15
திராட்சைக்கொடியும் கிளைகளும்
“நானே உண்மையான திராட்சைக்கொடி. என் பிதாவே தோட்டக்காரர். கனிகொடாத என்னிலுள்ள ஒவ்வொரு கிளையையும் அவர் தூக்கிவைக்கிறார். ஆனால், கனி கொடுக்கிற கிளைகளையோ அவர் கத்தரித்துச் சுத்தம் பண்ணுகிறார். அதனால் அவை இன்னும் அதிகமாய்க் கனிகொடுக்கும். நான் உங்களோடு பேசிய வார்த்தையினாலே நீங்கள் ஏற்கெனவே சுத்திகரிக்கப் பட்டிருக்கிறீர்கள். என்னில் நிலைத்திருங்கள். நானும் உங்களில் நிலைத்திருப்பேன். எந்தக் கிளையும் தன் சுயமாகவே கனி கொடுப்பதில்லை; அது திராட்சைக் கொடியிலே நிலைத்திருக்க வேண்டும். நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால் உங்களால் கனிகொடுக்க இயலாது.
“நானே திராட்சைக்கொடி; நீங்களோ கிளைகள். நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் அதிகமாய் கனி கொடுப்பீர்கள்; என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவுமே செய்யமுடியாது. நீங்கள் என்னில் நிலைத்திராவிட்டால், நீங்கள் வெட்டி எறியப்பட்டு வாடிப்போகிற ஒரு கிளையைப்போல் இருப்பீர்கள்; அப்படிப்பட்ட கிளைகள் சேர்த்து எடுக்கப்பட்டு நெருப்பில்போட்டு எரிக்கப்படும். நீங்கள் என்னில் நிலைத்திருந்து என் வார்த்தைகள் உங்களில் நிலைத்திருக்குமானால், நீங்கள் விரும்பிய எதை வேண்டுமானாலும் கேளுங்கள். அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் அதிகமாய் கனிகொடுத்து, என்னுடைய சீடர்கள் எனக் காண்பியுங்கள். இதுவே என் பிதாவுக்கு மகிமையைக் கொண்டுவரும்.
“பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன். இப்பொழுது நீங்கள் என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். 10 நான் என் பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறேன். அதுபோல் நீங்கள் என்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். 11 என்னுடைய சந்தோஷம் உங்களில் இருக்கும்படியும், உங்களுடைய சந்தோஷம் முழுமை பெறும்படி இதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். 12 நான் உங்களில் அன்புகூர்ந்தது போலவே, நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்புகூரவேண்டுமென்பதே என் கட்டளை. 13 ஒருவன் தன்னுடைய நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைப் பார்க்கிலும் பெரிதான அன்பு யாரிடமும் இல்லை. 14 நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்தால், நீங்கள் எனக்கு நண்பர்களாயிருப்பீர்கள். 15 நான் இனிமேலும் உங்களை வேலைக்காரர்கள் என்று சொல்லப்போவதில்லை. ஏனெனில் ஒரு வேலைக்காரன் தன் எஜமானுடைய வேலைகளை அறியமாட்டானே. நானோ உங்களை நண்பர்கள் என்றே சொல்கிறேன். ஏனெனில் என் பிதாவினிடத்திலிருந்து நான் அறிந்து கொண்டவற்றையெல்லாம் உங்களுக்குத் தெரியப்படுத்தினேன். 16 நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை. நானே உங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறேன், நீங்கள் போய் நிலையான கனி கொடுக்கும்படி உங்களை நியமித்தேன். அப்பொழுது நீங்கள் என் பெயரில் பிதாவினிடத்தில் எதைக் கேட்டாலும், அவர் அதை உங்களுக்குத் தருவார். 17 ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள். இதுவே என் கட்டளை.
உலகம் சீடரை வெறுத்தல்
18 “உலகம் உங்களை வெறுக்கும்போது, முதலில் அது என்னையே வெறுத்தது என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 19 நீங்கள் உலகத்துக்கு சொந்தமானவர்களாய் இருந்தால், அது உங்களைத் தன்னுடையவர்களென்று ஏற்று, உங்களில் அன்பாயிருக்கும். ஆனால், நீங்கள் உலகத்துக்குச் சொந்தமானவர்கள் அல்ல. நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்தெடுத்து வேறுபிரித்தேன். அதனாலேயே உலகம் உங்களை வெறுக்கிறது. 20 நான் உங்களுடன் பேசிய வார்த்தைகளை நினைவில் வைத்திருங்கள்: ‘எந்த வேலையாளும் தன்னுடைய எஜமானைவிடப் பெரியவன் அல்ல.’* அவர்கள் என்னைத் துன்புறுத்தினால், உங்களையும் துன்புறுத்துவார்கள். அவர்கள் என்னுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தால், உங்களுடைய வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிவார்கள். 21 அவர்கள் என்னை அனுப்பிய பிதாவை அறியாமல் இருக்கிறார்கள். அதனாலேயே என் பெயரின் நிமித்தம் உங்களைத் துன்புறுத்துவார்கள். 22 நான் வந்து அவர்களுடனே பேசியிருக்காவிட்டால், பாவத்தின் குற்றம் அவர்கள்மேல் சுமராது. ஆனால் இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்து அவர்களால் எந்தச் சாக்குப்போக்கும் சொல்லமுடியாது. 23 என்னை வெறுக்கிறவன் என் பிதாவையும் வெறுக்கிறான். 24 வேறு யாரும் செய்திராத கிரியைகளை நான் அவர்கள் மத்தியில் செய்தேனே. அப்படி நான் செய்திராவிட்டால் அவர்கள்மேல் பாவத்தின் குற்றம் சுமராது. ஆனால் இப்பொழுதோ அவர்கள் இந்த கிரியைகளைக் கண்டிருந்தும், என்னையும் என் பிதாவையும் வெறுக்கிறார்கள். 25 ‘அவர்கள் காரணமின்றி என்னை வெறுக்கிறார்கள்’ என்று அவர்களுடைய சட்டத்தில் எழுதப்பட்டிருப்பது நிறைவேறும்படியே இப்படி நடந்தது.
பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்
26 “நான் பிதாவினிடத்திலிருந்து உங்களிடத்திற்கு அனுப்பும் உதவியாளார் உங்களிடம் வருவார். அப்போது பிதாவினிடமிருந்து வரும் சத்திய ஆவியானவர் என்னைக்குறித்து சாட்சி கொடுப்பார். 27 நீங்களும் என்னைக்குறித்து சாட்சி கொடுக்கவேண்டும். ஏனெனில் நீங்கள் ஊழிய தொடக்கத்திலிருந்து என்னுடன் இருக்கிறீர்களே.
* 15:20 15:20 யோவா. 13:16 15:25 15:25 சங். 35:19; 69:4