20
பாறையிலிருந்து தண்ணீர்
முதலாம் மாதத்தில் முழு இஸ்ரயேல் சமுதாயமும் சீன் பாலைவனத்தை அடைந்தது. அவர்கள் காதேசில் தங்கினார்கள். அங்கே மிரியாம் இறந்து, அடக்கம்பண்ணப்பட்டாள்.
இஸ்ரயேல் சமுதாயத்தினருக்கு அங்கே தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே மக்கள் மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாக ஒன்றுகூடினார்கள். அவர்கள் மோசேயுடன் வாக்குவாதம்பண்ணிச் சொன்னதாவது, “எங்கள் சகோதரர்கள் யெகோவா முன்பாக செத்து விழுந்தபோது நாங்களும் செத்திருக்கலாமே! நாங்களும், எங்கள் கால்நடைகளும் சாகும்படியாக நீ ஏன் யெகோவாவின் மக்களை இந்தப் பாலைவனத்திற்குக் கொண்டுவந்தாய்? நீ ஏன் எங்களை எகிப்திலிருந்து வெளியே, இந்த அவலம் நிறைந்த இடத்திற்குக் கொண்டுவந்தாய்? இங்கே தானியமோ, அத்திப்பழங்களோ, திராட்சைக்கொடிகளோ, மாதுளம்பழங்களோ இல்லை. குடிப்பதற்குத் தண்ணீரும் இல்லை” என்றார்கள்.
அதைக்கேட்ட மோசேயும், ஆரோனும் மக்கள் கூட்டத்தைவிட்டு சபைக் கூடாரவாசலுக்கு வந்து முகங்குப்புற விழுந்தார்கள், அவ்வேளையில் யெகோவாவினுடைய மகிமை அவர்கள்முன் தோன்றியது. யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ கோலை எடுத்துக்கொள். நீயும், உன் சகோதரன் ஆரோனும் மக்கள் சபையை ஒன்றுகூட்டுங்கள். அவர்கள் கண்களுக்கு முன்பாக நீ அக்கற்பாறையைப் பார்த்து பேசு. அதிலிருந்து அதன் தண்ணீர் பொங்கிவரும். நீ கற்பாறையிலிருந்து இந்த மக்கள் சமுதாயத்திற்குத் தண்ணீரை வரப்பண்ணுவாய். அவர்களும் அவர்களுடைய மிருகங்களும் குடிப்பார்கள்” என்றார்.
யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அவர் முன்னிருந்த கோலை எடுத்தான். 10 அவனும், ஆரோனும் கற்பாறைக்கு முன்பாக மக்கள் சபையை ஒன்றுகூட்டினார்கள். மோசே அவர்களிடம், “கலகக்காரரே, கேளுங்கள், இந்தக் கற்பாறையிலிருந்து நாங்கள் உங்களுக்குத் தண்ணீரை வரப்பண்ணவேண்டுமோ?” என்று கேட்டான். 11 பின்பு மோசே தன் கையை உயர்த்தி, தனது கோலினால் கற்பாறையை இரண்டுமுறை அடித்தான். அப்பொழுது தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்து வந்தது. மக்கள் கூட்டத்தினர் தாங்களும் குடித்து, தங்கள் வளர்ப்பு மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுத்தார்கள்.
12 ஆனால் யெகோவா மோசேயிடமும், ஆரோனிடமும் சொன்னதாவது, “நீங்கள் என்னைக் கனம்பண்ணும் அளவுக்கு என்னில் நம்பிக்கை வைக்கவில்லை. இஸ்ரயேலருக்கு முன்பாக என்னைப் பரிசுத்த இறைவனாகக் கனம்பண்ணவில்லை. எனவே நான் இந்த சமுதாயத்திற்குக் கொடுக்கும் நாட்டிற்கு நீங்கள் அவர்களைக் கொண்டுபோகமாட்டீர்கள்” என்றார்.
13 அவ்விடத்தில் இஸ்ரயேலர் யெகோவாவுடன் வாக்குவாதப்பட்டதாலும், அவர் தம்மை பரிசுத்தராகக் காண்பித்ததாலும், அது மேரிபாவின்* தண்ணீர் எனப்பட்டது.
ஏதோம் இஸ்ரயேலுக்கு வழியை மறுத்தல்
14 பின்பு மோசே காதேசிலிருந்து தூதுவர்களை ஏதோம் அரசனிடம் அனுப்பி:
“உமது சகோதரனான இஸ்ரயேல் சொல்வதாவது, எங்களுக்கு நேரிட்ட கஷ்டங்களையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். 15 எங்கள் முற்பிதாக்கள் எகிப்திற்குப் போனார்கள். நாங்களும் பல ஆண்டுகள் அங்கே குடியிருந்தோம். எகிப்தியர் எங்களையும், எங்கள் முற்பிதாக்களையும் துன்புறுத்தினார்கள். 16 ஆனாலும் நாங்கள் யெகோவாவிடம் அழுதபோது அவர் எங்கள் அழுகையைக் கேட்டு, ஒரு தூதனை அனுப்பி எங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்.
“இப்போது நாங்கள் உமது பிரதேசத்தின் எல்லையிலுள்ள காதேஸ் என்னும் பட்டணத்தில் இருக்கிறோம். 17 தயவுசெய்து உமது நாட்டின் வழியாகக் கடந்துசெல்ல எங்களை அனுமதியும். நாங்கள் எந்தவொரு வயலின் வழியாகவோ, திராட்சைத் தோட்டத்தின் வழியாகவோ செல்லமாட்டோம். எந்தவொரு கிணற்றிலிருந்து தண்ணீர் குடிக்கவுமாட்டோம்; நாங்கள் அரசனின் பெருந்தெருவழியாகவே போவோம். உமது நாட்டைக் கடந்து முடிக்கும்வரை வலதுபக்கமோ, இடது பக்கமோ திரும்பமாட்டோம் என்று சொல்லுங்கள்” என்றான்.
18 அவ்வாறே அவர்கள் சொன்னபோது, ஏதோம் பதிலாக,
“நீங்கள் நாட்டின் வழியாகக் கடந்துபோக முடியாது. அப்படிப்போக முயற்சித்தால், நாங்கள் அணிவகுத்து வந்து உங்களை வாளினால் தாக்குவோம்” என்றான்.
19 திரும்பவும் இஸ்ரயேலர் அவனிடம்:
“நாங்கள் உமது பிரதான வீதியிலே மாத்திரம் போவோம். நாங்களோ, எங்கள் வளர்ப்பு மிருகங்களோ உங்கள் தண்ணீரைக் குடித்தால் அதற்குரிய பணத்தை நாங்கள் தருவோம். நாங்கள் எங்கள் கால்களால் நடந்து உமது நாட்டைக் கடந்துசெல்ல மட்டும் விரும்புகிறோமே தவிர வேறோன்றும் இல்லை” என்றார்கள்.
20 அதற்கு அவன்:
“நீங்கள் என் நாட்டின் வழியாகக் கடந்துசெல்லவே முடியாது” என்று பதிலளித்தான்.
பின்பு ஏதோம் அவர்களுக்கு எதிராகப் பெரிதும் வலிமையுமான படையுடன் புறப்பட்டு வந்தான். 21 ஏதோமியர் இஸ்ரயேலரைத் தங்கள் பிரதேசத்தின் வழியாகக் கடந்துபோகவிட மறுத்தபடியால், இஸ்ரயேலர் அங்கிருந்து திரும்பிப் போனார்கள்.
ஆரோனின் மரணம்
22 முழு இஸ்ரயேல் சமுதாயமும் காதேஸை விட்டுப் புறப்பட்டு ஓர் என்னும் மலைக்கு வந்து சேர்ந்தார்கள். 23 ஏதோமின் எல்லைக்கு அருகிலுள்ள ஓர் என்னும் மலையிலே யெகோவா மோசேக்கும், ஆரோனுக்கும் சொன்னதாவது, 24 “ஆரோன் தன் முன்னோர்களுடன் சேர்க்கப்படப்போகிறான். நான் இஸ்ரயேலருக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் அவன் போவதில்லை. ஏனெனில் நீங்கள் இருவரும் மேரிபாவின் தண்ணீரண்டையில் எனது கட்டளைக்கு எதிராகக் கலகம் பண்ணினீர்கள். 25 ஆகையால் நீ ஆரோனையும், அவன் மகன் எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு ஓர் மலைக்கு வா. 26 அங்கே ஆரோனின் உடைகளைக் கழற்றி அவன் மகன் எலெயாசாருக்கு உடுத்து. ஏனெனில் ஆரோன் அங்கே இறந்து தன் முன்னோர்களுடன் சேர்க்கப்படுவான்” என்றார்.
27 யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான். மக்கள் கூட்டம் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கையில் அவர்கள் ஓர் என்னும் மலைக்குப் போனார்கள். 28 அங்கே மோசே ஆரோனின் உடைகளைக் கழற்றி, அவன் மகன் எலெயாசாருக்கு உடுத்தினான். அங்கே அந்த மலை உச்சியில் ஆரோன் இறந்தான். மோசேயும், எலெயாசாரும் கீழே இறங்கிவந்தார்கள். 29 முழு இஸ்ரயேல் சமுதாயமும் ஆரோன் இறந்துவிட்டதை அறிந்தபோது, அவனுக்காக அழுது முப்பது நாட்கள் துக்கங்கொண்டாடினார்கள்.
* 20:13 20:13 மேரிபாவின் அல்லது வாதாடுதல்