23
யோபு பேசுதல்
அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது:
“இன்றும் என் முறையீடு கசப்பானதாக இருக்கிறது;
நான் வேதனையுடன் புலம்பியும், அவருடைய கரங்கள் என்மேல் பாரமாயிருக்கின்றன.
அவரை எங்கே கண்டுகொள்ளலாம் என்று மாத்திரம் எனக்குத் தெரிந்தாலோ,
அவரின் உறைவிடத்திற்கு என்னால் போகக் கூடுமானாலோ,
நான் என் வழக்கை அவர் முன்னால் வைப்பேன்;
என் வாயை விவாதங்களால் நிரப்புவேன்.
அவர் எனக்கு என்ன பதில் சொல்வார் என்பதை அறிந்து,
அவர் சொல்வதை யோசித்துப் பார்ப்பேன்.
அவர் தமது மிகுந்த வல்லமையினால் என்னை எதிர்ப்பாரோ?
இல்லை, அவர் எனக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவரமாட்டார்.
நேர்மையானவன் அவருக்குமுன் தன் வழக்கைக் கொண்டுவரலாம்;
நானும் என் நீதிபதியிடமிருந்து என்றென்றும் விடுதலை பெறுவேன்.
 
“ஆனால் நான் கிழக்கேபோனால் அங்கே அவர் இல்லை;
மேற்கே போனாலும் நான் அவரைக் காணவில்லை.
அவர் வடக்கிலே வேலையாயிருக்கும்போதும் நான் அவரைக் காணவில்லை;
அவர் தெற்கே திரும்பும்போதும் ஒரு நொடிப்பொழுதுகூட நான் அவரைக் காணவில்லை.
10 ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்;
அவர் என்னைச் சோதித்தபின், நான் தங்கமாய் விளங்குவேன்.
11 என் பாதங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றின;
நான் விலகாமல் அவருடைய வழியையே கடைப்பிடித்திருக்கிறேன்.
12 அவருடைய உதடுகளின் கட்டளைகளிலிருந்து நான் விலகவில்லை;
என் அன்றாட உணவைவிட, அவருடைய வாயின் வார்த்தைகளை ஒரு பொக்கிஷமாக நான் நினைத்தேன்.
 
13 “ஆனால் அவரோ தன்னிகரற்றவராய் இருக்கிறார்; அவரை யாரால் எதிர்க்கமுடியும்?
தாம் விரும்பும் எதையும் அவர் செய்வார்.
14 எனக்கு திட்டமிட்டிருக்கிறதை அவர் நிறைவேற்றுகிறார்;
இப்படிப்பட்ட அநேக திட்டங்களை அவர் இன்னும் வைத்திருக்கிறார்.
15 அதினால்தான் நான் அவர் முன்பு திகில் அடைகிறேன்;
இவற்றையெல்லாம் சிந்திக்கும்போது அவருக்குப் பயப்படுகிறேன்.
16 இறைவன் என் இருதயத்தை சோர்வடையப் பண்ணினார்;
எல்லாம் வல்லவர் என்னைத் திகிலடையப் பண்ணினார்.
17 அப்படியிருந்தும், நான் இருளினால் மவுனமாக்கப்படவில்லை;
என் முகத்தை மூடும் காரிருளின் நிமித்தம் நான் பேசாதிருக்கவும் இல்லை.