11
அத்தாலியாளும் யோவாஸும்
யூதாவின் அரசன் அகசியாவின் தாய் அத்தாலியாள் தன் மகன் இறந்ததைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, முழு அரச குடும்பத்தினரையும் அழிக்கத் தொடங்கினாள். ஆனால் அரசனான யோராமின் மகளும் அகசியாவின் சகோதரியுமான யோசேபாள், கொலைசெய்யப்படப்போகிற இளவரசர் மத்தியிலிருந்து அகசியாவின் மகன் யோவாசை அத்தாலியாளிடமிருந்து களவாகக் கொண்டுபோய், அவனுடைய செவிலியத் தாயுடன் படுக்கையறையில் வைத்தாள். இதனால் அவன் கொல்லப்படவில்லை. அத்தாலியாள் நாட்டை ஆட்சிசெய்தபோது அவன் தாதியுடன் யெகோவாவின் ஆலயத்தில் ஆறு வருடங்களாக ஒளித்தபடியே இருந்தான்.
ஏழாம் வருடத்தில் யோய்தா கேரியரிலும், காவலாளரிலும் நூறுபேருக்குத் தளபதிகளாய் இருந்தவர்களை யெகோவாவின் ஆலயத்துக்கு வரும்படி அழைத்தான். முதலில் யெகோவாவின் ஆலயத்தில் அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்து ஒரு வாக்குறுதியும் பெற்றுக்கொண்டான். அதன்பின் அரசனுடைய மகனை அவர்களுக்குக் காட்டினான். மேலும் அவன் அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது, “நீங்கள் செய்யவேண்டியது இதுவே: ஓய்வுநாளில் மூன்று குழுவினராக உங்கள் கடமைகளைச் செய்யும் உங்களில், மூன்றில் ஒரு பகுதியினர் அரண்மனையைப் பாதுகாக்க வேண்டும். மற்ற மூன்றில் ஒரு பகுதியினர் சூர் வாசலையும், மூன்றில் ஒரு பகுதியினர் ஆலயத்தை மாறிமாறி காவல் காக்கிறவர்களுக்குப் பின்புறமாக இருக்கும் வாசலையும் காவல் காக்கவேண்டும். ஓய்வுநாளில் வழக்கமான கடமை முடிந்து செல்லும் இரு பிரிவினரும் அரசனுக்காக யெகோவாவினுடைய ஆலயத்தைக் காவல் காக்கவேண்டும். ஒவ்வொருவரும் தன்தன் கையில் ஆயுதம் பிடித்தவர்களாக அரசனைச் சுற்றி நில்லுங்கள். உங்கள் வரிசையை நெருங்குபவன் எவனும் கொல்லப்படவேண்டும். அரசன் எங்கே போனாலும், வந்தாலும் அவருக்குச் சமீபமாய் நில்லுங்கள்” என்று கூறினான்.
ஆசாரியனான யோய்தா உத்தரவிட்டபடியே, நூறுபேருக்கு தளபதிகள் செய்தார்கள். ஓய்வுநாளில் பணிபுரிகிறவர்களும், விடுப்பில் போகிறவர்களுமான தம்தம் மனிதரை ஆசாரியனான யோய்தாவிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள். 10 அதன்பின் ஆசாரியனாகிய யோய்தா யெகோவாவின் ஆலயத்திலிருந்த, தாவீது அரசனுக்குச் சொந்தமான ஈட்டிகளையும், கேடயங்களையும் தளபதிகளிடம் கொடுத்தான். 11 காவலாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கையில் ஆயுதம் பிடித்தவர்களாக, தெற்குப் பக்கத்திலிருந்து வடக்குப் பக்கம்வரை ஆலயத்திற்கும், பலிபீடத்திற்கும் அருகே அரசனைச் சூழ்ந்து நின்றார்கள்.
12 அதன்பின் யோய்தா அரசனின் மகனை வெளியே கொண்டுவந்து அவனுக்கு முடிசூட்டி, உடன்படிக்கையின் ஒரு பிரதியை அவனிடம் கொடுத்து, அவனை அரசனாகப் பிரகடனம் செய்தான். அவர்கள் அவனை அரசனாக அபிஷேகம்பண்ணி, தங்கள் கைகளைத் தட்டி, “அரசன் நீடூழி வாழ்க” என ஆர்ப்பரித்தார்கள்.
13 காவலாளரும், மக்களும் செய்த ஆரவாரத்தை அத்தாலியாள் கேட்டபோது, அவள் யெகோவாவின் ஆலயத்திலிருந்த மக்களிடம் சென்றாள். 14 அவள் பார்த்தபோது, அக்கால வழக்கப்படி அரசன் தூண் அருகில் நிற்பதைக் கண்டாள். அதிகாரிகளும், எக்காளம் ஊதுபவர்களும் அரசனுக்குப் பக்கத்தில் நின்றார்கள். நாட்டு மக்கள் யாவரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அத்தாலியாள் தன் அங்கிகளைக் கிழித்துக்கொண்டு, “அரச துரோகம்! அரச துரோகம்!” எனக் கூக்குரலிட்டாள்.
15 ஆசாரியனான யோய்தா படைகளுக்குப் பொறுப்பாயிருந்த நூறுபேருக்கு தளபதிகளிடம், “ஆலய எல்லையிலிருந்து அவளை வெளியே கொண்டுபோங்கள். யெகோவாவின் ஆலயத்திற்குள் வைத்து அவளைக் கொல்லவேண்டாம்; அவளை யாராவது பின்தொடர்ந்து வந்தால் அவர்களையும் வாளினால் கொல்லுங்கள்” என்றான். 16 அப்பொழுது அரண்மனை முற்றத்திற்கு குதிரைகள் செல்லும் வாசல் வழியாக அவள் போனபோது அவளைப் பிடித்து, அங்கே அவளைக் கொலைசெய்தார்கள்.
17 அதன்பின் யோய்தா இஸ்ரயேல் மக்கள் யெகோவாவின் மக்களாயிருக்கும்படி யெகோவாவுக்கும், அரசனுக்கும், மக்களுக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையைச் செய்தான். அத்துடன் அரசனுக்கும் மக்களுக்கும் இடையிலும் ஒரு உடன்படிக்கையைச் செய்தான். 18 நாட்டு மக்கள் யாவரும், பாகாலின் கோயிலுக்குப்போய் அதை இடித்து வீழ்த்தினார்கள். பாகாலின் பலிபீடங்களையும், விக்கிரகங்களையும் துண்டுகளாக நொறுக்கி, பாகாலின் பூசாரியான மாத்தானையும் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றார்கள்.
இதன்பின் ஆசாரியன் யோய்தா யெகோவாவின் ஆலயத்திற்கு காவலாளரை நிறுத்தினான். 19 கேரியரிலும், காவலாளரிலும் நூறுபேருக்கு தளபதிகளையும், நாட்டில் இருந்த எல்லா மக்களையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு போனான். அவர்கள் எல்லோரும் ஒருமித்து யெகோவாவின் ஆலயத்திலிருந்து காவலாளர் வாசல் வழியாக அரசனை அரண்மனைக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கே யோவாஸ் அரச அரியணையில் அமர்ந்தான். 20 நாட்டு மக்கள் எல்லோரும் மகிழ்ந்தார்கள். பட்டணம் அமைதியாயிருந்தது. ஏனெனில் அத்தாலியாள் அரண்மனையில் வைத்து வாளினால் கொலைசெய்யப்பட்டிருந்தாள்.
21 யோவாஸ் அரசனானபோது அவன் ஏழு வயதுடையவனாயிருந்தான்.