20
ரப்பாவைப் பிடித்தல்
அரசர்கள் போருக்குச் செல்லும் வசந்தகாலத்தில் யோவாப் தனது ஆயுதம் தாங்கிய படைக்குத் தலைமை தாங்கிச் சென்றான். அவன் அம்மோனியரின் நாட்டை பாழாக்கி ரப்பாவுக்குச் சென்று அதை முற்றுகையிட்டான். ஆனால் தாவீது எருசலேமில் இருந்து விட்டான். யோவாப் ரப்பாவைத் தாக்கி அதைப் பாழிடமாக்கினான். அவர்களுடைய அரசனின் தலையில் இருந்த கிரீடத்தைத் தாவீது எடுத்துப்போட்டான். அது ஒரு தாலந்து எடையுள்ள தங்கமும், விலையுயர்ந்த மாணிக்கக் கற்களும் பதிக்கப்பட்டதாய் இருந்தது. அது தாவீதின் தலையில் வைக்கப்பட்டது. பட்டணத்திலிருந்து பெருந்தொகையான கொள்ளைப்பொருட்களையும் அவன் கொண்டுவந்தான். அவன் அங்கிருந்த மக்களை வெளியே கொண்டுவந்து, அவர்களை வாள்கள், இரும்பு ஆயுதங்கள், கோடரிகள் முதலியவற்றால் வேலைசெய்வதற்கு நியமித்தான். இவ்வாறே தாவீது அம்மோனியரின் எல்லா பட்டணங்களுக்கும் செய்தான். பின்பு தாவீதும் அவனுடைய எல்லாப் படைவீரர்களும் எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
பெலிஸ்தியருடன் யுத்தம்
சில காலத்திற்குபின் கேசேரில் பெலிஸ்தியருடன் யுத்தம் தொடங்கியது; அந்நேரத்தில் ஊஷாத்தியனான சிபெக்காய், அரக்கனான ரெப்பாயீமின் வழித்தோன்றலில் வந்த சிப்பாயி என்பவனைக் கொன்றான். பெலிஸ்தியர்கள் கீழ்படுத்தப்பட்டார்கள்.
பெலிஸ்தியருடன் மூண்ட இன்னுமொரு யுத்தத்தில் யாயீரின் மகன் எல்க்கானான், கித்தியனாகிய கோலியாத்தின் சகோதரன் லாகேமியைக் கொலைசெய்தான். லாகேமி வைத்திருந்த ஈட்டியின் பிடியானது நெசவாளர்களின் தடியைப் போலிருந்தது.
அதன்பின்பு காத் என்னுமிடத்திலும் இன்னுமொரு யுத்தம் மூண்டது. அங்கே மிகப்பெரிய மனிதன் ஒருவன் இருந்தான். அவனுடைய கைகளிலும், கால்களிலும் ஆறு, ஆறு விரல்களாக மொத்தம் இருபத்து நாலு விரல்கள் இருந்தன. அவனும் ரப்பாவின் அரக்க சந்ததியைச் சேர்ந்தவன். இவன் இஸ்ரயேலை நிந்தித்தபோது, தாவீதின் சகோதரனான சிமெயாவின் மகன் யோனத்தான் அவனைக் கொலைசெய்தான்.
இவர்களும் காத் என்னும் இடத்தில் இருந்த ரப்பாவின் இராட்சத சந்ததியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தாவீதின் கையினாலும் அவனுடைய மனிதர்களின் கைகளினாலும் கொல்லப்பட்டார்கள்.