12
தாவீதுடன் வீரர்
தாவீது கீஷின் மகன் சவுலினால் துரத்தப்பட்டு, சிக்லாத் என்னுமிடத்தில் ஒளித்திருந்தபோது யுத்தத்தில் அவனுக்கு உதவிசெய்ய வந்த வீரர்கள் இவர்களே. இவர்கள் வில்வீரராயும், வலதுகையாலும் இடதுகையாலும் அம்பையும் கவணையும் எறிவதற்கு ஆற்றல் உள்ளவர்களாயும் இருந்தனர். இவர்கள் பென்யமீன் கோத்திரத்தானான சவுலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்:
 
அகிசேயர் என்னும் தலைவனும் யோவாஸும் கிபேயா ஊரைச்சேர்ந்த சேமாவின் மகன்கள்;
அஸ்மாவேத்தின் மகன்கள் எசியேலும் பெலெத்தும்;
பெராக்கா, ஆனதோத்தியனான ஏகூ, முப்பதுபேரில் ஆற்றல்மிக்கவனும் முப்பதுபேருக்குத் தலைவனுமான கிபியோனியனான இஸ்மாயா,
எரேமியா, யகாசியேல், யோகனான், கெதேரூரைச் சேர்ந்த யோசபாத், எலுசாயி, எரிமோத், பிகலியா, ஷெமரியா அருப்பியனான செபத்தியா,
எல்க்கானா, இஷியா, அசாரியேல், யொவேசேர், கோராகியரைச் சேர்ந்த யாஷோபியாம்,
கேதோர் ஊரைச்சேர்ந்த எரோகாமின் மகன்கள் யொயேலா செபதியா என்பவர்கள்.
 
அதோடு பாலைவனத்தில் அரணான இடத்தில் இருந்த தாவீதிடம் சில காத்தியர்கள் வந்தார்கள். இவர்கள் ஆற்றல்மிக்க போர்வீரரும், சண்டையிடப் பயிற்றுவிக்கப்பட்டவர்களும், கேடயமும் ஈட்டியும் பயன்படுத்தத் தெரிந்தவர்களுமாய் இருந்தார்கள். இவர்கள் சிங்கம் போன்ற முகத்தை உடையவர்களும் மலையில் வாழும் மானைப்போல் வேகமாக ஒடக்கூடியவர்களுமாவர். அவர்கள் பெயர்களாவன:
 
பிரதான தலைவனான எத்சேர்,
இரண்டாவது ஒபதியா, மூன்றாவது எலியாப்,
10 நான்காவது மிஸ்மன்னா, ஐந்தாவது எரேமியா,
11 ஆறாவது அத்தாயி, ஏழாவது எலியேல்,
12 எட்டாவது யோகனான், ஒன்பதாவது எல்சபாத்,
13 பத்தாவது எரேமியா, பதினோராவது மக்பன்னாயி.
 
14 காத்தியரான இவர்கள் படைத்தளபதிகளாய் இருந்தவர்கள்; இவர்களில் சிறியவன் நூறுபேருக்கும், பெரியவன் ஆயிரம்பேருக்கும் நிகராயிருந்தான். 15 யோர்தான் நதிக்கரை புரண்டோடும் முதலாம் மாதத்தில் அதைக் கடந்துவந்து, மேற்கிலும் கிழக்கிலும் பள்ளத்தாக்குகளிலும் வாழ்ந்துவந்த யாவரையும் துரத்திவிட்டவர்கள் இவர்களே.
16 பென்யமீன் மக்களிலிருந்தும், யூதா மக்களிலிருந்தும் சிலர் அரணான இடத்தில் இருந்த தாவீதிடம் வந்தனர். 17 தாவீது வெளியில் வந்து அவர்களைச் சந்தித்து அவர்களிடம், “நீங்கள் எனக்கு உதவி செய்வதற்காக சமாதானத்துடன் வந்தீர்களானால் நான் உங்களுடன் சேர ஆயத்தமாயிருக்கிறேன். ஆனால் நான் வன்செயல்களில் இருந்து விலகியிருக்கும்போது, என்னை என் எதிரிகளிடம் காட்டிக்கொடுக்க வந்தால், நம்முடைய முற்பிதாக்களின் இறைவன் அதைப் பார்த்து உங்களை நியாயந்தீர்பாராக” என்றான்.
18 அப்பொழுது முப்பதுபேரில் ஒருவனும் தலைவர்களில் ஒருவனுமான அமசாயிற்கு இறைவனின் ஆவியானவர் வந்ததினால் அவன் சொன்னதாவது:
“தாவீதே, நாங்கள் உன்னுடையவர்கள்;
ஈசாயின் மகனே, நாங்கள் உன்னுடனே இருக்கிறோம்.
வெற்றி! உனக்கே வெற்றி!
உனக்கு உதவி செய்பவர்களுக்கும் வெற்றி!
உனது இறைவன் உனக்கு உதவி செய்வார்.”
எனவே தாவீது அவர்களை ஏற்றுக்கொண்டு தன் அதிரடிப் படைகளுக்கு தலைவர்களாக்கினான்.
19 தாவீது பெலிஸ்தியருடன் சேர்ந்து சவுலுக்கெதிராகச் சண்டையிடப் போகையில், மனாசேயின் மனிதர்களில் சிலரும் வந்து சேர்ந்துகொண்டார்கள். ஆனால் தாவீதும் அவனுடைய மனிதரும் பெலிஸ்தியருக்கு உதவிசெய்யவில்லை. ஏனெனில் பெலிஸ்தியர்களின் தலைவர்கள் கலந்தாலோசித்து தங்களிடமிருந்து தாவீதை அனுப்பிவிட்டார்கள். “தாவீது தமது தலைவன் சவுலுடன் சேர்ந்துகொண்டால், நமது உயிருக்குத்தான் ஆபத்து” என எண்ணியே அப்படிச் செய்தார்கள். 20 பின்பு தாவீது சிக்லாசுக்குப் போகையில் மனாசேயைவிட்டு அவனுடன் சேர்ந்துகொண்ட மனாசேயின் மனிதர்கள்: அத்னாக், யோசபாத், எதியாயேல், மிகாயேல், யோசபாத், எலிகூ, சில்தாய் என்பவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் மனாசேயில் ஆயிரம்பேருக்குத் தலைவர்களாயிருந்தனர். 21 அவர்களோ எதிரிகளான அதிரடிப் படைகளைத் தாக்குவதற்கு தாவீதுக்கு உதவி செய்தார்கள். அவர்கள் எல்லோரும் தைரியமிக்க வீரர்களும் அவர்களுடைய படையில் தளபதிகளாயும் இருந்தார்கள். 22 இவ்வாறு தாவீதின் இராணுவம் இறைவனின் இராணுவத்தைப் போன்று மகா பெரிய இராணுவமாகும் வரைக்கும், நாளுக்குநாள் மனிதர்கள் வந்துசேர்ந்து தாவீதுக்கு உதவினார்கள்.
மற்றவர்கள் எப்ரோனில் தாவீதுடன் சேருதல்
23 யெகோவா சொன்னபடி சவுலின் அரசாட்சியை தாவீதுக்கு கொடுப்பதற்காக, எப்ரோனில் இருந்த தாவீதிடம் வந்த இராணுவவீரர்களின் எண்ணிக்கைகள்:
 
24 யூதாவின் மனிதரில் கேடயமும் ஈட்டியும் பிடித்து, போருக்கு வந்தவர்கள் 6,800 பேர்;
25 சிமியோனின் மனிதரில் போருக்கு ஆயத்தமாக வந்த வீரர்கள் 7,100 பேர்.
26 லேவியரின் மனிதரில் 4,600 பேர். 27 இவர்களுடன் ஆரோன் குடும்பத்தின் தலைவனான யோய்தாவோடு சேர்த்து 3,700 மனிதர்கள் ஆவர். 28 அதோடு சாதோக் என்னும் வலிமைமிக்க வாலிபனான வீரனும், அவனுடைய குடும்பத்தைச் சேர்ந்த இருபத்திரண்டு அதிகாரிகளும் ஆவர்.
29 பென்யமீனியரில் சவுலின் குடும்பத்தில் 3,000 மனிதர்கள். அவர்களில் பலர் அதுவரை சவுலின் குடும்பத்திற்கே உண்மையாயிருந்தனர்.
30 எப்பிராயீமின் மனிதரில் வலிமைமிக்க வீரர்களும், தங்கள் சொந்த வம்சத்தில் புகழ் பெற்றவர்களும் 20,800 பேர்.
31 மனாசேயின் பாதிக்கோத்திரத்து மனிதரில் தாவீதை அரசனாக்குவதற்கு வரும்படி பெயர் குறிக்கப்பட்டவர்கள் 18,000 பேர்.
32 இசக்காரின் மனிதரிலிருந்து வந்த தலைவர்கள் 200 பேர். அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த உறவினருடன் வந்தார்கள். அவர்கள் காலத்தை விளங்கி இஸ்ரயேல் மக்கள் எதைச் செய்யவேண்டும் என்பதையும் அறிந்திருந்தனர்.
33 செபுலோன் மனிதர்களில் போருக்கு ஆயத்தமாக எல்லாவித ஆயுதங்களையும் உபயோகித்து, அணிவகுத்து நிற்க அனுபவம் பெற்றிருந்தவர்களும், அரசன் தாவீதுக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தவர்களும் 50,000 பேர்.
34 நப்தலியின் மனிதரில் 1,000 அதிகாரிகளும், அவர்களுடன் கேடயமும் ஈட்டியும் வைத்திருக்கும் 37,000 பேரும்,
35 தாண் மனிதரில் போருக்கு ஆயத்தமாய் இருந்தவர்கள் 28,600 பேர்,
36 ஆசேரின் மனிதர்களில் அனுபவம் வாய்ந்த போர்வீரர்களும், போருக்கு ஆயத்தமாக இருந்தவர்களும் 40,000 பேர்.
37 யோர்தானுக்குக் கிழக்கே ரூபன், காத், மனாசேயின் பாதிக்கோத்திரத்து மனிதரில் எல்லாவித ஆயுதங்களையும் தாங்கியவர்கள் 1,20,000 பேர்.
 
38 இவர்கள் எல்லோரும் தாவீதின் படையில் பணிசெய்ய தாமாகவே முன்வந்த இராணுவவீரர்கள்.
 
இவர்கள் தாவீதை முழு இஸ்ரயேலரின் அரசனாக்குவதற்காக முழுமனதுடன் எப்ரோனுக்கு வந்தவர்கள். மற்ற இஸ்ரயேல் மக்களும் தாவீதை அரசனாக்குவதற்கு ஒரே மனதுடையவர்களாயிருந்தனர். 39 அந்த மனிதர்கள் தாவீதுடன் தங்கி மூன்று நாட்களுக்கு சாப்பிட்டுக் குடித்தனர். அவர்களின் குடும்பத்தினர்களே தேவையான பொருட்களை ஆயத்தம் செய்திருந்தனர். 40 அதோடு தூரத்திலிருந்து இசக்கார், செபுலோன், நப்தலி மக்களும் கழுதைகள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள், மாடுகள்மேல் உணவு வகைகளை எல்லாம் ஏற்றிக்கொண்டு வந்தனர். மாவு, அத்திப்பழ அடைகள், கொடிமுந்திரிகை வற்றல்கள், திராட்சை இரசம், எண்ணெய் போன்ற உணவு வகைகளுடன் ஆடுமாடுகள், செம்மறியாடுகளும் அதிகமாகக் கொண்டுவரப்பட்டன. அதனால் இஸ்ரயேலில் மகிழ்ச்சியுண்டாயிற்று.