36
தொடர்ந்து எலிகூ சொன்னதாவது:
“சற்று என்னிடம் பொறுமையாயிரும்,
இறைவன் சார்பாய் நான் சொல்ல வேண்டியவற்றை நான் உமக்குக் காண்பிப்பேன்.
நான் அதிக தூரத்திலிருந்து என் அறிவைப் பெறுகிறேன்;
என்னைப் படைத்தவருக்கே நீதி உரியது என்றும் நிரூபிப்பேன்.
என் வார்த்தைகள் பொய்யானவையல்ல என்று உறுதியாய்க் கூறுகிறேன்;
பூரண அறிவுள்ள நான் உம்மோடு பேசுகிறேன்.
 
“இறைவன் வல்லமையுள்ளவர், ஆகிலும் அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்;
வல்லமையுள்ள அவர் தமது நோக்கத்தில் உறுதியுள்ளவர்.
அவர் கொடியவர்களை உயிர்வாழ விடுவதில்லை;
துன்பப்படுகிறவர்களுக்கோ அவர்களுடைய உரிமைகளை வழங்குகிறார்.
அவர் நேர்மையானவர்கள் மேலிருந்து தன் கண்களை அகற்றுவதில்லை;
அவர் அவர்களை அரசர்களோடு அரியணையில் அமர்த்தி,
அவர்களை என்றைக்கும் மேன்மைப்படுத்துகிறார்.
ஆனால் மனிதர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு,
வேதனையின் கயிற்றினால் இறுக்கப்பட்டிருக்கும்போது,
அவர்கள் செய்தவற்றை இறைவன் அவர்களுக்குக் கூறுவார்.
அதாவது அவர்கள் அகந்தையாய் பாவம் செய்ததை அவர் சொல்வார்.
10 அவர் அவர்கள் சீர்திருந்துதலுக்குச் செவிகொடுத்து,
தங்கள் தீமையிலிருந்து மனந்திரும்ப கட்டளையிடுகிறார்.
11 அவர்கள் கீழ்ப்படிந்து அவருக்குப் பணிசெய்தால்,
அவர்கள் தங்கள் மீதியான நாட்களைச் செல்வத்திலும்,
மீதியான வருஷங்களை மனநிறைவிலும் கழிப்பார்கள்.
12 அடங்கி அவருக்குப் பணிசெய்யாவிட்டால்,
வாளினால் அழிந்து,
அறிவில்லாமலே சாவார்கள்.
 
13 “உள்ளத்தில் இறைவனற்றவர்கள் கோபத்தை வளர்த்துக்கொள்கிறார்கள்;
அவர் அவர்களுக்கு விலங்கிடும்போதும் அவர்கள் உதவிக்காக அழுவதில்லை.
14 அவர்கள் கோவில்களிலிருக்கும் ஆண் விபசாரக்காரர் மத்தியில்
தங்கள் இளமையிலேயே சாவார்கள்.
15 ஆனாலும் துன்பப்படுகிறவர்களை அவர் துன்பத்திலிருந்து விடுவித்து,
அவர்களுடைய வேதனையில் அவர் அவர்களோடு பேசுகிறார்.
 
16 “யோபுவே, இறைவன் உன்னைக் கட்டுப்பாடற்ற விசாலமான இடத்திற்கு கொண்டுவரவும்,
சுவையான உணவுகள் நிறைந்த பந்தியில் அமர்த்தவும்,
வேதனையின் பிடியிலிருந்து உன்னை விடுவிக்கவும் முயற்சிக்கிறார்.
17 கொடியவர்கள்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேறக் காத்திருக்கிறீர்;
நியாயத்தீர்ப்பும் நீதியுமே உம்மை ஆதரிக்கும்.
18 செல்வங்களினால் ஒருவரும் உம்மைக் கவராதபடி எச்சரிக்கையாயிரும்;
பெரிதான இலஞ்சம் உம்மை வழிவிலகிச் செல்ல இடங்கொடாதே.
19 உமது செல்வங்களும் வல்லமையான எல்லா முயற்சிகளும்
நீர் துன்பத்தில் அகப்படாதபடி உம்மைத் தாங்குமோ?
20 மக்களைத் தங்கள் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்வதற்காக
நீர் இரவை வாஞ்சிக்காதிரும்.
21 தீமைசெய்யத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்;
ஏனெனில், நீர் துன்பத்தைவிட தீமையை தெரிந்துகொண்டீர்.
 
22 “இறைவன் தமது வல்லமையில் உயர்த்தப்பட்டிருக்கிறார்.
அவரைப்போல் போதிக்கிறவர் யார்?
23 இறைவனுக்கு அவருடைய வழியைக் குறித்துக் கொடுத்தது யார்?
அல்லது ‘நீர் அக்கிரமம் செய்தீர்’ என்று சொல்லியது யார்?
24 மனிதர்கள் புகழ்ந்து பாடும் பாடல்களால்
அவருடைய செயலை மேன்மைப்படுத்த நினைவுகூரும்.
25 அவர் செய்வதை எல்லா மனிதரும் காண்கிறார்கள்;
அதைத் தூரத்திலிருந்து உற்றுப் பார்க்கிறார்கள்;
26 நமது விளங்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட இறைவன்!
அவருடைய வருடங்களும் எண்ணிட முடியாதவை.
 
27 “அவர் நீர்த்துளிகளை மேலே இழுத்து,
அவற்றை ஆறுகளில் மழையாகப் பெய்யச் செய்கிறார்.
28 மேகங்கள் மழையைப் பொழிகின்றன,
அது மனிதர்மேல் தாரையாய்ப் பொழிகிறது.
29 அவர் மேகங்களை எப்படி பரவுகிறார் என்றும்,
எப்படி முழங்குகிறார் என்றும் யாரால் விளங்கிக்கொள்ள முடியும்?
30 அவர் தமது மின்னலைத் தம்மைச் சுற்றிலும் சிதறப்பண்ணி,
கடலின் ஆழங்களை எப்படி மூடுகிறார் என்று பாரும்.
31 இவ்விதமாகவே அவர் மக்களை ஆளுகைசெய்து,
ஏராளமான உணவையும் கொடுக்கிறார்.
32 அவர் தம் கரங்களை மின்னலினால் நிரப்பி,
குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும்படி அதற்குக் கட்டளையிடுகிறார்.
33 அவருடைய இடிமுழக்கம் வரப்போகும் புயலை அறிவிக்கிறது;
அதின் வருகையை மந்தைகள்கூடத் தெரிவிக்கும்.