12
யோபு
பின்பு யோபு மறுமொழியாக சொன்னது:
“நீங்கள் பெரியவர்கள், சந்தேகம் இல்லை.
ஞானமும் உங்களுடனே செத்துவிடும்!
எனக்கும் உங்களைப்போல் ஒரு மனம் உண்டு;
நான் உங்களுக்குக் குறைந்தவனல்ல;
இவற்றையெல்லாம் அறியாதவன் யார்?
 
“நான் இறைவனை நோக்கிக் கூப்பிடுவேன், அவர் பதிலளிப்பார்;
நான் நீதிமானும், குற்றமற்றவனுமாய் இருந்தபோதிலும்,
என் நண்பர்களின் சிரிப்பிற்கு ஆளாகிவிட்டேன்.
சுகவாழ்வுள்ள மனிதர்கள் அவலத்தை வெறுக்கிறார்கள்;
அவர்கள் அது, கால் இடறுகிறவர்களின் விதி என்று எண்ணுகிறார்கள்.
திருடர்களுடைய கூடாரங்கள் குழப்பமின்றி இருக்கின்றன;
தெய்வத்தைத் தங்கள் கைகளிலேந்திச் செல்கிறவர்களும்,
இறைவனைக் கோபமூட்டுகிறவர்களும் பாதுகாப்பாயிருக்கிறார்கள்.
 
“ஆனால் மிருகங்களைக் கேளுங்கள்; அவை உங்களுக்குப் போதிக்கும்,
ஆகாயத்துப் பறவைகளைக் கேளுங்கள்; அவை உங்களுக்குச் சொல்லித் தரும்.
பூமியுடன் பேசுங்கள், அது உங்களுக்குப் போதிக்கும்.
அல்லது கடல் மீன்களே உங்களுக்கு அறிவிக்கட்டும்.
யெகோவாவின் கரமே இதைச் செய்தது
என்பதை இவற்றுள் எது அறியாதிருக்கிறது?
10 ஒவ்வொரு உயிரினங்களின் உயிரும்,
எல்லா மனிதரின் சுவாசமும் அவரின் கையிலேயே இருக்கின்றன.
11 நாவு உணவை ருசிப்பதுபோல,
காது சொற்களைச் சோதிக்கிறது அல்லவோ?
12 முதியோரிடத்தில் ஞானம் இருக்கும்.
வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
 
13 “ஞானமும் வல்லமையும் இறைவனுக்கு உரியன;
ஆலோசனையும், விளங்கும் ஆற்றலும் அவருடையனவே.
14 அவர் இடித்தால் கட்டமுடியாது;
அவர் சிறைப்படுத்தும் மனிதனை விடுவிக்கவும் முடியாது.
15 தண்ணீரை அவர் தடுத்தால், அங்கு வறட்சி உண்டாகிறது;
அவர் தண்ணீரைத் திறந்துவிடும்போது அது நாட்டை அழிக்கிறது.
16 பெலமும் வெற்றியும் அவருக்குரியன;
ஏமாற்றுகிறவனும், ஏமாறுகிறவனுமான இருவருமே அவருடையவர்கள்.
17 அவர் ஆலோசகர்களின் ஞானத்தை அகற்றி அனுப்பி விடுகிறார்;
நீதிபதிகளையும் மூடராக்குகிறார்.
18 அரசர்களுடைய கட்டுகளை அவர் அவிழ்த்து,
அவர்கள் இடுப்புகளில் துணியைக் கட்டுகிறார்.
19 அவர் ஆசாரியர்களை நீக்கி,
நீண்டகால அதிகாரிகளைக் கவிழ்க்கிறார்.
20 அவர் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களின் உதடுகளை மவுனமாக்குகிறார்;
முதியோரின் நிதானத்தையும் எடுத்துப் போடுகிறார்.
21 அவர் உயர்குடி மக்கள்மேல் இகழ்ச்சியை ஊற்றி
பலவானைப் பலமிழக்கச் செய்கிறார்.
22 அவர் இருளின் ஆழ்ந்த செயல்களை வெளிப்படுத்துகிறார்;
இருளின் ஆழத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார்.
23 அவர் மக்களைப் பெரிதாக்கி, அவர்களை அழிக்கிறார்;
மக்களை விரிவாக்கி அவர்களைச் சிதறப்பண்ணுகிறார்.
24 பூமியின் தலைவர்களின் சிந்திக்கும் ஆற்றலை இழக்கப்பண்ணுகிறார்;
பாதையில்லாத பாழிடங்களில் அவர்களை அலையப்பண்ணுகிறார்.
25 அவர்கள் வெளிச்சமில்லாமல் இருளில் தடவித் திரிகிறார்கள்;
வெறியரைப்போல் அவர்களைத் தள்ளாட வைக்கிறார்.