2
ஏழாம் மாதம் இருபத்தோராம் நாள், யெகோவாவின் வார்த்தை ஆகாய் என்னும் இறைவாக்கினன் மூலமாக வந்தது. “நீ யூதாவின் ஆளுநரான செயல்தியேலின் மகன் செருபாபேலிடமும், தலைமை ஆசாரியனான யெகோசாதாக்கின் மகன் யோசுவாவிடமும், மக்களில் மீதியானோரிடமும் பேசி கேட்கவேண்டியதாவது: இந்த ஆலயத்தின் முந்திய மகிமையை கண்டவர்கள் யாராவது, உங்களுக்குள்ளே இருக்கிறார்களா? இப்பொழுது இது உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? உங்களுக்கு இது ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை அல்லவா? ஆயினும் செருபாபேலே, நீ இப்பொழுது திடமனதாயிரு என யெகோவா அறிவிக்கிறார். யெகோசாதாக்கின் மகனும் தலைமை ஆசாரியனுமாகிய யோசுவாவே, நீயும் திடமனதாயிரு; நாட்டிலுள்ள மக்களே, நீங்கள் எல்லோரும் திடமனதாயிருந்து வேலையை செய்யுங்கள் என யெகோவா அறிவிக்கிறார். ஏனெனில் நான் உங்களுடனே இருக்கிறேன், என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகையில் இதுவே நான் உங்களுடன் செய்த உடன்படிக்கை. என் ஆவியானவர் உங்கள் மத்தியில் தங்கியிருக்கிறார். பயப்படாதிருங்கள்.
“சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘இன்னும் கொஞ்சக்காலத்தில் இன்னும் ஒருமுறை நான் வானத்தையும், பூமியையும் அசைப்பேன், கடலையும், வெட்டாந்தரையையும் அசைப்பேன். எல்லா நாடுகளையும் அசைப்பேன், எல்லா மக்களாலும் விரும்பப்படுகிறவர் வருவார், நான் இந்த ஆலயத்தை என் மகிமையால் நிரப்புவேன்,’ என சேனைகளின் யெகோவா சொல்கிறார். ‘வெள்ளியும் என்னுடையதே, தங்கமும் என்னுடையதே,’ என சேனைகளின் யெகோவா சொல்கிறார். ‘ஆயினும் முந்திய ஆலயத்தின் மகிமையைவிட இந்த ஆலயத்தின் மகிமை பெரியதாயிருக்கும்,’ என சேனைகளின் யெகோவா சொல்கிறார். ‘இந்த இடத்திலே நான் என் சமாதானத்தைக் கொடுப்பேன்,’ என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.”
கறைப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதம்
10 தரியு அரசாண்ட இரண்டாம் வருடம் ஒன்பதாம் மாதம் இருபத்து நான்காம் நாள், ஆகாய் என்னும் இறைவாக்கினனுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. 11 “சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘நீ ஆசாரியர்களிடம், சட்டம் சொல்வது என்ன? என்று கேள்: 12 உங்களில் ஒருவன் தன் அங்கியின் மடிப்பில் அர்ப்பணிக்கப்பட்ட இறைச்சியை கொண்டுபோகையில், அங்கியின் மடிப்பு, அப்பத்தையோ சமைக்கப்பட்ட உணவையோ திராட்சை இரசத்தையோ எண்ணெயையோ வேறு ஏதாவது தின்பண்டத்தையோ தொட்டால் அது பரிசுத்தமாக்கப்படுமா?’ ” என்று கேட்டான்.
அதற்கு ஆசாரியர்கள், “இல்லை” என விடையளித்தனர்.
13 அப்பொழுது ஆகாய், “பிணத்தைத் தொட்டதால் அசுத்தமான ஒருவன், இவற்றில் எதையாகிலும் தொட்டால், அது அசுத்தமாகுமா?” என்று கேட்டான்.
அதற்கு ஆசாரியர்கள், “ஆம், அசுத்தமாகும்” என்றார்கள்.
14 அப்பொழுது ஆகாய் அவர்களிடம் சொன்னதாவது, “ ‘அப்படியே இந்த மக்களும், இந்த நாடு முழுவதும் என் பார்வையில் இருக்கிறார்கள்,’ என யெகோவா அறிவிக்கிறார். ‘அவர்கள் எதைச் செய்தாலும், அவர்கள் எதைச் செலுத்தினாலும் அவை எல்லாம் அவருக்கு அசுத்தமுள்ளதாய் இருக்கின்றன.
15 “ ‘இப்போதாவது, இதை மிகக் கவனமாய் சிந்தியுங்கள். யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டும்படி, அஸ்திபாரம் போட்டும் ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்படும் முன்பு நிலைமை எவ்வாறு இருந்தது என சிந்தித்துப் பாருங்கள். 16 இருநூறு கிலோகிராம் தானியக் குவியலுக்கு அருகில் ஒருவன் வந்தபோது, அங்கு பத்து நூறு கிலோகிராம் மட்டுமே இருந்தன. திராட்சை ஆலையின் தொட்டிக்கு ஒருவன் ஐம்பது குடங்கள் திராட்சை இரசம் மொள்ள வந்தபோது, அங்கு இருபது குடங்கள் மட்டுமே இருந்தன. 17 நான், நீங்கள் கையிட்டுச் செய்த பயிர்களை இலைசுருட்டி வியாதியினாலும், பூஞ்சண வியாதியினாலும், பனிக்கட்டி மழையினாலும் அழித்தேன். அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை,’ என யெகோவா அறிவிக்கிறார். 18 ‘யெகோவாவின் ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்த நாளிலிருந்து, ஒன்பதாம் மாதம் இருபத்து நான்காம் நாளாகிய இந்த நாள்வரை, நடந்தவற்றைக் கவனமாய் சிந்தித்துப் பாருங்கள். 19 களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் ஏதாவது மீதியாயிருக்கிறதா? திராட்சைக்கொடியும், அத்திமரமும், மாதுளஞ்செடியும், ஒலிவமரமும் இதுவரை காய்க்கவில்லையே.
“ ‘ஆனால், இன்றுமுதல் உங்களை நான் ஆசீர்வதிப்பேன்.’ ”
செருபாபேல் யெகோவாவின் முத்திரை மோதிரம்
20 அம்மாதம் இருபத்து நான்காம் தேதியாகிய அதேநாளிலே, இரண்டாம் முறையும், இறைவாக்கினன் ஆகாய் என்பவனுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது: 21 “யூதாவின் ஆளுநரான செருபாபேலுக்கு நீ சொல்லவேண்டியதாவது, நான் வானத்தையும், பூமியையும் அசைப்பேன். 22 அரச அரியணைகளையும் கவிழ்ப்பேன். அந்நிய அரசுகளின் வல்லமையையும் சிதறடிப்பேன். தேர்களையும், அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப் போடுவேன்; குதிரைகளுடன் அதில் ஏறிச்செல்வோர் ஒவ்வொருவரும் தங்கள் சகோதரனின் வாளினால் வெட்டுண்டு விழுவார்கள்.
23 “சேனைகளின் யெகோவா அறிவிக்கிறதாவது, ‘என் பணியாளனாகிய செருபாபேலே! செயல்தியேலின் மகனே, அப்போது நான் உன்னை எடுத்து என் முத்திரை மோதிரத்தைப் போலாக்குவேன் என யெகோவா அறிவிக்கிறார், ஏனெனில் நானே உன்னைத் தெரிந்துகொண்டேன்,’ என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.”