4
இஸ்ரயேலுக்கு எதிரான குற்றச்சாட்டு
இஸ்ரயேலரே, நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்;
நாட்டில் வாழ்கிற உங்களுக்கு எதிராகக் கொண்டுவரும்படி,
ஒரு குற்றச்சாட்டு யெகோவாவிடம் இருக்கிறது:
நாட்டில் உண்மையும் அன்பும் இல்லை,
இறைவனை அறியும் அறிவு இல்லை.
அங்கே சாபமிடுதலும், பொய்யும், கொலையும்,
களவும், விபசாரமும் மட்டுமே உண்டு;
அவர்கள் எல்லைமீறிப் போகின்றனர்,
இரத்தப்பழிகளோடே இரத்தப்பழிகள் சேருகின்றது.
இதனால் நாடு துக்கத்தோடிருக்கிறது,
அங்கு வாழும் யாவரும் நலிந்துபோகிறார்கள்.
வெளியின் மிருகங்களும், ஆகாயத்துப் பறவைகளும்,
கடலில் உள்ள மீன்களும் சாகின்றன.
 
ஆசாரியர்களே நீங்கள் ஒரு குற்றச்சாட்டையும் கொண்டுவர வேண்டாம்.
ஒருவன் இன்னொருவனைச் குற்றஞ்சாட்டவும் வேண்டாம்.
ஏனெனில் உங்கள் மக்கள் ஆசாரியனுக்கு எதிராகக்
குற்றச்சாட்டுகளைக் கொண்டுவருகிறவர்கள் போலிருக்கிறார்கள்;
ஆசாரியர்களே, என் வழக்கு உங்களோடுதான்.
நீங்கள் இரவிலும் பகலிலும் இடறிவிழுகிறீர்கள்;
இறைவாக்கினரும் உங்களுடன் விழுகிறார்கள்.
எனவே நான் உங்கள் தாயை, இஸ்ரயேல் தேசத்தை அழிப்பேன்.
எனது மக்கள் அறிவில்லாததினால் அழிந்துபோகிறார்கள்.
 
“நீங்கள் அறிவைப் புறக்கணித்திருக்கிறீர்கள்,
அதனால் நானும் உங்களை என் ஆசாரியர்களாய் இராதபடிக்கு புறக்கணிப்பேன்.
நீங்கள் உங்கள் இறைவனின் சட்டத்தை மறந்தபடியால்,
நானும் உங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிக்க மறந்துவிடுவேன்.
ஆசாரியர்கள் அநேகராய்ப் பெருகியபோது,
அவர்கள் எனக்கெதிராக அதிகமாகப் பாவம் செய்கிறார்கள்;
அவர்கள் தங்களுடைய மகிமையான இறைவனை
வெட்கக்கேடான பாகால் தெய்வத்திற்கு மாற்றினார்கள்.
எனது மக்களின் பாவத்தில் ஆசாரியர்கள் தின்று பிழைத்து,
அவர்களது கொடுமையில் ஆவலாயிருக்கிறார்கள்.
அக்காலத்தில்: மக்களைப்போலவே ஆசாரியருக்கும் நேரிடும்.
எனவே அவர்களின் தீயவழிகளுக்காக நான் அவர்கள் இரு சாராரையும் தண்டிப்பேன்.
அவர்கள் செயல்களுக்கேற்ப அவர்களுக்கு நான் பதிலளிப்பேன்.
 
10 “அவர்கள் எல்லோரும் சாப்பிடுவார்கள், ஆனால் திருப்தியடையமாட்டார்கள்;
அவர்கள் வேசித்தனத்தில் ஈடுபட்டாலும் பலுகமாட்டார்கள்;
ஏனெனில் அவர்கள் தங்கள் வேசித்தனத்திற்காக யெகோவாவைக் கைவிட்டார்கள்.
11 புது மற்றும் பழைய திராட்சை இரசம்
எனது மக்களின்
விளங்கிக்கொள்ளும் ஆற்றலை பரித்துவிட்டது.
12 எனது மக்கள் மர விக்கிரகத்திடம் ஆலோசனையைக் கேட்கிறார்கள்;
அவர்களுடைய கோல் பதில் தருமென்றிருக்கிறார்கள்.
வேசித்தனத்தின் ஆவி அவர்களை வழிவிலகச் செய்கிறது;
அவர்கள் தங்கள் இறைவனுக்கு உண்மையற்றவர்களாய் இருக்கிறார்கள்.
13 அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு,
குன்றுகளிலே இன்பமான நிழல் தருகின்ற கர்வாலி, புன்னை,
தேவதாரு ஆகிய மரங்களின் கீழும்
தகன காணிக்கைகளைப் பலியிடுகிறார்கள்.
எனவே உங்கள் மகள்கள் வேசித்தனத்திற்கும்,
மருமகள்கள் விபசாரத்திற்கும் திரும்புகிறார்கள்.
 
14 “உங்கள் மகள்கள் வேசித்தனத்திற்குத் திரும்பும்போதும்,
மருமகள்கள் விபசாரம் செய்யும்போதும்
நான் அவர்களைத் தண்டிக்கமாட்டேன்.
ஏனெனில் ஆண்களும் வேசிகளுடன் பாலுறவுகொண்டு,
கோவில் வேசிகளுடன் பலியிடுகிறார்கள்,
அறிவில்லாத அம்மக்கள்
சீரழிந்து போவார்கள்.
 
15 “இஸ்ரயேலே, நீ விபசாரம் செய்தாலும்,
யூதா நாடாகிலும் குற்றமற்றதாயிருக்கட்டும்.
 
“நீ கில்காலுக்குப் போகவேண்டாம்;
பெத்தாவேனுக்கும் போகவேண்டாம்.
‘யெகோவா இருப்பது நிச்சயமெனில்’ என்று ஆணையிடவும் வேண்டாம்.
16 இஸ்ரயேலரோ அடங்காத
இளம் பசுவைப்போல் பிடிவாதமாயிருக்கிறார்கள்.
அப்படியிருக்க, யெகோவா எப்படி புல்வெளியில்
செம்மறியாட்டுக் குட்டிகளை மேய்ப்பதுபோல அவர்களை மேய்க்க முடியும்?
17 எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்துவிட்டான்;
அவனைத் தனியே விட்டுவிடு!
18 அவர்களுடைய மதுபானங்கள் முடிந்துபோனாலும்,
அவர்கள் எப்போதும் தங்கள் வேசித்தனத்தைத் தொடர்கிறார்கள்;
அவர்களுடைய ஆளுநர்கள் வெட்கக்கேடான வழிகளை ஆவலுடன் விரும்புகிறார்கள்.
19 சுழல் காற்று அவர்களை அடித்துக் கொண்டுபோகும்,
அவர்கள் விக்கிரகங்களுக்குப் படைக்கும் பலிகள்
அவர்களுக்கு வெட்கத்தையே கொண்டுவரும்.