3
ஞானம் நல்வாழ்வை அளிக்கிறது
என் மகனே, என் போதனைகளை மறவாதே,
என் கட்டளைகளை உன் இருதயத்தில் வைத்துக்கொள்.
அவை உனக்கு நீண்ட ஆயுளையும்,
சமாதான வாழ்வையும் கொண்டுவரும்.
 
அன்பும் உண்மையும் உன்னைவிட்டு ஒருபோதும் விலகாதிருப்பதாக;
அவற்றை உன் கழுத்திலே அணிந்து,
உன் இருதயத்தில் எழுதி வைத்துக்கொள்.
அப்பொழுது நீ இறைவனின் பார்வையிலும்
மனிதனின் பார்வையிலும் தயவையும் நற்பெயரையும் பெறுவாய்.
 
உன் முழு இருதயத்தோடும் யெகோவாவிடம் நம்பிக்கைவை,
உன் சொந்த அறிவை மட்டுமே சார்ந்திராதே.
நீ செய்யும் எல்லாவற்றிலும் யெகோவாவுக்கே அடங்கியிரு,
அவர் உன்னை சரியான பாதையில் நடத்துவார்.
 
உன்னை ஞானியென்று என்று நீயே எண்ணிக்கொள்ளாதே;
யெகோவாவுக்குப் பயந்து தீமையைவிட்டு விலகு.
அது உன் உடலுக்கு சுகத்தையும்,
உனது எலும்புகளுக்கு ஊட்டத்தையும் கொடுக்கும்.
 
நீ உன் செல்வத்தினாலும்,
உனது எல்லா விளைச்சலின் முதற்பலனினாலும் யெகோவாவைக் கனம்பண்ணு.
10 அப்பொழுது தானியத்தால் உன் களஞ்சியங்கள் நிரம்பியிருக்கும்;
திராட்சை இரசத்தினால் உன் தொட்டிகள் நிரம்பிவழியும்.
 
11 என் மகனே, யெகோவாவினுடைய கண்டிப்பைத் தள்ளிவிடாதே;
அவர் கடிந்துகொள்ளும்போது கோபங்கொள்ளாதே.
12 ஏனெனில் ஒரு தகப்பன் தனது அருமை மகனை கண்டித்துத் திருத்துவதுபோல்,
யெகோவா யாரை நேசிக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார்.
 
13 ஞானத்தை அடைகிறவர்களும்,
புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்கிறவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
14 ஏனெனில் ஞானம் வெள்ளியைவிட மேலானது,
தங்கத்தைவிடப் பயனுள்ளது.
15 அது பவளங்களைவிட பெருமதிப்புள்ளது;
நீ விரும்புகிற எதற்கும் அது நிகரல்ல.
16 அதின் வலதுகையில் நீண்ட ஆயுளும் இருக்கிறது;
அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கின்றன.
17 அதின் வழிகள் இன்பமானது;
அதின் பாதைகள் எல்லாம் சமாதானமானவை.
18 அதை அணைத்துக் கொள்கிறவர்களுக்கு அது வாழ்வு கொடுக்கும் மரம்,
அதனைப் பற்றிக்கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
 
19 யெகோவா ஞானத்தினால் பூமிக்கு அஸ்திபாரமிட்டார்,
அவருடைய புரிந்துகொள்ளுதலினால் வானங்களை அமைத்தார்;
20 அவருடைய அறிவினால் ஆழங்கள் பிரிக்கப்பட்டன,
மேகங்கள் பனித்துளியை விழப்பண்ணின.
 
21 என் மகனே, ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் உன் பார்வையிலிருந்து விலகவிடாதே,
சரியான நிதானிப்பையும் அறிவுடைமையையும் காத்துக்கொள்.
22 அவை உனக்கு வாழ்வாகவும்,
உன் கழுத்துக்கு அலங்காரமாகவும் இருக்கும்.
23 அப்பொழுது நீ உன் வழியில் பாதுகாப்புடன் போவாய்;
உன் கால்களும் இடறாது.
24 நீ படுத்திருக்கும்போது பயப்படமாட்டாய்;
நீ படுக்கும்போது உன் நித்திரை இன்பமாக இருக்கும்.
25 திடீரென வரும் பேராபத்திற்கும்
கொடியவர்கள்மேல் வரும் அழிவுக்கும் நீ பயப்படவேண்டாம்.
26 யெகோவா உனது நம்பிக்கையாயிருப்பார்;
அவர் உன் கால் இடறாமல் காப்பார்.
 
27 நன்மைசெய்ய உன்னால் இயலும்போது,
அதை பெறத்தக்கவர்களுக்கு கொடுக்காமல் விடாதே.
28 உன்னிடம் இருக்கும்போதே,
உன் அயலவனிடம்,
“போய்வா; நாளைக்கு உனக்குத் தருவேன்” எனச் சொல்லாதே.
29 உன் அருகே நம்பிக்கையுடன் வாழும்
அயலவனுக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்யாதே.
30 ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதபோது
காரணம் இல்லாமல் அவர்கள்மேல் குற்றம் சாட்டாதே.
 
31 வன்முறையாளர்மேல் பொறாமை கொள்ளாதே;
அவர்களுடைய வழிகளில் எதையும் தெரிந்தெடுக்காதே.
 
32 ஏனெனில் நேர்மையற்றவர்களை யெகோவா அருவருக்கிறார்;
ஆனால் நீதிமான்கள்மேல் தனது நம்பிக்கையை வைத்திருக்கிறார்.
33 கொடியவர்களின் வீட்டின்மேல் யெகோவாவின் சாபம் இருக்கும்,
ஆனால் நீதிமான்களுடைய வீட்டிலோ, அவருடைய ஆசீர்வாதம் இருக்கும்.
34 பெருமைகொண்ட பரியாசக்காரர்களை யெகோவா ஏளனம் செய்கிறார்;
ஆனால் தாழ்மையுள்ளவர்களுக்கோ, கிருபையைக் கொடுக்கிறார்.
35 ஞானிகள் மதிப்பைப் பெறுவார்கள்;
மூடர்கள் வெட்கப்படுவார்கள்.