26
கீழ்ப்படிதலுக்கான வெகுமதி
“ ‘நீங்கள் விக்கிரகங்களைச் செய்யவேண்டாம். உருவச்சிலையையோ, உங்களுக்காக புனிதக் கல்லையோ அமைக்கவேண்டாம். உங்கள் நாட்டில் தலைகுனிந்து வணங்குவதற்காக ஒரு செதுக்கப்பட்ட கல்லை வைக்கக்கூடாது. நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
“ ‘நீங்கள் என்னுடைய ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த இடத்தைக் குறித்து பயபக்தியாயிருங்கள். நான் யெகோவா.
“ ‘நீங்கள் என் விதிமுறைகளைப் பின்பற்றி, என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய கவனமாயிருந்தால், மழையை அதன் பருவகாலத்தில் அனுப்புவேன். பூமி தனது விளைச்சலையும், வயல்களின் மரங்கள் தங்கள் பழங்களையும் கொடுக்கும். உங்கள் சூடுமிதிக்கும் காலம், திராட்சைப்பழம் பறிக்குங்காலம்வரை நீடிக்கும். திராட்சைப்பழம் பறிக்குங்காலம், நடுகைக்காலம்வரை நீடிக்கும். ஆகையால் நீங்கள் விரும்பிய எல்லா உணவையும் சாப்பிட்டு உங்கள் நாட்டிலே பாதுகாப்புடன் வாழ்வீர்கள்.
“ ‘நாட்டில் சமாதானத்தைத் தருவேன். நீங்கள் பயமில்லாமல் படுத்திருப்பீர்கள். உங்களை ஒருவரும் பயமுறுத்தமாட்டார்கள். நாட்டிலிருந்து கொடிய மிருகங்களைத் துரத்திவிடுவேன். உங்கள் நாட்டை வாள் கடந்துவராது. நீங்கள் உங்கள் பகைவர்களைப் பின்தொடர்ந்து துரத்துவீர்கள். அவர்கள் உங்கள் முன்பாக வாளால் வெட்டுண்டு விழுவார்கள். உங்களில் ஐந்துபேர், நூறுபேரைத் துரத்துவீர்கள். நூறுபேர், பத்தாயிரம்பேரைத் துரத்துவீர்கள். இவ்விதம் உங்கள் பகைவர்கள் வாளினால் உங்கள்முன் விழுவார்கள்.
“ ‘நான் உங்களைத் தயவுடன் பார்த்து, உங்களை வளம்பெறச்செய்து பலுகிப் பெருகப்பண்ணுவேன். நான் உங்களோடு பண்ணின உடன்படிக்கையைக் காத்துக்கொள்வேன். 10 நீங்கள் இன்னும் கடந்த வருட விளைச்சலைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே புதிய விளைச்சலுக்கு இடம் ஒதுக்கும்படியாக பழையதை அகற்றவேண்டியதாயிருக்கும். 11 நான் என் வசிப்பிடத்தை உங்கள் மத்தியில் வைப்பேன். உங்களைப் புறக்கணிக்கமாட்டேன். 12 நான் உங்கள் மத்தியில் நடந்து, உங்கள் இறைவனாயிருப்பேன். நீங்களும் என் மக்களாயிருப்பீர்கள். 13 இனிமேலும் நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராதபடிக்கு உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த நானே உங்கள் இறைவனாகிய யெகோவா. உங்கள் நுகத்தின் தடிகளை முறித்து உங்களைத் தலைநிமிர்ந்து நடக்கும்படிச் செய்தேன்.
கீழ்ப்படியாமைக்கான தண்டனை
14 “ ‘ஆனால் நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்த எல்லா கட்டளைகளையும் கைக்கொள்ளாமலும், 15 என் விதிமுறைகளைப் புறக்கணித்து, என் சட்டங்களை வெறுத்து, என் கட்டளைகள் எல்லாவற்றையும் செய்யத்தவறி, என் உடன்படிக்கையை மீறுவீர்களானால், 16 அப்பொழுது நான் உங்களுக்குச் செய்வதாவது: உங்கள்மேல் திடீர் பயங்கரத்தையும் அழிக்கும் வியாதிகளையும் கொண்டுவருவேன். உங்கள் கண் பார்வையை அற்றுப்போகச்செய்து, உங்கள் உயிரைக் குடிக்கும் காய்ச்சலையும் கொண்டுவருவேன். நீங்கள் தானியத்தை வீணாகவே விதைப்பீர்கள். ஏனெனில், உங்கள் பகைவர்களே அதைச் சாப்பிடுவார்கள். 17 நான் என் முகத்தை உங்களுக்கு விரோதமாகத் திருப்புவேன். அப்பொழுது நீங்கள் உங்கள் பகைவர்களால் தோற்கடிக்கப்படுவீர்கள். உங்களை வெறுக்கிறவர்கள் உங்களை ஆளுவார்கள். ஒருவரும் உங்களைத் துரத்தாமலே நீங்கள் பயந்து ஓடுவீர்கள்.
18 “ ‘இவைகளெல்லாம் நடந்த பின்பும் நீங்கள் எனக்குச் செவிகொடாமற்போனால், நான் உங்களை உங்கள் பாவத்தின் நிமித்தம் ஏழுமடங்கு அதிகமாகத் தண்டிப்பேன். 19 உங்கள் பிடிவாதமான பெருமையை உடைப்பேன். உங்கள் மேலிருக்கும் வானத்தை இரும்பைப்போலவும், கீழிருக்கும் நிலத்தை வெண்கலத்தைப்போலவும் ஆக்குவேன். 20 உங்கள் பெலன் வீணாகப் போகும். ஏனெனில், உங்கள் மண், விளைச்சலைக் கொடுக்காது. உங்கள் நாட்டின் மரங்கள் பழங்களைக் கொடுக்காது.
21 “ ‘நீங்கள் என்னுடன் பகைமை பாராட்டி, தொடர்ந்து எனக்குச் செவிகொடுக்க மறுத்தால், உங்கள் பாவத்திற்குத்தக்கதாக உங்கள் வாதைகளை ஏழுமடங்காக அதிகரிப்பேன். 22 காட்டு மிருகங்களை உங்களுக்கு எதிராக அனுப்புவேன். அவை உங்கள் பிள்ளைகளை உங்களிடமிருந்து கொள்ளையிட்டு, உங்கள் மந்தைகளை அழிக்கும். அவை உங்கள் எண்ணிக்கையை வெகுவாய்க் குறைக்கும். அப்பொழுது உங்கள் வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கும்.
23 “ ‘இப்படியிருக்க, நீங்கள் என் கண்டிப்பை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து என்னுடன் பகைமை பாராட்டினால், 24 நானும் உங்களுடன் பகைமை பாராட்டி, உங்கள் பாவத்திற்காக உங்களை ஏழுமடங்காகத் துன்புறுத்துவேன். 25 என்னுடைய உடன்படிக்கையை நீங்கள் மீறினதினால் உங்களைப் பழிவாங்குவதற்காக வாளை உங்கள்மேல் வரப்பண்ணுவேன். நீங்கள் உங்கள் பட்டணத்திற்குள் பின்வாங்கும்போது உங்களுக்குள் கொள்ளைநோயை அனுப்புவேன். நீங்கள் உங்கள் பகைவரின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள். 26 உங்களுக்கு அன்றாடம் கிடைக்கும் உணவை அகற்றிப்போடுவேன். அப்பொழுது பத்துப் பெண்கள் உங்களுக்கான அப்பத்தை ஒரே அடுப்பிலேயே சுடக்கூடியதாய் இருக்கும். அவர்கள் அப்பத்தை நிறைப்படி பங்கிட்டுக் கொஞ்சமாகக் கொடுப்பார்கள். நீங்கள் சாப்பிடுவீர்கள். ஆனால் திருப்தியடையமாட்டீர்கள்.
27 “ ‘இது இப்படியிருந்தும், நீங்கள் இன்னும் எனக்குச் செவிகொடுக்காமல் தொடர்ந்து என்னுடன் பகைமை பாராட்டினால், 28 அப்பொழுது நானும் என் கோபத்தில் உங்களுடன் பகைமை பாராட்டி, உங்கள் பாவத்திற்காக ஏழுமடங்கு நானே உங்களைத் தண்டிப்பேன். 29 நீங்கள் உங்கள் மகன்களுடைய, மகள்களுடைய சதையைச் சாப்பிடுவீர்கள். 30 உங்கள் மேடைகளை நான் அழித்து, உங்கள் தூபபீடங்களை இடித்து, உங்கள் இறந்த உடல்களை அச்சிலைகளின் உயிரற்ற உருவங்களின்மேல் வைப்பேன். உங்களை நான் அருவருப்பேன். 31 உங்கள் பட்டணங்களை இடிபாடுகளாக்குவேன். உங்கள் பரிசுத்த இடங்களைப் பாழாக்கிப்போடுவேன். உங்கள் காணிக்கைகளின் மகிழ்ச்சியூட்டும் நறுமணத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கமாட்டேன். 32 நான் உங்கள் நாட்டை பாழாக்கிப்போடுவேன். அப்பொழுது அங்கு வாழும் உங்கள் பகைவர்கள் திகைப்படைவார்கள். 33 நாடுகளுக்குள் உங்களை சிதறப்பண்ணி, என் வாளை உருவி உங்களைப் பின்தொடர்ந்து துரத்துவேன். உங்கள் நாடு பாழாக்கப்படும். பட்டணங்களும் இடிபாடுகளாய்க் கிடக்கும். 34 நீங்கள் உங்கள் பகைவருடைய நாட்டில் இருக்கையில், நாடு பாழாய்க்கிடக்கும். காலமெல்லாம் அது தன் ஓய்வு வருடங்களை அனுபவிக்கும். அப்பொழுது நாடு ஓய்ந்திருந்து, தனது ஓய்வுநாட்களைக் கொண்டாடும். 35 நாடு பாழாய்க்கிடக்கும் காலமெல்லாம் முன்பு நீங்கள் அதில் வாழ்ந்தபோது, நாடு பெற்றுக்கொள்ளாத ஓய்வு அது இப்பொழுது பெற்றுக்கொள்ளும்.
36 “ ‘உங்களில் மீதமிருப்போரைக் குறித்தோவெனில், அவர்களுடைய பகைவர்களின் நாடுகளில், அவர்களுடைய இருதயங்களைப் பயம் நிறைந்ததாக்குவேன். அப்பொழுது காற்றினால் அடிக்கப்படும் ஒரு இலையின் சத்தங்கூட அவர்களைப் பயந்தோடப்பண்ணும். அவர்கள் வாளுக்குத் தப்பி ஓடுகிறவர்கள்போல் ஓடுவார்கள். அவர்களை ஒருவரும் துரத்தாதபோதும் அவர்கள் விழுவார்கள். 37 அவர்களை ஒருவரும் துரத்தாதிருந்தும் வாளுக்குத் தப்பி ஓடுகிறவர்களைப்போல் ஓடி, ஒருவர்மேல் ஒருவர் இடறி விழுவார்கள். இப்படியாக உங்களுக்கு உங்கள் பகைவர்களை எதிர்த்துநிற்க முடியாதிருக்கும். 38 நீங்கள் நாடுகளுக்குள் அழிந்துபோவீர்கள். உங்கள் பகைவர்களின் நாடு உங்களை விழுங்கும். 39 உங்களில் மீதமுள்ளவர்கள் தங்கள் பாவத்திற்காகவும், தங்கள் முற்பிதாக்களின் பாவத்திற்காகவும் தங்கள் பகைவர்களின் நாட்டில் உருக்குலைந்து போவார்கள்.
40 “ ‘எனவே அவர்கள் அவர்களுடைய பாவத்தையும், தங்கள் முற்பிதாக்களின் பாவங்களையும் அவர்களின் எனக்கெதிரான துரோகங்களையும், என்னுடனிருந்த பகைமையையும் அறிக்கையிடுவார்கள், 41 கடைசியாக நான் என் கோபத்தினால் அவர்களை அவர்களுடைய பகைவர்களின் நாடுகளுக்குக் கொண்டுவரும்போது, அவர்களின் விருத்தசேதனம் செய்யப்படாத இருதயங்கள் தாழ்த்தப்பட்டு, அவர்களின் பாவங்களுக்கு அவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள். 42 அப்பொழுது நான் யாக்கோபுடன் செய்துகொண்ட என் உடன்படிக்கையையும், ஈசாக்குடன் செய்துகொண்ட என் உடன்படிக்கையையும், ஆபிரகாமுடன் செய்துகொண்ட என் உடன்படிக்கையையும், நினைவுகூருவேன். நாட்டையும் நான் நினைவுகூருவேன். 43 நாடு அவர்களால் கைவிடப்பட்டு, அவர்கள் யாரும் இல்லாமல் பாழாய்க் கிடக்கும்போது அது தன் ஓய்வை கொண்டாடும். ஆனால் அவர்கள் என்னுடைய சட்டங்களைப் புறக்கணித்து, என் கட்டளைகளை வெறுத்தால், தங்கள் பாவத்திற்கான தண்டனையை அனுபவிப்பார்கள். 44 இப்படியெல்லாமிருந்தும், தங்கள் பகைவர்களின் நாட்டில் அவர்கள் வாழும்போது, அவர்களுடனான என் உடன்படிக்கையை அவர்கள் உடைத்தாலும், நான் அவர்களை முற்றிலும் புறக்கணிக்கவோ, அவர்களை முற்றிலும் அழிக்கும்படி வெறுக்கவோமாட்டேன். ஏனெனில், அவர்களின் இறைவனாகிய யெகோவா நானே. 45 நான் அவர்களுக்கு இறைவனாயிருக்கும்படி, நாடுகளுக்கு முன்பாக எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த அவர்களின் முன்னோர்களோடு, நான் பண்ணின உடன்படிக்கையை, அவர்களுக்காக நினைவுகூருவேன். நானே யெகோவா’ என்றார்.”
46 சீனாய் மலையில் யெகோவா தமக்கும், இஸ்ரயேலருக்கும் இடையில் மோசேயின் மூலம் ஏற்படுத்திய விதிமுறைகளும், சட்டங்களும், ஒழுங்குவிதிகளும் இவையே.