5
விபசாரத்தைக் குறித்து எச்சரிக்கை
என் மகனே, என் ஞானத்தைக் கவனத்தில்கொள்,
எனது புத்திமதிகளை மிகக் கவனமாகக் கேள்.
அப்பொழுது அறிவுடைமையுடன் நடந்துகொள்வாய்;
உன் உதடுகள் அறிவைப் பாதுகாக்கும்.
ஏனெனில் விபசாரியின் உதடுகள் தேனைச் சிந்தும்,
அவளுடைய பேச்சு எண்ணெயைவிட மிருதுவாயிருக்கும்;
ஆனால் முடிவோ, அவள் வேம்பைப்போல் கசப்பாயும்,
இருபக்கமும் கூர்மையுள்ள வாளைப்போலவும் இருப்பாள்.
அவளுடைய பாதங்கள் மரணத்திற்குச் செல்கின்றன;
அவள் காலடிகளோ நேரே பாதாளத்திற்கு வழிநடத்துகின்றன.
அவளோ வாழ்வின் வழியைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை,
அவளுடைய பாதைகள் கோணலானவை, அவள் அதை அறியாதிருக்கிறாள்.
 
ஆகவே என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்;
நான் சொல்வதைவிட்டு விலகவேண்டாம்.
அவளுக்குத் தூரமான வழியில் நடங்கள்,
அவளுடைய வீட்டின் வாசலையும் மிதிக்கவேண்டாம்.
இல்லையென்றால், உங்களுடைய கனத்தை மற்றவர்களிடமும்
உங்களுடைய வாழ்நாட்களை கொடூரர்களிடமும் இழந்துவிடுவீர்கள்;
10 வேறுநாட்டைச் சேர்ந்தவர் உங்கள் செல்வத்தை அனுபவிப்பார்கள்,
உங்களுடைய கடும் உழைப்பு இன்னொருவனின் வீட்டைச் செல்வச் சிறப்பாக்கும்.
11 உங்களுடைய வாழ்க்கையின் முடிவில்,
உங்கள் தசையும் உடலும் நலியும்போது வேதனையால் புலம்புவீர்கள்.
12 அப்பொழுது நீங்கள், “ஐயோ, நான் அறிவுரையை வெறுத்தேனே,
திருத்தத்தை எனது இருதயம் அலட்சியம் செய்ததே!
13 நான் எனக்கு போதித்தவர்களுக்குக் கீழ்ப்படியவில்லையே,
எனக்கு அறிவுரை சொன்னவர்களுக்கு செவிகொடுக்கவில்லையே.
14 நான் இறைவனின் மக்கள் கூட்டத்தில்
தீராத பிரச்சனைக்குள்ளாகி விட்டேனே” என்று சொல்வீர்கள்.
 
15 நீ உனது சொந்தக் கிணற்றின் தண்ணீரையே குடி,
நீ உனது சொந்த நீரூற்றிலிருந்தே தண்ணீரைப் பருகு.
16 உனது ஊற்றுகள் வீதிகளில் வழிந்தோட வேண்டுமோ?
உனது நீரோடைகள் பொது இடங்களில் ஓடவேண்டுமோ?
17 அவை உன்னுடையவைகளாக மட்டுமே இருக்கட்டும்,
அவற்றை அறியாதவருடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
18 உனது ஊற்று ஆசீர்வதிக்கப்படுவதாக,
நீ உனது வாலிப காலத்தின் மனைவியுடன் மகிழ்ந்திருப்பாயாக.
19 அவள் உனக்கு அன்பான பெண்மான் போலவும் அழகியமான் போலவும் இருப்பாளாக,
அவளுடைய மார்பகங்களே எந்நாளும் உன்னைத் திருப்தியாக்கட்டும்;
அவளுடைய அன்பினால் நீ எப்பொழுதும் கவரப்படுவாயாக.
20 என் மகனே, ஒரு விபசாரியினால் நீ ஏன் கவரப்படவேண்டும்?
இன்னொருவனின் மனைவியின் மார்பை நீ ஏன் தழுவவேண்டும்?
 
21 மனிதரின் வழிகள் எல்லாம் யெகோவாவுக்குமுன் வெளியரங்கமாய் இருக்கின்றன,
அவர்களுடைய பாதைகளை எல்லாம் அவர் ஆராய்ந்து பார்க்கிறார்.
22 கொடியவர்கள் தம்முடைய தீயசெயல்களாலே அகப்படுகிறார்கள்;
அவர்களுடைய பாவக்கயிறுகள் அவர்களை இறுக்கிக் கட்டுகின்றன.
23 அவர்கள் நற்கட்டுப்பாடு இல்லாததினால் சாவார்கள்,
அவர்களுடைய மூடத்தனத்தின் மிகுதியினால் வழிவிலகிப் போவார்கள்.