5
“ ‘ஒருவன் தான் கண்டிருந்த அல்லது அறிந்திருந்த ஏதாவது ஒன்றைப்பற்றி சாட்சி சொல்லும்படியாக பிறப்பிக்கப்பட்ட பகிரங்கக் கட்டளையைக் கேள்விப்பட்டிருந்தும், அவன் அதைப் சொல்லத்தவறி பாவம்செய்தால், அவன் அதற்கு பொறுப்பேற்கவேண்டும்.
“ ‘அசுத்தமான காட்டு மிருகங்கள், அசுத்தமான வீட்டு மிருகங்கள், தரையில் வாழும் அசுத்தமான பிராணிகள் ஆகியவற்றின் உயிரற்ற உடல்களை தொடுகிறவன் எவனும் அதை அறியாதிருந்தாலும், அவன் அசுத்தமாகி, குற்றவாளியாகிறான். அல்லது எந்த அசுத்தத்தினாலாவது தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் தொட்டால், அவன் அதை அறியாதிருந்தாலும், அவன் அதை அறிந்துகொள்ளுகிறபோது குற்றவாளியாவான். ஒருவன் கவலையீனமாய், வாயில் வந்தபடி முன்யோசனையின்றி, நன்மையான அல்லது தீமையான எதையாவது செய்வதாக சத்தியம் செய்திருந்தால், அவன் அதை அறியாதிருந்தாலும், அவன் அதை அறிந்துகொள்ளுகிறபோது குற்றவாளியாவான். யாராவது ஒருவன் இவ்விதமான ஒன்றில் குற்றமுள்ளவனாகும்போது, தான் எவ்வகையில் பாவம் செய்தான் என்பதை அவன் அறிக்கை செய்யவேண்டும். அவன், தான் செய்த பாவத்திற்குத் தண்டனையாக மந்தையிலிருந்து செம்மறியாட்டு பெண்குட்டியையோ அல்லது வெள்ளாட்டு பெண்குட்டியையோ பாவநிவாரண காணிக்கையாக யெகோவாவிடத்தில் கொண்டுவர வேண்டும். ஆசாரியன் அவனுக்காக அவனுடைய பாவத்திற்காக பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
“ ‘அவன் ஒரு செம்மறியாட்டுக் குட்டியைக் கொடுக்க இயலாதவனாயிருந்தால், அவன் இரண்டு புறாக்களையோ அல்லது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையோ தன் பாவத்திற்கான தண்டனையாக யெகோவாவிடத்தில் கொண்டுவர வேண்டும். அவற்றில் ஒன்றைப் பாவநிவாரண காணிக்கையாகவும், இன்னொன்றைத் தகன காணிக்கையாகவும் கொண்டுவர வேண்டும். அவன் அவைகளை ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும். ஆசாரியன் முதலாவது, ஒன்றைப் பாவநிவாரண காணிக்கையாகச் செலுத்தவேண்டும். அவன் அதன் கழுத்திலிருந்து தலையைத் திருகவேண்டும். அதை முழுமையாக துண்டித்துப்போடக் கூடாது. பாவநிவாரண காணிக்கையின் இரத்தத்தில் கொஞ்சத்தைப் பலிபீடத்தின் ஒரு பக்கத்தில் தெளிக்கவேண்டும். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் வடியவிடவேண்டும். இது பாவநிவாரண காணிக்கை. 10 விதிக்கப்பட்ட விதிமுறைப்படியே, ஆசாரியன் மற்றப் பறவையைத் தகன காணிக்கையாகச் செலுத்தி, அவன் செய்த பாவத்திற்காக அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அவனும் மன்னிக்கப்படுவான்.
11 “ ‘ஆனாலும், இரண்டு புறாக்களையாவது, இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையாவது கொண்டுவர அவன் இயலாதவனானால், அவன் தன் பாவத்திற்கான காணிக்கையாக, எப்பா* அளவான சிறந்த மாவில் பத்தில் ஒரு பங்கை பாவநிவாரண காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். அது பாவநிவாரண காணிக்கையாக இருப்பதால், அந்த மாவின்மேல் எண்ணெயை ஊற்றவோ, நறுமணத்தூளைப் போடவோ கூடாது. 12 அவன் அதை ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும். ஆசாரியன் அந்த மாவிலிருந்து கைப்பிடி அளவுள்ள மாவை ஞாபகார்த்தப் பங்காக எடுத்து, நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் காணிக்கைகளின்மேல் அதை எரிக்கவேண்டும். இது பாவநிவாரண காணிக்கை. 13 இவ்விதமாய் ஆசாரியன் அவன் செய்த இந்தப் பாவங்களில் எதற்கானாலும் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது அவனும் மன்னிக்கப்படுவான். மீதமுள்ள காணிக்கை தானியக் காணிக்கையைப்போலவே ஆசாரியனுக்கு உரியதாகும்.’ ”
குற்றநிவாரண காணிக்கை
14 மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, 15 “ஒருவன் யெகோவாவுக்குரிய பரிசுத்தமானவைகளில் தவறிழைத்து தெரியாமல் பாவம் செய்கிறபோது, அவன் அதற்கான தண்டனையாக ஆட்டு மந்தையிலிருந்து ஒரு செம்மறியாட்டுக் கடாவை யெகோவாவிடத்தில் கொண்டுவர வேண்டும். அது குறைபாடற்றதாகவும், பரிசுத்த இடத்தின், ‘சேக்கல்’ நிறையின்படி வெள்ளியில் சரியான மதிப்பு உடையதாகவும் இருக்கவேண்டும். இது ஒரு குற்றநிவாரண காணிக்கை. 16 பரிசுத்தமானவைகளின் காரியத்தில் அவன் செய்த தவறுக்கு அவன் ஈடுசெய்ய வேண்டும். அவன் அதன் மதிப்புடன், ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்து, அதையெல்லாம் ஆசாரியனிடம் செலுத்தவேண்டும். குற்றநிவாரண காணிக்கையான அந்த செம்மறியாட்டுக் கடாவை, ஆசாரியன் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்வான். அவனும் மன்னிக்கப்படுவான்.
17 “ஒருவன் பாவம் செய்து, யெகோவாவின் கட்டளைகளினால் தடைசெய்யப்பட்ட எதையாவது செய்தால், அவன் அதை அறியாதிருந்தாலும்கூட, அவன் குற்றவாளியாகிறான். அவன் அதற்குக் கணக்குக் கொடுக்கவேண்டும். 18 அவன் குற்றநிவாரண காணிக்கையாக, ஆட்டு மந்தையிலுள்ள ஒரு செம்மறியாட்டுக் கடாவை ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும். அது குறைபாடற்றதாகவும், தகுந்த மதிப்பு உடையதாகவும் இருக்கவேண்டும். இவ்விதமாய் அவன் தவறுதலாக செய்த பிழைக்காக, ஆசாரியன் அவனுக்காக பாவநிவிர்த்தி செய்வான். அவனும் மன்னிக்கப்படுவான். 19 இது ஒரு குற்றநிவாரண காணிக்கை. அவன் யெகோவாவுக்கு விரோதமாக பிழை செய்தபடியால் குற்றவாளியாய் இருந்தான்” என்றார்.
* 5:11 5:11 அதாவது, எப்பா என்பது சுமார் 1.6 கிலோகிராம் மாவு 5:15 5:15 அதாவது, திருப்பிச் செலுத்தும் காணிக்கை