6
மனமாறாத இஸ்ரயேல்
வாருங்கள், நாம் யெகோவாவிடம் திரும்புவோம்.
அவர் நம்மைக் காயப்படுத்தினார்,
ஆயினும், அவரே நம்மை சுகப்படுத்துவார்.
அவர் நம்மை நொறுக்கினார்,
ஆயினும், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.
நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருக்கும்படி
இரண்டு நாட்களுக்குப்பின்பு அவர் நமக்குப் புத்துயிரூட்டுவார்;
மூன்றாம் நாளிலோ நம்மை எழுப்புவார்.
நாம் யெகோவாவை அறிந்துகொள்வோமாக;
நாம் தொடர்ந்து அவரைப்பற்றி அறிய முயற்சிப்போமாக.
சூரியன் உதிப்பது நிச்சயம்போல,
அவர் தோன்றுவார் என்பதும் நிச்சயம்.
அவர் மழையைப்போலவும்,
பூமியை நனைக்கும் வசந்தகால மழையைப்போல் வருவார்.
 
எப்பிராயீமே, நான் உன்னை என்ன செய்வேன்?
யூதாவே, நான் உன்னை என்ன செய்வேன்?
உங்களது அன்பு காலையில் தோன்றும் மேகம்போலவும்,
விடியும்போது மறைந்துபோகும் பனிபோலவும் இருக்கிறது.
அதனால்தான் நான் இறைவாக்கினர்மூலம் உங்களை வெட்டினேன்;
என் வாயின் வார்த்தையினால் உங்களைக் கொன்றேன்;
என் நியாயத்தீர்ப்பு உங்கள்மேல் ஒளிபோல் வெளிப்படும்.
நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்;
தகன காணிக்கைகளை அல்ல, இறைவனை அறியும் அறிவையே விரும்புகிறேன்.
ஆனால், ஆதாமைப்போல் அவர்கள் என் உடன்படிக்கையை மீறி,
அங்கே எனக்கு துரோகம் பண்ணினார்கள்.
கீலேயாத் கொடுமையானவர்களின் பட்டணம்;
அது இரத்தம் தோய்ந்த அடிச்சுவடுகளால் கறைப்பட்டிருக்கிறது.
கொள்ளையர் கூட்டம் ஒருவனுக்காகப் பதுங்கிக் காத்திருப்பதுபோல,
ஆசாரியர்களின் கூட்டமும் இருக்கிறார்கள்.
அவர்கள் சீகேமுக்குப் போகும் வழியிலே கொலைசெய்து,
வெட்கக்கேடான குற்றங்களை செய்கிறார்கள்.
10 இஸ்ரயேல் குடும்பத்தாரே, உங்கள் நாட்டில் கொடூரமான செயலைக் கண்டேன்;
எப்பிராயீமோ வேசித்தனத்தில் ஈடுபட்டிருக்கிறது,
இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கிறது.
 
11 யூதாவே, உனக்கும்
ஒரு அறுவடை நியமிக்கப்பட்டிருக்கிறது.
 
“என் மக்களின் செல்வங்களை நான் அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கும்போது,