள்ளாக திருமுழுக்கு பெற்றுக்கொண்ட நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டிருக்கிறீர்கள். 28 நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவில் ஒன்றாய் இருப்பதனால், உங்களிடையே யூதன் என்றோ, கிரேக்கன் என்றோ, அடிமை என்றோ சுதந்திரம் உடையவன் என்றோ, ஆண் என்றோ, பெண் என்றோ வித்தியாசம் இல்லை. 29 நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருந்தால், நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாராயும் இருக்கிறீர்கள். வாக்குத்தத்தத்தின்படியே உரிமையாளர்களாகவும் இருக்கிறீர்கள்.
* 3:6 3:6 ஆதி. 15:6 3:8 3:8 ஆதி. 12:3; 18:18; 22:18 3:10 3:10 உபா. 27:26 § 3:11 3:11 ஆப. 2:4 * 3:12 3:12 லேவி. 18:5 3:13 3:13 உபா. 21:23 3:16 3:16 ஆதி. 12:7; 13:15; 24:7