13
இஸ்ரயேலில் யோவாகாஸின் ஆட்சி
யூதாவின் அரசன் அகசியாவின் மகன் யோவாஸ் அரசாண்ட இருபத்துமூன்றாம் வருடத்தில், யெகூவின் மகன் யோவாகாஸ் சமாரியாவில் இஸ்ரயேலுக்கு அரசனானான். இவன் பதினேழு வருடங்கள் அரசாண்டான். இஸ்ரயேலரைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களையே இவனும் பின்பற்றி யெகோவாவின் பார்வையில் தீமையைச் செய்தான். அவன் அவைகளைவிட்டு விலகவேயில்லை. எனவே யெகோவாவின் கோபம் இஸ்ரயேலுக்கு எதிராகப் பற்றி எரிந்தது. இதனால் யெகோவா அவர்களை நெடுங்காலத்திற்கு சீரிய அரசன் ஆசகேலின் வலிமையின் கீழும், அவனுடைய மகன் பெனாதாத்தின் கீழும் வைத்திருந்தார்.
அதன்பின் யோவாகாஸ் யெகோவாவின் தயவைத் தேடினான். சீரிய அரசன் எவ்வளவாய் இஸ்ரயேலை ஒடுக்கித் துன்புறுத்தினான் என்பதை யெகோவா கண்டபடியால், அவர் அவனுடைய மன்றாட்டைக் கேட்டார். யெகோவா இஸ்ரயேலருக்கு ஒரு விடுதலை வீரனைக் கொடுத்தார். இஸ்ரயேலர் சீரியருடைய பிடியிலிருந்து தப்பினார்கள். அதன்பின் இஸ்ரயேலர் முன்பு வாழ்ந்ததுபோல தங்கள் சொந்த வீடுகளில் வாழ்ந்தார்கள். ஆயினும் யெரொபெயாம் இஸ்ரயேலைச் செய்யப்பண்ணின பாவங்களிலிருந்து அவர்கள் திரும்பாமல், அவைகளைத் தொடர்ந்து செய்து கொண்டுவந்தார்கள். அத்துடன் அசேரா விக்கிரக தூண் இன்னும் சமாரியாவில் இருந்தது.
யோவாகாஸின் இராணுவத்தில் ஐம்பது குதிரைவீரர், பத்து தேர்கள், பத்தாயிரம் காலாட்படை வீரரைத் தவிர வேறொன்றும் மீந்திருக்கவில்லை. ஏனெனில் சீரிய அரசன் இஸ்ரயேலில் மீதியானவர்களை அழித்து, சூடுமிதிக்கும் காலத்திலுள்ள புழுதியைப்போலாக்கிப் போட்டான்.
யோவாகாஸின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும், அவனுடைய சாதனைகளும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. யோவாகாஸ் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் யோவாஸ் அரசனானான்.
இஸ்ரயேலில் யோவாஸ் ஆட்சி
10 யூதாவின் அரசன் யோவாசின் ஆட்சியின் முப்பத்தேழாம் வருடத்தில் யோவாகாஸின் மகன் யோவாஸ் இஸ்ரயேலில் அரசனானான். இவன் சமாரியாவிலிருந்து பதினாறு வருடங்கள் ஆட்சிசெய்தான். 11 இவன் யெகோவாவின் பார்வையில் தீமையானவற்றைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களில் எதையும் அவன் விடாமல் அவற்றைத் தொடர்ந்து செய்து வந்தான்.
12 இஸ்ரயேல் அரசன் யோவாஸ் நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும், அவனுடைய சாதனைகளும் யூதாவின் அரசன் அமத்சியாவுடன் அவன் செய்த யுத்தம் உட்பட அவனுடைய சதிகள் யாவும், இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. 13 யோவாஸ் தன் முற்பிதாக்களுடன் இளைப்பாறினான். மற்ற இஸ்ரயேல் அரசர்களை அடக்கம்பண்ணும் இடத்தில் சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய அரியணையில் யெரொபெயாம் அரசனானான்.
14 இந்த நாட்களில் எலிசா வியாதியினால் துன்பப்பட்டான். இந்த வியாதியே பின் அவனுடைய மரணத்துக்குக் காரணமாயிருந்தது. அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் யோவாஸ் அவனைப் பார்க்கப்போய், “என் தந்தையே! தந்தையே! இஸ்ரயேலுக்கு தேர்களையும், குதிரைவீரர்களையும்போல் இருந்தவரே!” என்று சொல்லி அவனுக்காக அழுதான்.
15 எலிசா அவனை நோக்கி, “ஒரு வில்லும் சில அம்புகளும் கொண்டுவா” என்றான் அவன் அப்படியே கொண்டுவந்தான். 16 எலிசா இஸ்ரயேலின் அரசனிடம், “வில்லை உம்முடைய கைகளில் எடும்” என்றான். அரசன் அவ்வாறே எடுத்தபோது, எலிசா தன் கையை அரசனின் கையில் வைத்தான்.
17 “கிழக்குப் பக்கமாக ஜன்னலைத் திறந்திடும்” என்றான். அப்படியே அரசன் ஜன்னலைத் திறந்தான். அப்பொழுது எலிசா, “எய்திடும்” என்றான். அவன் அப்படியே செய்தான். எலிசா அவனைப் பார்த்து, “இது யெகோவாவினுடைய வெற்றியின் அம்பு. சீரியரின்மேல் வெற்றியைக் கொண்டுவரும் அம்பு; நீ சீரியரை ஆப்பெக்கில் முழுவதுமாக அழித்துப்போடுவாய்” என்று கூறினான்.
18 அதன்பின்பும் எலிசா அரசனை நோக்கி, “அந்த அம்புகளை எடும்” என்றான். அரசன் அவற்றை எடுத்தான். அப்பொழுது எலிசா இஸ்ரயேலின் அரசனிடம், “அவற்றை நிலத்தில் அடியும்” என்றான். அவன் மூன்றுமுறை அடித்து நிறுத்தினான். 19 இறைவனுடைய மனிதன் அவன்மேல் கோபங்கொண்டு, “நீர் நிலத்தில் ஐந்துமுறை அல்லது ஆறுமுறை அடித்திருக்க வேண்டும். அவ்வாறு அடித்திருந்தால் சீரியாவை முழுவதும் தோற்கடித்திருப்பீர். இப்போதோ மூன்றுமுறை மாத்திரம் தான் சீரியாவை தோற்கடிப்பீர்” என்றான்.
20 அதன்பின் எலிசா இறந்து அடக்கம் செய்யப்பட்டான்.
மோவாபிய கொள்ளையர் ஒவ்வொரு வருடமும் வசந்தகாலத்தில் நாட்டுக்குள் நுழைவது வழக்கமாயிருந்தது. 21 ஒருமுறை இஸ்ரயேலர் ஒரு மனிதனை அடக்கம்பண்ணிக்கொண்டிருக்கையில் திடீரென ஒரு கொள்ளைக் கூட்டத்தைக் கண்டார்கள். உடனே அந்த உடலை எலிசாவின் கல்லறைக்குள் தூக்கி எறிந்தார்கள். அந்த உடல் எலிசாவின் எலும்புகளில் பட்டவுடனே அவன் உயிர்பெற்று தன் கால்களை ஊன்றி எழுந்து நின்றான்.
22 யோவாகாசின் ஆட்சிக் காலமெல்லாம் சீரிய அரசனாகிய ஆசகேல் இஸ்ரயேலரை ஒடுக்கினான். 23 ஆனால் யெகோவா ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் செய்த உடன்படிக்கைக்காக அவர்கள்மேல் கிருபையாயிருந்து அவர்களில் இரக்கமும், கரிசனையும் காட்டினார். இன்றுவரை அவர் தமது முன்னிலையிலிருந்து அவர்களை அழிக்கவோ, அகற்றவோ விருப்பமற்றவராகவே இருக்கிறார்.
24 சீரிய அரசன் ஆசகேல் இறந்தான். அவனுக்குப்பின் அவன் மகன் பெனாதாத் அரசனானான். 25 யோவாகாசின் மகன் யோவாஸ் தன் தகப்பன் யோவாகாசிடமிருந்து, ஆசகேலின் மகனான பெனாதாத் கைப்பற்றிய நகரங்களை அவனிடமிருந்து திரும்பவும் பிடித்தான். யோவாஸ் அவனை மூன்றுமுறை தோற்கடித்து இஸ்ரயேல் பட்டணங்களைத் திரும்பப் பிடித்துக்கொண்டான்.