3
கானானில் எந்த யுத்தங்களிலும் அனுபவமில்லாத இஸ்ரயேல் மக்களை சோதிப்பதற்கென, யெகோவா விட்டுவைத்த நாடுகளாவன: யுத்தத்தில் முன்னனுபவமில்லாத இஸ்ரயேலரின் சந்ததிகளுக்கு யுத்த முறையைக் கற்றுக்கொடுக்கவே அவர் இவ்வாறு செய்தார். அந்த நாடுகளாவன: ஐந்து பெலிஸ்திய ஆளுநர்கள், எல்லா கானானியர், சீதோனியர், பாகால் எர்மோன் மலை தொடங்கி ஆமாத் வரைக்கும் உள்ள லெபனோன் மலைகளில் வாழ்ந்த ஏவியர்கள் ஆகியோரே. மோசேயின் மூலம் இஸ்ரயேலரின் முற்பிதாக்களுக்கு யெகோவா கொடுத்த அவருடைய கட்டளைகளுக்கு, இஸ்ரயேலர் கீழ்ப்படிகிறார்களா என்று சோதித்துப் பார்ப்பதற்காகவே இவர்கள் விட்டுவைக்கப்பட்டனர்.
இதன்படியே இஸ்ரயேலர் கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர்கள் மத்தியில் வாழ்ந்துவந்தனர். இஸ்ரயேலர் அவர்களுடைய மகள்களைத் தாங்கள் திருமணம் செய்து, தங்கள் மகன்களை அவர்களுடைய மகள்களுக்குத் திருமணம் செய்துகொடுத்து, அவர்களுடைய தெய்வங்களுக்குப் பணிசெய்தார்கள்.
ஒத்னியேல்
இஸ்ரயேலர் யெகோவாவின் பார்வையில் கொடுமையானவற்றைச் செய்தார்கள். அவர்கள் தங்கள் இறைவனாகிய யெகோவாவை மறந்து, பாகாலுக்கும், அசேரா தெய்வத்திற்கும் பணிசெய்தார்கள். இஸ்ரயேலருக்கு எதிராக யெகோவா கோபமடைந்தார். அதனால் அவர் அவர்களை ஆராம் நகராயீமின் அரசன் கூசான் ரிஷாதாயீமின் கையில் விற்றுப்போட்டார். இஸ்ரயேலர் எட்டு வருடங்கள் அவனுக்குக்கீழ் அடங்கி இருந்தனர். ஆனால் இஸ்ரயேலர் யெகோவாவை நோக்கி அழுதபோது, அவர் அவர்களை விடுவிப்பதற்காக விடுதலைவீரனை எழுப்பினார். கேனாசின் மகனும் காலேபின் தம்பியுமான ஒத்னியேலே அவன். அவனே அவர்களை விடுவித்தான். 10 யெகோவாவின் ஆவியானவர் அவன்மேல் வந்தார். அதனால் அவன் இஸ்ரயேலருக்கு நீதிபதியாகி யுத்தத்திற்குப் போனான். யெகோவா மெசொப்பொத்தோமியாவின்* அரசன் கூசான் ரிஷாத்தாவை ஒத்னியேல் கையில் கொடுத்தார். ஒத்னியேல் அவனைத் தோற்கடித்தான். 11 கேனாசின் மகன் ஒத்னியேல் இறக்கும்வரை நாற்பது வருடங்கள் நாடு சமாதானமாக இருந்தது.
ஏகூத்
12 திரும்பவும் இஸ்ரயேலர் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தார்கள், அவர்கள் இந்தத் தீமையைச் செய்ததால் யெகோவா மோவாப்பின் அரசன் எக்லோனை இஸ்ரயேலருக்கு மேலாக பலக்கச் செய்தார். 13 எக்லோன் அம்மோனியரையும், அமலேக்கியரையும் தன்னோடு சேர்த்துக் கொண்டுவந்து இஸ்ரயேலரைத் தாக்கினான். அவர்கள் பேரீச்சமரங்களின் பட்டணத்தைக் கைப்பற்றிக்கொண்டார்கள். 14 இஸ்ரயேலர்கள் பதினெட்டு வருடங்களாக மோவாப் அரசன் எக்லோனுக்குக்கீழ் அடங்கி இருந்தனர்.
15 திரும்பவும் இஸ்ரயேலர் யெகோவாவை நோக்கி அழுதனர். அவர் அவர்களுக்கு ஏகூத் என்னும் ஒரு விடுதலை வீரனைக் கொடுத்தார். இடதுகை பழக்கமுடைய இவன் பென்யமீனியனான கேராவின் மகன். இஸ்ரயேலர் மோவாப் அரசன் எக்லோனுக்கு கப்பம் கொடுக்கும்படி அவனை அனுப்பியிருந்தார்கள். 16 ஏகூர் இருபக்கமும் கூர்மையுடைய ஒன்றரை அடி நீளமுள்ள ஒரு வாளைச்செய்து தனது வலது தொடையில் அதைக் கட்டி, தனது உடைகளுக்குள் மறைத்து வைத்திருந்தான். 17 அவன் மோவாப் அரசன் எக்லோனுக்கு கப்பத்தைக் கொடுத்தான். எக்லோன் மிகவும் பருத்த மனிதன். 18 ஏகூத் கப்பத்தைக் கொடுத்தபின் அதைச் சுமந்துவந்த தன் மனிதர்களை அவர்களுடைய வழியில் அனுப்பிவிட்டான். 19 கில்காலில் இருந்த விக்கிரகங்கள் இருந்த இடம்வரை சென்ற அவன் திரும்பிவந்து, “அரசனே, உம்மிடம் சொல்லவேண்டிய ஒரு இரகசிய செய்தி என்னிடம் உண்டு” என்றான்.
அதற்கு அரசன்: “அமைதி” என்றவுடன், அவனுடைய வேலையாட்கள் அவனைவிட்டுப் போனார்கள்.
20 தனது அரண்மனையின் குளிர்ச்சியான மேலறையில் தனிமையாக உட்கார்ந்துகொண்டிருந்த அவனிடம் ஏகூத் கிட்டவந்து, “என்னிடம், உமக்குக் கொடுக்கவேண்டிய இறைவனிடமிருந்து பெற்ற ஒரு செய்தி இருக்கிறது” என்றான். அரசன் தனது நாற்காலியிலிருந்து எழுந்தபோது, 21 ஏகூத் தனது இடதுகையை நீட்டி, தனது வலது தொடையில் கட்டியிருந்த வாளை உருவி, அதனால் அரசனின் வயிற்றில் குத்தினான். 22 வாளுடன்கூட கைப்பிடியும் அவன் வயிற்றில் புகுந்தது. வாளின் முனை அவன் முதுகினால் வெளியே வந்தது. ஏகூத் அந்த வாளை வெளியே இழுக்கமுடியாத அளவுக்கு கொழுப்பு அதை மூடிக்கொண்டது. 23 பின்பு ஏகூத் புறப்பட்டு, மேலறையின் கதவுகளைத் தனக்குப் பின்னாகப் பூட்டிக்கொண்டு மண்டபத்துக்குப் போனான்.
24 அவன் போனபின் பணியாட்கள் வந்து மேலறையின் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள், “அவர் வீட்டினுள்ளறையில் மலசலம் கழிக்கும்படி போயிருக்கலாம்” என்று எண்ணினார்கள். 25 அவர்கள் அதிக நேரம் காத்திருந்தார்கள். அரசன் அறையின் கதவுகளைத் திறக்காததால் அவர்கள் ஒரு திறவுகோலை எடுத்து கதவுகளைத் திறந்தார்கள். அங்கே தங்கள் தலைவன் இறந்து தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டார்கள்.
26 அவர்கள் காத்துக்கொண்டிருந்த வேளையிலேயே ஏகூத் தப்பியோடிவிட்டான். அவன் விக்கிரகங்களுள்ள இடத்தைக் கடந்துபோய் சேயீருக்குத் தப்பியோடினான். 27 அவன் அங்கே போனபோது, எப்பிராயீம் மலைநாட்டில் ஒரு எக்காளத்தை ஊதினான். இஸ்ரயேலர் மலைகளிலிருந்து இறங்கி அவனுடன் போனார்கள். அவன் அவர்களை யுத்தத்திற்கு வழிநடத்திச் சென்றான்.
28 அவன் இஸ்ரயேலரைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள்” என உத்தரவிட்டு, “உங்கள் எதிரியான மோவாபை யெகோவா இன்று உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்” என்றான். எனவே அவர்கள் ஏகூத்தைப் பின்பற்றிப்போய் மோவாப்புக்கு எதிரேயுள்ள யோர்தானின் துறைமுகத்தைக் கைப்பற்றினர். அவர்கள் ஒருவனையும் கடந்து தப்பியோட விடவில்லை. 29 அந்த நாளில் அவர்கள் மோவாபியரில் கிட்டத்தட்ட பத்தாயிரம்பேரை வெட்டி வீழ்த்தினார்கள். அவர்கள் எல்லோரும் ஆற்றலும், வலிமையும் நிறைந்தவர்கள். ஒரு மனிதன்கூட தப்பிப் போகவில்லை. 30 அந்த நாளிலே மோவாப் இஸ்ரயேலின் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டது. எண்பது வருடங்களாக நாட்டில் சமாதானம் நிலவியது.
சம்கார்
31 ஏகூத்துக்குப் பின், ஆனாத்தின் மகன் சம்கார் நீதிபதியாக வந்தான். அவன் மாட்டை அடிக்கும் கம்பினால் அறுநூறு பெலிஸ்தியரை அடித்து வீழ்த்தினான். அவனும் இஸ்ரயேலைக் காப்பாற்றினான்.
* 3:10 3:10 மெசொப்பொத்தோமியாவின் என்பது மூல மொழியில் ஆராமின் அரசன் என உள்ளது.