13
இந்த உலக முடிவின் அடையாளங்கள்
இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்படுகையில், அவருடைய சீடர்களில் ஒருவன் அவரிடம், “போதகரே! பாரும். இவை எவ்வளவு பெரிய கற்கள்! இவை எவ்வளவு மாபெரும் கட்டிடங்கள்!” என்றான்.
அதற்கு இயேசு அவர்களிடம், “ஆம்; நீங்கள் இந்தப் பெரும் கட்டிடங்கள் எல்லாவற்றையும் காண்கிறீர்கள் அல்லவா? ஆனால் இங்கே, ஒரு கல்லின்மேல் இன்னொரு கல் இராதபடி, ஒவ்வொரு கல்லும் இடிக்கப்படும்” என்றார்.
பின்பு, ஆலயத்திற்கு எதிரேயுள்ள ஒலிவமலையில் இயேசு உட்கார்ந்திருக்கையில், பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் தனிமையாக அவரிடத்தில் வந்து, “இந்தக் காரியங்கள் எப்பொழுது நிகழும்? இவையெல்லாம் நிறைவேறப்போகிறது என்பதற்கு எது முன் அடையாளமாக இருக்கும்? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டார்கள்.
அதற்கு இயேசு அவர்களிடம்: “உங்களை யாரும் ஏமாற்றாதபடி விழிப்பாயிருங்கள். பலர் என்னுடைய பெயரால் வருவார்கள். ‘நான்தான் அவர்,’ என்று சொல்லி, பலரை ஏமாற்றுவார்கள். நீங்கள் யுத்தங்களையும், யுத்தங்களைப்பற்றிய செய்திகளையும் கேள்விப்படும்போது, பதற்றப்பட வேண்டாம். இவை நிகழ வேண்டியவையே. ஆனால் முடிவு வர, இன்னும் காலம் இருக்கிறது. நாட்டிற்கு விரோதமாய் நாடு எழும்பும், அரசிற்கெதிராய் அரசு எழும்பும். பல இடங்களில் பஞ்சங்களும், பூமியதிர்ச்சிகளும் ஏற்படும். இவை எல்லாம் பிரசவ வேதனையின் ஆரம்பமே.
“அப்பொழுது, நீங்கள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். நீங்கள் நீதிமன்றங்களில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள். நீங்கள் ஜெப ஆலயங்களில் சவுக்கினால் அடிக்கப்படுவீர்கள். நீங்கள் என் நிமித்தம் ஆளுநர்களுக்கும், அரசர்களுக்கும் முன்பாக என் சாட்சிகளாய் நிற்பீர்கள். 10 மேலும், எல்லா நாடுகளுக்கும் முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும். 11 நீங்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காகக் கொண்டுவரப்படும் போதெல்லாம், என்ன பேசவேண்டும் என்று முன்னதாகவே கவலைப்படாதிருங்கள். அந்த வேளையிலே, உங்கள் மனதில் என்ன கொடுக்கப்படுகின்றதோ, அதைச் சொல்லுங்கள். ஏனெனில் பேசுவது நீங்கள் அல்ல, உங்கள் மூலமாய் பரிசுத்த ஆவியானவரே பேசுகிறார்.
12 “சகோதரன் தன் சகோதரனைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். தகப்பன் தனது பிள்ளையைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். பிள்ளைகள் அவர்கள் பெற்றோருக்கு எதிராக எழும்பி, அவர்களைக் கொலைசெய்வார்கள். 13 என் நிமித்தமாக எல்லோரும் உங்களை வெறுப்பார்கள். ஆனால் முடிவுவரை பொறுமையாய் இருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
14 “ ‘பாழாக்குகிற அருவருப்பு’ தனக்குரியதல்லாத இடத்தில் நிற்பதை நீங்கள் காணும்போது,* வாசிக்கிறவன் விளங்கிக்கொள்ளட்டும். அப்பொழுது யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும். 15 வீட்டின் கூரைமேல் இருக்கிற எவனும் கீழே இறங்கவோ, எதையாவது எடுத்துக்கொள்ளும்படி வீட்டிற்குள் போகாதிருக்கட்டும். 16 வயலில் இருக்கிறவன், தனது மேலுடையை எடுத்துக்கொள்ளும்படி, திரும்பிப் போகாதிருக்கட்டும். 17 அந்நாட்களில் கர்ப்பவதிகளின் நிலைமையும், பால் கொடுக்கும் தாய்மாரின் நிலைமையும் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்! 18 இந்தத் துன்பம் குளிர்காலத்தில் நேரிடாதபடி ஜெபம் பண்ணுங்கள். 19 ஏனெனில், இறைவன் உலகத்தைப் படைத்ததிலிருந்து இன்றுவரை ஏற்பட்டிருக்காத பெருந்துன்பத்தின் நாட்களாக அவை இருக்கும். பின் ஒருபோதும் அப்படிப்பட்ட துன்பம் ஏற்படப் போவதுமில்லை.
20 “கர்த்தர் அந்த நாட்களைக் குறைக்காவிட்டால், ஒருவரும் தப்பமாட்டார்கள். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டு தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் நிமித்தம், கர்த்தர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார். 21 அக்காலத்தில் யாராவது உங்களைப் பார்த்து, ‘இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார்!’ அல்லது ‘அதோ, அங்கே இருக்கிறார்!’ என்று சொன்னால், அதை நம்பவேண்டாம். 22 ஏனெனில் பொய் கிறிஸ்துக்களும், பொய் தீர்க்கதரிசிகளும் தோன்றுவார்கள். இயலுமானால், இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் ஏமாற்றும்படி அவர்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். 23 எனவே, நீங்கள் கவனமாய் இருங்கள்; அக்காலம் வருமுன்பே, நான் உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறேன்.
24 “அந்நாட்களில் உண்டாகும் துன்பத்தைத் தொடர்ந்து,
“ ‘சூரியன் இருள் அடையும்,
சந்திரன் தனது வெளிச்சத்தைக் கொடாதிருக்கும்;
25 வானத்தின் நட்சத்திரங்கள் விழும்,
வானத்தின் அதிகாரங்கள் அசைக்கப்படும்.’
26 “அவ்வேளையில் மானிடமகனாகிய நான் மிகுந்த வல்லமையுடனும் மகிமையுடனும் மேகங்களில் வருவதை மனிதர் காண்பார்கள். 27 நான் என் தூதர்களை அனுப்பி, என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை சேர்த்துக்கொள்வேன்; பூமியின் கடைசி எல்லை தொடங்கி, வானங்களின் கடைசி எல்லைவரை நான்கு திசைகளிலிருந்தும் அவர்களைக் கூட்டிச்சேர்ப்பேன்.
28 “இப்பொழுது அத்திமரத்தின் உவமையிலிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: அதில் சிறு கிளைகள் தோன்றி இலைகள் வரும்போது, கோடைகாலம் நெருங்குகிறது என்று அறிகிறீர்கள். 29 அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது, முடிவுகாலம் நெருங்கி வாசலருகே வந்துவிட்டது என்று அறிந்துகொள்ளுங்கள். 30 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்தக் காரியங்களெல்லாம் நடந்துமுடியும் வரைக்கும், நிச்சயமாகவே இந்தத் தலைமுறை ஒழிந்துபோகாது. 31 வானமும், பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்துபோகாது.
நாளும் நேரமும் அறியப்படாதவை
32 “அந்த நாளையோ, அந்த நேரத்தையோ ஒருவனும் அறியமாட்டான். ஏன், பரலோகத்திலிருக்கிற தூதர்களுக்கும் மானிடமகனாகிய எனக்கும் தெரியாது; ஆனால் பிதா மட்டுமே அதை அறிவார். 33 நீங்கள் கவனமாயிருங்கள்! விழிப்பாயிருங்கள்! அந்நேரம் எப்பொழுது வரும் என்று உங்களுக்குத் தெரியாதே. 34 இதுவோ, ஒருவன் தன் வேலைக்காரர் பொறுப்பில், தன் வீட்டை ஒப்படைத்துவிட்டுப் போவதைப்போல் இருக்கிறது. அவன் ஒவ்வொருவருக்கும், அவனவன் வேலையைப் பொறுப்பாய்க் கொடுத்துவிட்டு, வாசலில் இருப்பவனைக் காவல் காக்கும்படி சொல்லிப் போகிறான்.
35 “ஆகையால் விழிப்பாயிருங்கள், ஏனெனில் வீட்டுச் சொந்தக்காரன் எப்பொழுது திரும்பிவருவான் என்று உங்களுக்குத் தெரியாதே. அவன் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும்போதோ, அல்லது அதிகாலையிலோ, எப்போது வருவான் என்று யாருக்குத் தெரியும். 36 அவன் திடீரென வந்தால், உங்களை நித்திரை செய்கிறவர்களாய் அவன் காணக்கூடாது. 37 நான் உங்களுக்குச் சொல்கிறதை எல்லோருக்குமே சொல்கிறேன்: ‘விழிப்பாயிருங்கள்’ ” என்றார்.
* 13:14 13:14 தானி. 9:27; 11:31; 12:11 13:25 13:25 ஏசா. 13:10; 34:4