19
பலவகை நீதிச்சட்டங்கள்
யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமும் பேசி, அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘உங்கள் இறைவனாகிய யெகோவாவான நான் பரிசுத்தர், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்.
“ ‘நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தகப்பனுக்கும், தாய்க்கும் மரியாதை கொடுக்கவேண்டும். என்னுடைய ஓய்வுநாளைக் கைக்கொள்ளவேண்டும். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
“ ‘நீங்கள் விக்கிரகங்களிடம் திரும்பவேண்டாம். வார்க்கப்படும் உலோகத்தினால் உங்களுக்காக தெய்வங்களைச் செய்யவும் வேண்டாம். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
“ ‘நீங்கள் யெகோவாவுக்குச் சமாதான காணிக்கையைப் பலியிடும்போது, அது உங்கள் சார்பாக ஏற்றுக்கொள்ளப்படும் விதத்தில் அதைப் பலியிடுங்கள். அது பலியிடப்படுகிற நாளிலும், அதற்கு அடுத்த நாளிலுமே அதைச் சாப்பிடவேண்டும். மூன்றாம் நாள்வரை மீதமிருக்கும் எதையும் எரித்துவிடவேண்டும். மூன்றாம் நாளில் அதில் எதையும் சாப்பிட்டால் அது அசுத்தமானது. அக்காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அதைச் சாப்பிடுகிற எவனும், யெகோவாவுக்குப் பரிசுத்தமானதைத் தூய்மைக்கேடாக்கினபடியால், அக்குற்றத்திற்கு அவனே பொறுப்பாளி. அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்.
“ ‘நீங்கள் உங்கள் வயலின் விளைச்சலை அறுவடை செய்யும்போது, வயலின் ஓரங்களில் இருக்கும் கதிர்களை முற்றிலுமாக அறுவடை செய்யாமலும், சிந்திக் கிடக்கும் கதிரையும் பொறுக்காமலும் விட்டுவிடுங்கள். 10 அப்படியே உங்கள் திராட்சைத்தோட்டத்திலும், இரண்டாம்முறை பறிக்காமலும், விழுந்ததைப் பொறுக்காமலும் விடுங்கள். அவைகளை ஏழைகளுக்கும் பிறநாட்டினருக்கும் விட்டுவிடுங்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
11 “ ‘களவு செய்யவேண்டாம்.
“ ‘பொய் சொல்லவேண்டாம்.
“ ‘ஒருவரையொருவர் ஏமாற்றவேண்டாம்.
12 “ ‘என் பெயரைக்கொண்டு பொய்யாய் ஆணையிடுவதினால் உங்கள் இறைவனின் பெயருக்கு இழிவு உண்டாக்க வேண்டாம். நானே யெகோவா.
13 “ ‘நீங்கள் உங்கள் அயலானை மோசடி செய்து, அவனைக் கொள்ளையிடாதீர்கள்.
“ ‘கூலிக்காரனுடைய கூலியை அடுத்தநாள்வரை கொடுக்காமல் வைத்திருக்கவேண்டாம்.
14 “ ‘செவிடனை சபிக்காமலும், குருடனின் வழியில் தடையேதும் போடாமலும் உங்கள் இறைவனுக்குப் பயந்து நடவுங்கள். நானே யெகோவா.
15 “ ‘நீதியைப் புரட்டவேண்டாம்; ஏழையை ஒடுக்கவேண்டாம். செல்வந்தர்களுக்குச் சலுகைகாட்ட வேண்டாம். ஆனால் உங்கள் அயலானுக்கு நியாயமாகத் தீர்ப்பு வழங்குங்கள்.
16 “ ‘நீங்கள் உங்கள் மக்களுக்குள் அவதூறு பேசுகிறவர்களாகத் திரியாதீர்கள்.
“ ‘உங்கள் அயலானின் உயிருக்கு* ஆபத்து உண்டாக்கும் எதையும் செய்யவேண்டாம். நானே யெகோவா.
17 “ ‘உங்கள் இருதயத்தில் உங்கள் சகோதரனை வெறுக்க வேண்டாம். உங்கள் அயலானின் குற்றத்தில் நீங்களும் பங்குகொள்ளாதபடி அவனை வெளிப்படையாகக் கடிந்துகொள்ளுங்கள்.
18 “ ‘பழிவாங்கத் தேடவேண்டாம். உங்கள் மக்களில் யாருக்கெதிராகவும் வன்மங்கொள்ள வேண்டாம். நீ உன்னில் அன்பாயிருப்பதுபோல் உன் அயலானிடத்திலும் அன்பாய் இரு. நானே யெகோவா.
19 “ ‘நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொள்ளவேண்டும்.
“ ‘வெவ்வேறு வகையான மிருகங்களை ஒன்றோடு ஒன்று புணரவிடவேண்டாம்.
“ ‘இரண்டு வகையான விதைகளை ஒன்றாய் கலந்து வயலில் விதைக்கவும் வேண்டாம்.
“ ‘இரண்டு வகையான நூல்களைக்கொண்டு நெய்யப்பட்ட உடைகளை உடுத்தவேண்டாம்.
20 “ ‘மீட்டுக்கொள்ளப்படாமலும், விடுதலை அடையாமலும் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு அடிமைப் பெண்ணுடன் வேறு யாராவது உறவுகொண்டால், அதற்குத் தகுந்த தண்டனை கொடுக்கப்படவேண்டும். ஆனாலும் அவர்கள் கொல்லப்படக்கூடாது. ஏனெனில், அவள் விடுதலை பெற்றிருக்கவில்லை. 21 ஆனாலும் அவன் தான் செய்த குற்றத்திற்காக ஒரு செம்மறியாட்டுக் கடாவை குற்றநிவாரண காணிக்கையாக யெகோவா முன்னிலையில் சபைக்கூடார வாசலுக்குக் கொண்டுவர வேண்டும். 22 ஆசாரியன் அக்குற்றநிவாரண காணிக்கைக்கான செம்மறியாட்டுக் கடாவைக் கொண்டு அவன் செய்த பாவத்திற்காக யெகோவா முன்னிலையில், பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்.
23 “ ‘நீங்கள் உங்கள் நாட்டிற்குள்போய் கனிகொடுக்கும் மரங்களை நாட்டும்போது, அதன் பழங்களை உண்பதற்கு, முதல் மூன்று வருடங்களும் தடை செய்யப்பட்டவைகளாக எண்ணிக்கொள்ளுங்கள்; அவற்றைச் சாப்பிடக்கூடாது. 24 நான்காம் வருடத்தில் அதன் பழங்கள் எல்லாம் பரிசுத்தமாய் இருக்கும். அவை யெகோவாவுக்குத் துதியின் காணிக்கையாகும். 25 ஆனால் ஐந்தாம் வருடத்தில் உண்டாகும் பழங்களை நீங்கள் சாப்பிடலாம். இவ்வாறாக உங்கள் அறுவடை பெருகும். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
26 “ ‘எந்த இறைச்சியையும் அதன் இரத்தத்துடன் சாப்பிடவேண்டாம்.
“ ‘குறி கேட்கவோ, சகுனம் பார்க்கவோ வேண்டாம்.
27 “ ‘உங்கள் தலைமுடியின் ஓரங்களை வெட்டாமலும், உங்கள் தாடியின் ஓரங்களைக் கத்தரியாமலும் இருங்கள்.
28 “ ‘இறந்தவர்களுக்காக உங்கள் உடல்களைக் கீறி காயப்படுத்தவேண்டாம். உங்கள் உடல்களில் பச்சை குத்தவும் வேண்டாம். நான் யெகோவா.
29 “ ‘நீங்கள் உங்கள் மகளை வேசியாக்குவதினால், அவளை இழிவுபடுத்தாதீர்கள். மீறினால், நாடு வேசித்தனத்திற்குத் திரும்பி, கொடுமையினால் நிறையும்.
30 “ ‘நீங்கள் என்னுடைய ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த இடத்தைக் குறித்து பயபக்தியாயிருங்கள். நான் யெகோவா.
31 “ ‘அஞ்சனம் பார்க்கிறவர்களின் பக்கம் போகவேண்டாம். குறிசொல்லுகிறவர்களை தேடவும் வேண்டாம். ஏனெனில், இவற்றால் நீங்கள் அசுத்தமடைவீர்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
32 “ ‘வயதானவர்களின் முன் எழுந்து நில்லுங்கள். முதியோருக்கு மரியாதை செலுத்துங்கள். உங்கள் இறைவனிடத்தில் பயபக்தியாயிருங்கள். நானே யெகோவா.
33 “ ‘ஒரு பிறநாட்டினன் உங்கள் நாட்டில் உங்களுடன் தங்கியிருந்தால், அவனை ஒடுக்காதீர்கள். 34 உங்களோடு வாழும் எந்த பிறநாட்டினனும் உங்களுடைய நாட்டினனைப்போல நடத்தப்படவேண்டும். உங்களைப்போல் அவனிலும் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் முன்பு ஒருகாலத்தில் நீங்களும் எகிப்து நாட்டில் பிறநாட்டினராய் இருந்தீர்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
35 “ ‘நீளம், நிறை, கொள்ளளவு ஆகியவற்றை அளக்கும்போது, நீதியற்ற அளவுகளைப் பயன்படுத்த வேண்டாம். 36 சரியான தராசையும், சரியான படிக்கற்களையும், சரியான எப்பா அளவையும் சரியான ஹின் அளவையும் பயன்படுத்த வேண்டும். உங்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்த நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
37 “ ‘ஆகவே நீங்கள் என்னுடைய எல்லா கட்டளைகளையும், என்னுடைய எல்லா சட்டங்களையும் கைக்கொண்டு அவற்றைப் பின்பற்றுங்கள். நானே யெகோவா’ ” என்றார்.
* 19:16 19:16 அயலானின் உயிருக்கு அல்லது அயலானின் இரத்தப்பழிக்கு காரணமாகாதே 19:23 19:23 தடை செய்யப்பட்டவைகளாக அல்லது சடங்குபடி அசுத்தமானது எபிரெய மொழியில் விருத்தசேதனம் செய்யப்படாதது 19:27 19:27 இந்த நடைமுறைகள் இஸ்ரயேலரைச் சுற்றியுள்ள பிற மக்களின் சமயங்களில் பொதுவானவை.