32
எலிகூ பேசுதல்
யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்ததினால், அந்த மூன்று நண்பர்களும் யோபுவுக்கு பதில் சொல்வதை நிறுத்திக்கொண்டார்கள். ஆனால் ராமின் குடும்பத்தைச் சேர்ந்த பூசியனான பரகெயேலின் மகன் எலிகூவுக்குக் கோபமூண்டது; ஏனெனில், யோபு இறைவன் நேர்மையானவர் என்று சொல்வதைவிட, தன்னைத்தானே நேர்மையானவன் என்று சொன்னான். அத்துடன் யோபுவுக்கு அவனுடைய மூன்று நண்பர்கள் மேலும் கோபம் மூண்டது; ஏனெனில், அவர்கள் யோபுவின் தவறை நிரூபிக்க தகுந்த வழியில்லாமல், அவனைக் கண்டனம் செய்தார்கள். எலிகூ யோபுவுடன் பேசுவதற்கு இதுவரையும் காத்திருந்தான்; ஏனெனில் அவர்கள் எல்லோரும் எலிகூவைவிட வயதில் மூத்தவர்கள். ஆனாலும் அந்த மூன்று மனிதரும் மேலும் எதையும் சொல்ல முடியாததைக் கண்ட எலிகூவுக்குக் கோபமூண்டது.
எனவே பூசியனான பரகெயேலின் மகன் எலிகூ பேசத் தொடங்கினான்:
“நான் வயதில் இளையவன்,
நீங்களோ முதியவர்கள்;
அதினால் நான் அறிந்ததைத் துணிந்து
சொல்லப் பயந்திருந்தேன்.
‘முதியோர் பேசட்டும்,
வயது சென்றவர்கள் ஞானத்தைப் போதிக்கட்டும்’ என எண்ணியிருந்தேன்.
மனிதரில் இருக்கும் ஆவியாகிய
எல்லாம் வல்லவரின் சுவாசமே அவனுக்கு அறிவாற்றலைக் கொடுக்கிறது.
முதியோர் மட்டுமே ஞானிகளல்ல;
வயதானவர்கள் மட்டுமே சரியானதை அறிந்தவர்களுமல்ல.
 
10 “ஆகவே, நான் சொல்கிறேன்: எனக்குச் செவிகொடுங்கள்;
எனக்குத் தெரிந்ததை நானும் சொல்வேன்.
11 நீங்கள் பேசிமுடியுமட்டும் நான் காத்திருந்து,
உங்கள் காரணத்தை நான் பொறுத்திருந்து,
உங்களுடைய வாதங்களுக்கு நான் செவிகொடுத்தேன்.
12 நான் உங்கள் சொல்லைக் கவனமாய்க் கேட்டேன்.
ஆனால் உங்களில் ஒருவராகிலும் யோபு பிழையானவன் என நிரூபிக்கவில்லை;
அவனுடைய வாதங்களுக்குப் பதில் சொல்லவுமில்லை.
13 ‘ஞானத்தைக் கண்டுகொண்டோம்; அவனுடைய பிழையை மனிதன் அல்ல,
இறைவனே நிரூபிக்கட்டும்’ என்று நீங்கள் சொல்லவேண்டாம்.
14 யோபு என்னோடு வாதாடவில்லை,
நானும் உங்களின் வாதங்களைக்கொண்டு அவருக்குப் பதிலளிக்கமாட்டேன்.
 
15 “அவர்கள் மனங்கலங்கி மேலும் எதுவும் சொல்ல முடியாதிருக்கிறார்கள்;
அவர்களுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.
16 இப்பொழுது அவர்கள் மவுனமாகி ஒரு பதிலும் அளிக்க முடியாதிருக்கையில்,
நான் பொறுத்திருக்க வேண்டுமோ?
17 இப்பொழுது நானும் பேசியே தீருவேன்;
நானும் எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன்.
18 பேசுவதற்கு என்னிடம் அதிக வார்த்தைகள் உண்டு,
எனக்குள்ளிருக்கும் ஆவி என்னைப் பேசத் தூண்டுகிறது;
19 என் உள்ளம், தோல் குடுவையின் திராட்சரசத்தைப்போலவும்,
வெடிக்கப்போகும் புதுத் தோல் குடுவையைப் போலவும் இருக்கிறது.
20 நான் பேசி ஆறுதலடைய வேண்டும்;
என் உதடுகளைத் திறந்து பதிலளிக்க வேண்டும்.
21 நான் யாருக்கும் பட்சபாதம் காட்டவோ,
எந்த மனிதனுக்கும் முகஸ்துதி செய்யவோ மாட்டேன்.
22 நான் முகஸ்துதியில் திறமையுள்ளவனாய் இருந்தால்,
என்னைப் படைத்தவர் விரைவில் என்னை எடுத்துக்கொள்வாராக.