2
யோனா மீனுக்குள்ளே இருந்து தனது இறைவனாகிய யெகோவாவிடம் மன்றாடினான். அவன் சொன்னதாவது:
“என் துன்பத்தில் நான் என் யெகோவாவைக் கூப்பிட்டேன்,
நீர் எனக்குப் பதிலளித்தீர்;
பாதாளத்தின் ஆழங்களிலிருந்து உதவிவேண்டி கூப்பிட்டேன்,
நீர் எனது அழுகையைக் கேட்டீர்.
நீர் என்னை ஆழத்துக்குள் எறிந்தீர்,
நடுக்கடலின் ஆழத்தில் எறிந்தீர்,
நீர்ச்சுழிகள் என்னைச் சுற்றிலும் சுழன்றுபோயின;
உமது அலைகளும், அலையின் நுரைகளும்
என்மேல் புரண்டன.
‘உமது முன்னிலையிலிருந்து
நான் துரத்தப்பட்டேன்.
இருந்தாலும், நான் திரும்பவும்
உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கிப்பார்ப்பேன்’ என்றேன்.
என்னை விழுங்கிய தண்ணீர் என்னைப் பயமுறுத்தியது,
ஆழம் என்னை சூழ்ந்துகொண்டது;
கடற்பாசிக்கொடிகள் என் கழுத்தைச் சுற்றிக்கொண்டன.
மலைகளின் அடிவாரங்கள்வரை நான் அமிழ்ந்தேன்,
கீழேயுள்ள பூமி என்னை என்றென்றைக்குமாக அடைத்து வைத்தது.
ஆனால் என் இறைவனாகிய யெகோவாவே,
நீர் குழியிலிருந்து என் உயிரை மேலே கொண்டுவந்தீர்.
 
“யெகோவாவே, என் உயிர் தளர்ந்துபோகையில்
நான் உம்மையே நினைத்தேன்,
என் மன்றாட்டு மேலெழுந்து
உமது பரிசுத்த ஆலயத்தில் உம்மிடம் வந்தடைந்தது.
 
“சிலர் ஒன்றுக்கும் உதவாத விக்கிரகங்களைப் பற்றிக்கொள்கிறார்கள்;
அவர்கள் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய கிருபையை இழந்துபோகிறார்கள்.
ஆனால், நானோ துதியின் சத்தத்தோடே
உமக்குப் பலியிடுவேன்.
நான் நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவேன்.
‘இரட்சிப்பு யெகோவாவிடமிருந்தே வருகிறது’ ” என்றான்.
10 யெகோவா மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவை கரையில் கக்கிவிட்டது.