23
நியமிக்கப்பட்ட பண்டிகைகள்
யெகோவா மோசேயிடம், “இஸ்ரயேலருடன் நீ பேசி, அவர்களுக்கு சொல்லவேண்டியதாவது: இவை நியமிக்கப்பட்ட எனது பண்டிகைகள். யெகோவாவுக்குரிய நியமிக்கப்பட்ட பண்டிகைகள் இவையே. இவைகளை நீங்கள் பரிசுத்த சபை கூட்டங்களாகப் பிரசித்தப்படுத்த வேண்டும்.
ஓய்வுநாள்
“ ‘நீங்கள் ஆறுநாட்கள் வேலை செய்யலாம். ஆனால் ஏழாம்நாளோ இளைப்பாறுதலுக்குரிய ஒரு ஓய்வுநாள். அது பரிசுத்த சபைக்கூடும் நாள். அந்த நாளில் நீங்கள் எந்த ஒரு வேலையையும் செய்யக்கூடாது. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் அது யெகோவாவுக்குரிய ஓய்வுநாளாகும்.
பஸ்காவும் புளிப்பில்லாத அப்பமும்
“ ‘யெகோவாவினால் நியமிக்கப்பட்ட பண்டிகைகள் இவையே: அவைகளுக்காக நியமிக்கப்பட்ட காலங்களில், நீங்கள் அவைகளைப் பரிசுத்த சபை கூடுதல்களாகப் பிரசித்தப்படுத்த வேண்டும். முதலாம் மாதம் பதினான்காம் நாள் பொழுதுபடும் வேளையில் யெகோவாவின் பஸ்கா பண்டிகை ஆரம்பமாகும். அதே மாதம் பதினைந்தாம் நாளில் யெகோவாவின் புளிப்பில்லாத அப்பப்பண்டிகை ஆரம்பமாகும். ஏழுநாட்களுக்கு நீங்கள் புளிப்பில்லாமல் செய்யப்பட்ட அப்பங்களைச் சாப்பிடவேண்டும். முதலாம் நாள் நீங்கள் பரிசுத்த சபையைக் கூட்டவேண்டும். அந்த நாளில் வழக்கமான வேலைகள் எதையும் செய்யவேண்டாம். யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையை ஏழுநாட்களுக்குக் கொண்டுவர வேண்டும். ஏழாம்நாளில் பரிசுத்த சபையைக் கூட்டவேண்டும். அந்த நாளில் வழக்கமான வேலைகள் எதையும் செய்யக்கூடாது’ ” என்றார்.
முதற்பலன்கள்
யெகோவா மோசேயிடம், 10 “நீ இஸ்ரயேல் மக்களிடம் பேசி, அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘நான் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் நீங்கள் போய், அதன் விளைச்சலை அறுவடை செய்யும்போது, உங்கள் அறுவடையின் முதலாவது தானியக் கதிர்க்கட்டை ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும். 11 அது உங்கள் சார்பாக ஏற்றுக்கொள்ளப்படும்படி ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டவேண்டும். ஓய்வுநாளுக்கு அடுத்தநாள் ஆசாரியன் அதை அசைவாட்டவேண்டும். 12 அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் அந்நாளிலே ஒரு வயதுடைய குறைபாடற்ற செம்மறியாட்டுக் குட்டியை யெகோவாவுக்குத் தகன காணிக்கையாகப் பலியிடவேண்டும். 13 அதனுடன் அதற்குரிய தானியக் காணிக்கையாக, ஒரு எப்பாவின் பத்தில் இரண்டு பங்கு அளவு எண்ணெய்விட்டுப் பிசைந்த சிறந்த மாவாக அதைச் செலுத்தவேண்டும். அது மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாகும். அத்துடன் நான்கில் ஒரு பங்கு ஹின்* அளவான திராட்சை இரசத்தை, அதற்குரிய பானகாணிக்கையாகவும் செலுத்தவேண்டும். 14 நீங்கள் உங்கள் இறைவனுக்கு முதற்பலனில் இக்காணிக்கையைக் கொண்டுவரும் அந்த நாள்வரை, அதிலிருந்து எந்தவொரு அப்பத்தையோ, வறுத்த தானியத்தையோ, பச்சைத் தானியத்தையோ சாப்பிடக்கூடாது. நீங்கள் எங்கே வாழ்ந்தாலும், தலைமுறைதோறும் இது உங்களுக்கு நிரந்தர நியமமாய் இருக்கவேண்டும்.
வாரங்களின் பண்டிகை
15 “ ‘நீங்கள் அசைவாட்டும் காணிக்கையாகக் கதிர்க்கட்டைக் கொண்டுவந்த நாளான ஓய்வுநாளுக்கு அடுத்த நாளிலிருந்து, முழுமையாக ஏழு வாரங்களை எண்ணுங்கள். 16 ஏழாவது ஓய்வுநாளுக்கு அடுத்தநாளான ஐம்பதாவது நாள்வரை எண்ணுங்கள். அதன்பின் யெகோவாவுக்குப் புதிய தானியக் காணிக்கையைக் கொண்டுவாருங்கள். 17 நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் பத்தில் இரண்டு எப்பா அளவான சிறந்த மாவினால் புளிப்பூட்டப்பட்டுத் தயாரிக்கப்பட்ட இரண்டு அப்பங்களை, யெகோவாவுக்கான முதற்பலன்களின் அசைவாட்டும் காணிக்கையாகக் கொண்டுவாருங்கள். 18 இந்த அப்பத்துடன், ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளைக் கொண்டுவர வேண்டும். ஒவ்வொன்றும் ஒரு வயதுடையதும், குறைபாடற்றதுமாய் இருக்கவேண்டும். அவற்றுடன் ஒரு காளையையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் கொண்டுவாருங்கள். இவை அவர்களுடைய தானியக் காணிக்கைகளோடும், பானகாணிக்கைகளோடும் யெகோவாவுக்குரிய தகன காணிக்கையாக இருக்கும். இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் ஒரு நறுமணமாக நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாகும். 19 அதன்பின் பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும், சமாதான காணிக்கையாக, ஒவ்வொன்றும் ஒரு வயதுடையதாயிருக்கிற இரண்டு செம்மறியாட்டுக் குட்டிகளையும் பலியிடுங்கள். 20 ஆசாரியன் இந்த இரண்டு செம்மறியாட்டுக் குட்டிகளையும் முதற்பலன்களின் அப்பத்துடன் யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும். யெகோவாவுக்குப் பரிசுத்தமான இந்தக் காணிக்கை பொருட்கள் ஆசாரியனுக்குச் சொந்தமாகும். 21 அதே நாளில் பரிசுத்த சபைக்கூடுதலை நீங்கள் அறிவிக்கவேண்டும். அந்நாளில் வழக்கமாக நீங்கள் செய்யும் எந்த வேலையையும் செய்யவேண்டாம். நீங்கள் எங்கே வாழ்ந்தாலும் தலைமுறைதோறும் இது உங்களுக்கு நிரந்தர நியமமாயிருக்கவேண்டும்.
22 “ ‘நீங்கள் உங்கள் நிலத்தில் அறுவடை செய்யும்போது, வயலின் ஓரங்களில் உள்ளவைகளை அறுவடை செய்யாமலும், அறுவடையில் சிந்தியதைப் பொறுக்காமலும் விட்டுவிடுங்கள். இவைகளை ஏழைகளுக்கும், பிறநாட்டினருக்கும் விட்டுவிடுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா நானே’ ” என்றார்.
எக்காளப் பண்டிகை
23 யெகோவா மோசேயிடம், 24 “நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஏழாம் மாதத்தின் முதலாம் நாள் உங்களுக்கு ஒரு ஓய்வுநாளாயிருக்க வேண்டும். அந்த நாள் எக்காளம் முழங்கி, நினைவு விழாவாகக் கொண்டாடப்படும் ஒரு பரிசுத்த சபைக்கூடுதலாக இருக்கவேண்டும். 25 அந்த நாளில் வழக்கமாகச் செய்யும் வேலைகளைச் செய்யாமல் யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையை கொண்டுவர வேண்டும்’ ” என்றார்.
பாவநிவிர்த்தியின் நாள்
26 யெகோவா மோசேயிடம், 27 “ஏழாம் மாதத்தின் பத்தாம்நாள் பாவநிவிர்த்தி செய்யும் நாளாகும். அந்த நாளில் பரிசுத்த சபையைக் கூட்டி உபவாசித்து, உங்களை ஒடுக்கி, யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையைக் கொண்டுவாருங்கள். 28 அந்த நாளிலே எந்தவொரு வேலையையும் செய்யவேண்டாம். ஏனெனில், அதுவே உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவிர்த்தி நாள். 29 அந்த நாளில் உபவாசித்து தன்னை ஒடுக்காத எவனும் தன் மக்களில் இருந்து அகற்றப்படவேண்டும். 30 அந்த நாளில் வேலைசெய்யும் எவனையும், அவனுடைய மக்கள் மத்தியிலிருந்து நான் அழித்துப்போடுவேன். 31 நீங்கள் எந்தவொரு வேலையுமே செய்யக்கூடாது. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் தலைமுறைதோறும் இது உங்களுக்கு ஒரு நிரந்தர நியமமாய் இருக்கவேண்டும். 32 இந்நாள் உங்களுக்கான ஓய்வுநாள். அதில் உபவாசித்து உங்களையே நீங்கள் ஒடுக்கவேண்டும். மாதத்தின் ஒன்பதாம்நாள் மாலையிலிருந்து மறுநாள் மாலைவரை நீங்கள் உங்கள் ஓய்வுநாளை அனுசரிக்கவேண்டும்” என்றார்.
கூடாரப்பண்டிகை
33 யெகோவா மோசேயிடம், 34 “நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியதாவது, ‘ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளிலே யெகோவாவின் கூடாரப்பண்டிகை ஆரம்பமாகி, தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும். 35 முதலாம் நாள் பரிசுத்த சபைக்கூடும் நாள். அந்நாளில் வழக்கமான வேலையொன்றையும் செய்யவேண்டாம். 36 யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையை ஏழுநாட்களுக்குக் கொண்டுவாருங்கள். எட்டாவது நாள் பரிசுத்த சபையைக் கூட்டி நெருப்பினால் யெகோவாவுக்குக் காணிக்கையைச் செலுத்துங்கள். அதுவே சபைக்கூடுதல் முடிவடையும் நாள். அந்நாளில் வழக்கமாகச் செய்யும் வேலையொன்றையும் செய்யக்கூடாது.
37 “ ‘யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கைகளைக் கொண்டுவருவதற்காக, பரிசுத்த சபைக்கூடுதல்களாக நீங்கள் பிரசித்தப்படுத்தும்படி யெகோவாவினால் நியமிக்கப்பட்ட பண்டிகைகள் இவையே. இப்பண்டிகைகளில் ஒவ்வொரு நாளுக்கும் தேவையான தகன காணிக்கைகளும், தானியக் காணிக்கைகளும், பலிகளும், பான காணிக்கைகளும் கொண்டுவரப்பட வேண்டும். 38 இக்காணிக்கைகள் யாவும், யெகோவாவின் ஓய்வுநாள் காணிக்கைகளோடு கூடுதலாகக் கொடுக்க வேண்டியவையாகும். இவை உங்கள் கொடைகளோடும். நீங்கள் நேர்ந்துகொண்ட எதனோடும், நீங்கள் யெகோவாவுக்குக் கொடுக்கும் உங்கள் சுயவிருப்பக் காணிக்கைகள் அனைத்தோடும் கூடுதலாகக் கொடுக்கப்பட வேண்டியவைகளாகும்.
39 “ ‘ஆகவே நீங்கள் நாட்டின் விளைச்சலைத் சேர்த்தபின், ஏழாம் மாதம் பதினைந்தாம்நாள் தொடங்கி, ஏழுநாட்களுக்கு யெகோவாவுக்கான இப்பண்டிகையைக் கொண்டாடுங்கள். முதலாம் நாள் ஓய்வுநாளாகும். எட்டாம் நாளும் ஓய்வுநாளாகும். 40 முதலாம் நாளிலே உங்கள் மரங்களிலிருந்து சிறந்த பழங்களையும், ஓலைகளையும், இலைகளுள்ள கொப்புகளையும், ஆற்றலறியையும் எடுத்துக்கொண்டு, ஏழு நாட்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா முன்னிலையில் களிகூருங்கள். 41 ஒவ்வொரு வருடமும் ஏழுநாட்களுக்கு யெகோவாவுக்குரிய பண்டிகையாக இதைக் கொண்டாடுங்கள். இது தலைமுறைதோறும் நிரந்தர நியமமாக இருக்கும். ஏழாம் மாதத்தில் இதைக் கொண்டாடுங்கள். 42 நீங்கள் ஏழுநாட்களுக்குக் கூடாரங்களில் வசியுங்கள். ஊரில் பிறந்த இஸ்ரயேலர் யாவரும் கூடாரங்களில் வசிக்கவேண்டும். 43 இவ்விதமாய் நான் இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தபோது, அவர்களைக் கூடாரங்களில் வசிக்கச்செய்தேன் என்று உங்கள் சந்ததிகள் அறிந்துகொள்வார்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா நானே’ ” என்றார்.
44 இவ்வாறு மோசே, யெகோவாவினால் நியமிக்கப்பட்ட பண்டிகைகளை இஸ்ரயேலருக்கு அறிவித்தான்.
* 23:13 23:13 அதாவது, ஹின் என்பது சுமார் ஒரு லிட்டர் 23:17 23:17 அதாவது, ஏறத்தாழ 3.2 கிலோகிராம்